Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஏன் வேண்டாம் இந்தி? – (10)

15 Jul 2019 10:36 amFeatured Posted by: Sadanandan

You already voted!
Paavalar Nellai Painthamizh, Why do not want Hindi

தமிழ் மொழி ஒழிப்பும் மறைப்பும் இன்றல்ல நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து நடந்து வருகின்றது.

இந்தியாவிலுள்ள மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி ஒன்றே. தமிழுக்கு மட்டுந்தான் ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியான இலக்கியங்களும், வரலாறும் உள்ளன. இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் சமசுகிருதம் கலந்துள்ளது. சமசுகிருதம் இல்லாமல் ஏனைய இந்திய மொழிகளால் இயங்கவே முடியாது. அதேவேளை மருந்துக்குக் கூட சமஸ்கிருத சொல் கலப்பில்லாமல் இயங்கக்கூடிய ஆற்றல் உண்டென்றால் அது தமிழ் மொழி ஒன்றுக்கு மட்டுந்தான் உண்டு.

எனவேதான் அவர்களால் அழிக்கப்பட வேண்டிய முதல் இலக்கு தமிழ் மொழியாக இருக்கின்றது. அதனால்தான் இந்தியாவில்‌ கண்டெடுக்கப்பட்ட 1,05,000 கல்வெட்டுகளில் 60,000 கல்வெட்டுகள் தமிழ் மொழியில் இருந்தும் அவற்றில் பாதி கூட இன்னும் இந்தியவரசால் படித்தறியப்படவில்லை.

அதனால்தான் மொகஞ்சதாரோ, அரப்பா பகுதியில் கிடைத்த தமிழரின் இடப இலச்சினையை (காளைச் சின்னம்) சமசுகிருத வாணவர்கள் அது காளை அல்ல குதிரை என மாற்றி பொய்யுரைத்தனர்.

அதனால்தான் ஆதிச்ச நல்லூரின் தொல்லியல் ஆய்வறிக்கையை இந்திய அரசு 16 ஆண்டுகளாக வெளியிடாமல் தடுத்து வைத்தது.

அதனால்தான் அரியானா மாநிலத்தின் ராக்கிகடி என்ற இடத்தில் கிடைத்த மனித எலும்புக் கூட்டின் ஆய்வறிக்கையை புனே பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. குப்தா இந்தியவரசுக்கு அளித்தும் அதை வெளியிடக் கூடாது என இந்திய அரசு தடுத்தது. காரணம் அந்த எலும்புக் கூடு பழமையான தொல் தமிழரின் எலும்புக்கூடு என்பதால்.

கீழடியைத் தோண்டினால் கிடைப்பவை அத்தனையும் தமிழ் எழுத்துகளே என்பதால் அதையும் தோண்டாமல் முன்பு மூடிவைத்தனர்.

பூம்புகாரை தோண்டினால் அங்கும் தமிழே கிடைக்கின்றது. தெற்கே தோண்டினாலும் தமிழ்; வடக்கே தோண்டினாலும் தமிழ். தோண்டும் இடமெல்லாம் கிடைப்பன தமிழ், தமிழர் சான்றுகள். எனவேதான் அண்ணல் அம்பேத்கரும், மாண்புமிகு ஜோதிபாசு அவர்களும் கூறினார்கள் 'இந்தியாவிற்கு சொந்தம் கொண்டாட முடியும் என்றால் அந்தத் தகுதி தமிழர்களுக்கு மட்டுமே உண்டு' என்று.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனிய – பனியா – சங்பரிவார கும்பல்கள் அவ்வப்போது தங்கள் காழ்ப்புணர்வை, வன்மத்தை காட்டிக் கொண்டே வருகிறார்கள். அண்மையில் நடந்த நாடாளுமன்ற பதவியேற்பு விழாவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் வாழ்க! என்று கூறி பதவி ஏற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டம் 'பாரத் மாதாகி ஜே' என்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் கோசமிட்டனர்.

இந்திய மொழிகளில் 22 மொழிகளும் ஆட்சி மொழிகளாக அட்டவணையில் இருக்க தமிழ் மொழி வாழ்க என்று தமிழர் கூறினால், நாடாளுமன்ற அவைக்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற மத முழக்கம் ஏன் வந்தது. எனில் இவர்களின் திட்டம் என்ன?

அவர்கள் ஒன்றில் தெளிவாக இருக்கிறார்கள்; தமது திட்டங்கள் யாரால், எப்படி, எப்போது, எங்கு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களுக்குள்ளே சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.

இந்துத்துவச் சித்தாந்தைப் போதித்து தொண்டர்களை உருவாக்குவது ஆர்.எஸ்.எஸ்-சின் வேலை. அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது பாஜக-வின் வேலை. மடாதிபதிகள், மதத் தலைவர்கள், சன்யாசிகள், வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோரைத் திரட்டி வகுப்புவாத உணர்ச்சியூட்டுவது வி.எச்.பி-யின் வேலை. இதில் வி.எச்.பி. மட்டும் 18 பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. அந்த உட்பிரிவுகளில் சிலதான் அனுஸ்தான், தர்மபிரசார், ஆச்சார்யலிபாக், பார்வாசமானுயியா.

இவ்வமைப்புகளில் அனுஸ்தானின் வேலை பஜனைகள் கீர்த்தனைகளை கோவில்களில் ஏற்பாடு செய்வது. தர்மபிரச்சாரின் வேலை கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை இந்து மதத்துக்கு மாற்றுவது. ஆச்சார்யலிபாக்கின் வேலை பூசாரிகளுக்கு பயிற்சி தருவது. பார்வாசமானுயியாவின் வேலை இந்து மதத்துக்கு வெளியே உள்ள ஆரியசமாஜ், சீக்கிய அங்கங்கள், தாழ்த்தப்பட்டோர் குழுக்களை ஒருங்கிணைத்து விஸ்வ இந்துபரிஷத்தின் கீழ் கொண்டு வருவது.

பெண்கள் அமைப்பான 'இராஷ்ட்ரிய சேவிகா சமிதி' யின் வேலை இந்துத்துவக் கருத்துக்களை குடும்பங்களுக்குள் பரப்புதல். பஜ்ரங் தளத்தினரின் வேலை தெருக்களில் வன் முறையில் இறங்குதல். இன்னும் பல பெயர்களில் சங்பரிவாரங்கள் அமைப்புகளை துவக்கி கால் பரப்பியுள்ளனர்.

இவர்களின் பார்ப்பனிய பனியா தருமத்தை சூத்திரர்கள் மீதும் தலித்துகள் மீதும் திணிக்க வேண்டும். ஆனால் பட்டவர்த்தனமாக திணிக்க முடியாது. எனவே அவர்களையும் உள்ளடக்கிய ஒரு இந்து சமுதாயத்தை உருவாக்க வேண்டும். தலித்துகளும் பழங்குடியினரும் உள்ளடக்கிய இந்து சமுதாயத்திற்கு ஒரு பொது எதிரியை உருவாக்க வேண்டும். முஸ்லிம்கள்தான் அந்தப் பொது எதிரி. அவர்களை இன்று நேற்றல்ல ஆயிரம் ஆண்டுகளாகவே இந்துக்களை அடக்கி ஒடுக்கிவந்தவர்களாக காட்ட வேண்டும். தலித்துகள் உட்பட அனைத்து இந்துக்களும் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் அனைத்திற்கும் இந்தப் பொது எதிரியே காரணம் என்று காட்ட வரலாற்று நூல்கள் திருத்தி எழுதப்பட வேண்டும். அந்த எதிரியை அடக்க வேண்டும்; வெறுக்க வேண்டும்; வன்கொடுமைக்கு ஆளாக்க வேண்டும்! தனிமைப்படுத்த வேண்டும்; தனி குடியிருப்புகளில் வாழும்படி செய்ய வேண்டும் என்ற வெறிக் கூச்சலை காது கிழியும்படி எழுப்ப வேண்டும். எதற்காக இந்த வெறிக் கூச்சல் சாதிய ஒடுக்கு முறைக்கும், சமூக அநீதிக்கும், சுரண்டலுக்கும், ஆண் ஆதிக்கத்திற்கும் எதிராக எழுப்பப்படும் பல்வேறு போராட்ட குரல்களை கேட்கவே முடியாமல் செய்வதற்குத்தான் முஸ்லிம்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் ஏவி விடப்படும் பயங்கரவாதம். அதன் வழி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் அச்சுறுத்தி பணியை வைப்பதற்குத்தான்.

இவையெல்லாம் நடக்க வேண்டு மெனில் மதவெறியை, புராண-இதிகாச கதைகள் மூலம் தலையில் ஏற்றி விட வேண்டும். அதனால்தான் 'ஜெய் ஸ்ரீராம்' ஓங்கி ஒலிக்கிறது. அதனால் தான் சங்க காலத்தில் இல்லாத புராணக் கதைகள் தமிழகத்திற்குள் இன்று மலிந்து கிடக்கின்றன.

அதனால் தான் தமிழருக்கு தமிழ் மொழி பற்று இருக்க வேண்டியது போய் இன்று சாதிப் பற்றும் மதப் பற்றும் மேலோங்கி இருக்கின்றன. அதைத்தான் சங்பரிவாரங்களும் திட்டமிட்டபடி ஊதி-ஊதி வளர்க்கின்றன. அதனால்தான் பிள்ளையார் பால் குடித்தார் என்றும் திருப்பதியில் அம்மனுக்கு தாலி அவிழ்ந்து விட்டது என்றும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கர விழா என்றும் 44 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் வருகிறார் என்றும் அவ்வப்போது வதந்தியும் புரட்டையும் கட்டவிழ்த்து விட்டு தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்.

அவ்வாறு கட்டவிழ்த்துவிடும் பார்ப்பனியத்திற்கு நிலையான கொள்கை ஏதும் கிடையாது. அவர்களின் கொள்கை காலத்திற்கு, இடத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வந்திருக்கின்றது. வேதத்திலோ சிலை வணக்கம் கிடையாது, கோவில் வழிபாடும் கிடையாது. ஆனால் நடப்பிலோ இராமர் கோவில் கட்டவேண்டும் என்பர்; இராமர் சிலை நிறுவ வேண்டும் என்பர். ஒரு கடவுள் என்பர்; இல்லை இரண்டு கடவுள் என்பர்; இல்லை இல்லை யாவும் கடவுள் என்பர். வேதகாலத்தில் புலால் உண்டவர்கள் பின்பு புத்த, சமண மதத்தைப் பார்த்து மாற்றிக் கொண்டனர். முதலில் தம்மை ஆரியர் என்றனர் பின்பு இந்துகள் என்றனர். உழைக்கும் மக்களை சூத்திரன் என்றனர், சண்டாளன் என்றனர், தீண்டத்தகாதவன் என்றனர். பின்னர் இல்லை இல்லை நீங்களும் இந்துகளே என்றனர். காந்தியை கொன்ற கொலைகாரன் கோட்சே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவன் இல்லை என்றனர். பின்னர் அதே ஆர்.எஸ்.எஸ் கோட்சேவை தியாகி என்றனர். நேரத்துக்கு நேரம் மாறும் தன்மை உடையதுதான் பார்ப்பனியம். இந்தச் சூழ்ச்சியங்களை எல்லாம் அறிந்து பேசிய, எழுதிய நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் கல்புர்கி, பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் போன்றோர் மருமமான முறையில் கொல்லப்பட்டனர்.

அவர்கள் ஒருக்காலும் எதிர் நின்று போராடுவதில்லை; ஊடுருவி அழிப்பதே அவர்களின் கொள்கை. அது பண்பாடாயினும் சரி பாடத் திட்டமாயினும் சரி. அவ்வாறான மொழி வழி ஊடுருவலைத்தான் குஜராத்தில் அவர்கள் செய்தனர். என்ன செய்தனர்? ஏன் செய்தனர்?

- நெல்லைப் பைந்தமிழ்

தொடரும்………11

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 11
Total views : 410198
Who's Online : 0
Your IP Address : 3.21.158.148

Archives (முந்தைய செய்திகள்)