Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஏன் வேண்டாம் இந்தி? – (12)

17 Jul 2019 1:42 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
Paavalar Nellai Painthamizh, Why do not want Hindi

தமிழ் வட மொழி கலப்பு என்பது சங்ககாலத்தில் 3 விழுக்காட்டளவில் தொடங்கி கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பின் 50 விழுக்காடு என்ற நிலைக்கு மணிப்பிரவாளமாக உருவெடுத்தது. அதன்வழி திருப்புகழ், போன்ற பாடல்கள் எளிதில் பொருள் விளங்கா வண்ணம் எழுதப்பட்டன.

இவ்வாறு வேண்டாத அயற் சொற்கள் தமிழ் மொழியில் கலந்ததால்தான் இத்தாலியிலிருந்து வந்த பாசானி என்னும் பாரசீக மொழி அறிஞர் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ் பாரசீக மொழியிலிருந்து 200 சொற்களைக் கடன் கொண்டுள்ளது என்று தலைகீழ் ஆய்வுக் கட்டுரை ஒன்றை படித்துச் சென்றார்.

ஓர் இனத்தை அடிமைப் படுத்த வேண்டுமெனில் முதலில் அவர்களது மொழியைச் சிதைக்க வேண்டும். இது கடந்தகால வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். அதனால்தான் தமிழக ஊர்ப் பெயர்கள் எல்லாம் திட்டமிட்டே மாற்றப்பட்டன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு புராண, இதிகாசக் கதை கூறப்பட்டது.

வேங்கடம் திருப்பதி என்றும்
மரைக்காடு வேதாரணியம் என்றும்
தில்லை சிதம்பரம் என்றும்
திருச்சீர் அலைவாய் திருச்செந்தூர் என்றும்
குடந்தை கும்பகோணம் என்றும்
மயிலாடுதுறை மாயூரம் எனவும்
குரங்காடு துறை கபிஸ்தலம் என்றும்
தகடூர் தருமபுரி என்றும்
பழமலை விருத்தாச்சலம் என்றும்
குவளாலபுரம் கோலார் என்றும்
இளங்கோக்குடி அம்பாசமுத்திரம் என்றும்
திருவரங்கம் ஸ்ரீரங்கம் என்றும்
ஆவினன்குடி பழனி என்றும்
இன்னும் எத்தனையோ பெயர்கள் (விரிவஞ்சி தவிர்க்கப்படுகிறது) வட மொழி கதைகளுக்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டன.

பண்டைய தமிழக ஊர்ப் பெயர்களை இன்று ஆய்வு செய்துதான் தேடிப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஏன் இன்றும் கூட நடுவண் அரசு விண்வெளி ஓடங்களுக்கும் பட்டாள படைக்கு வாங்கும் கருவிகளுக்கும் வைக்கும் பெயர்கள் யாவும் அக்னி, அஸ்த்ரா, ப்ரித்வி, பிரம்மோஸ், பிரகார், சகாரிகா, தனுஷ், நாக், அர்ஜூன் என்று சமஸ்கிருத பெயர்களாகவே உள்ளன. அந்தப் பெயர்களெல்லாம் இராமாயண, மகாபாரத கதைகளை நினைவு படுத்துவதாகவே உள்ளன. அரசின் திட்டப் பணிக்காக வைக்கும் பெயர்கள் யாவும் வடமொழிப் பெயர்களே. ஏன் அரசால் ஏற்பிசைவு செய்யப்பட்ட 22 மொழிகள் இருக்க சமஸ்கிருதத்தில் மட்டும் ஏன் பெயர் வைக்க வேண்டும்? அனைத்து மொழிகளிலும் சுழற்சி முறையில் பெயர் சூட்டலாமே!

இவைமட்டுமா! சட்டப்படி மத சார்பற்றவராக செயல்பட வேண்டிய இந்திய பிரதமரோ வெளி நாட்டினருக்கு இந்து மத நூலான பகவத் கீதையைப் பரிசளிக்கிறார்.

பாரத மாதா என்று சொல்லப்படும் ஒரு கற்பனை உருவத்திற்குக் கூட காவி நிறமே ஆடையாக காட்டப்படுகின்றது. பாரதியாரின் தலைப்பாகை கூட அண்மையில் காவி நிறத்திற்கு மாற்றப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பு உலகத்தின் ஐந்தாவது மாசுபட்ட நீர் என்று கங்கை ஆற்றை அறிவித்த பின்பும் நடுவணரசு தன் அரசு இயந்திரத்தில் புனிதம் என்ற பெயரில் கங்கை ஆற்று நீரை விற்பனை செய்கின்றது. ஏன் ஏனைய ஆற்று நீர் எதுவும் புனிதம் இல்லையா? இவையெல்லாம் இயல்பாகவா நடக்கின்றது? திட்டமிட்டுத்தானே!

ஒரே மொழி ஒரே தேசம் ஒரே பண்பாடு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறுபவர்கள் ஏன் ஒரேசாதி என்று கூறுவதில்லை. கூறமாட்டார்கள் அவர்கள். அங்கேதான் பார்ப்பன பனியா சங்பரிவாரங்களின் சூழ்ச்சியம் இருக்கின்றது.

உழைக்கும் மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்வதற்கு சில காரணங்களும் வேண்டும். அதற்குப் பயன்படும் ஒற்றைச் சொல்தான் இந்து. அதை நிறுவுவதற்கு பரப்பப்படும் கதைகளை எடுத்து இயம்ப பயன்படும் மொழிதான் இந்தி. இந்தியிலும் வட மொழியிலும் தொன்மைகளைக் கூறும் சான்றுகள் தமிழைப் போல் ஏதும் இல்லாததால் புதிதாக வலிந்து உருவாக்குகிறார்கள். அதனால்தான் இராமர் கோவில், இராமர் பாலம், இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், பரசுராம அவதாரம், புராணம், இதிகாசம் போன்ற கதைகளை உருவாக்கி நம்பவைக்க முயல்கிறார்கள்.

இவற்றை எதிரில் நின்று தமிழ் மட்டுமே கேள்விக் கேட்கின்றது. பொறுக்க முடியாத சங்பரிவாரங்கள் வன்முறையைக் கட்டவிழ்க்கின்றது. முதலில் ஒரு கதையைக் கூறுவர் பின் அதையே வரலாறு என்பர். அதை யாவரையும் நம்ப வைப்பர். நம்பாதாரை நம்புவோரைக் கொண்டே தாக்கவைப்பர். பிளவை ஏற்படுத்துவர். பிளவின் ஊடே தாம் உயரச் செல்வர். உயரத்தில் நின்று அதிகாரம் செய்வர். பின் மீண்டும் ஆண்டான் அடிமை போக்குவரும். நீ சூத்திரன் என்பர். நீ சண்டாளன் என்பர். நீ தீண்டத்தகாதவன் என்பர். உன்னைப் பார்த்தால் தீட்டு என்பர். தொட்டால் தீட்டு. என்பர். காரணம் கடவுள் என்பர். சான்று வேத, சமஸ்கிருத சாத்திரம் என்பர். இவையாவும் நடந்திட முதலில் இந்தி வேண்டும் என்பர்.

இதை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிதாமகன் என்று போற்றப்படும் சித்பவன் பார்ப்பனரான கோல்வால்கரே தாம் எழுதிய Bunch of Thoughts என்ற நூலில் கூறுகிறார் 'தொடர்பு மொழி என்ற பிரச்சினைக்காக தீர்வு என்ற வகையில், சமஸ்கிருதம் அந்த இடத்தை பிடிக்கும் வரை, வசதியின் பொருட்டு இந்திக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனெனில் தென்னிந்திய மக்கள் வடவிந்திய மக்களைப் போலவே ஆரியர்களாகவே கருதப்பட்டு வந்துள்ளனர். இந்த திராவிட மொழிகளின் உயிர்ப்புக்கான மூலாதாரம், மொழிகளின் ராணியும் தேவர்களின் மொழியான சமஸ்கிருதம்தான்' என்று.

மேலும் ஞானகங்கை என்னும் நூலில் அவரே கூறுகிறார் " நமது தேசிய மொழிப் பிரச்சினைக்கு வழிகாணும் முறையில், சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறும் வரையில், சவுகரியத்தை ஒட்டி இந்தி மொழிக்கு அந்த இடத்தை நாம் தர வேண்டியிருக்கும். இந்திய மொழிகளில் அந்த விதமான அமைப்பு உடைய இந்தியைக் கைக்கொள்ள வேண்டும். எந்த இந்தி அமைப்பு மற்ற பாரதிய மொழிகளைப் போல் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியுள்ளதோ, வளர்ச்சி பெற்றுள்ளதோ அதைத்தான் இயற்கையாக நாம் விரும்புகிறோம்" என்று.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வால்கர் எவ்வளவு தெளிவாகக் கூறிவிட்டார்; சமஸ்கிருதத்தை புகுத்த வேண்டுமெனில் முதலில் இந்தியை புகுத்த வேண்டும் என்று! அதனால்தான் இன்றும் தொடர்ந்து இந்தியைப் புகுத்த எத்தனித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரை மொழி என்பது வெறும் ஒலி அல்ல. அது உடல் உணர்வு குருதி அனைத்திலும் பின்னிப் பிணைந்த வாழ்வியல். எனவேதான் உலகில் எந்த இனமும் செய்யாத 'தீக்குளித்தல்' என்ற ஒன்றை மொழிக்காக தமிழர்கள் செய்கிறார்கள்.

வடவர் மொழிவழி கூறும் புரட்டுக் கதைகளை தட்டிக் கேட்கும் இடத்தில் தமிழ் மொழியும் இனமும் இருக்கின்றன. எனவே தமிழர்களை அழிப்பது பார்ப்பனிய பனியா சங்பரிவாரங்களுக்கு தேவையான ஒன்றாய் இருக்கின்றது. அவர்களை ஈழத்தில் நடத்தியது போன்று பட்டவர்தனமாய் அழிக்க முடியாது. உலகத்தின் கண்களுக்கு தெரியாமலே தமிழர்கள் அழிக்கப்பட வேண்டும், சிதைக்கப்பட வேண்டும். அன்று சமஸ்கிருதத்தை புகுத்தி வடவிந்தியராய் மாற்றினர்; பின் தெலுங்கராய் கன்னடராய் மலையாளியாய் மாற்றினர். எஞ்சியிருக்கும் தமிழரையும் ஊடுருவி சிதைத்து விட்டால் பின் எக்காலத்திலும் எழ முடியாத திராணி அற்றவர்களாய் தமிழர்கள் சிறுசிறு குழுவாய் ஆகிவிடுவர்.

அதற்காகத்தான் தமிழக நிலங்கள் திட்டமிட்டே பாழ் படுத்தப் படுகின்றன. ஏனைய மாநிலங்கள் மறுத்துவிட்ட அணு உலைகளை ஒன்றுக்கு இரண்டாக தமிழகத்தில் நிறுவியுள்ளனர். கொடும் நஞ்சான அணுக் கழிவுகளை தமிழகத்திற்குள்ளே கொட்ட முனைகிறார்கள். தமிழர்களுக்கு உரிமையுள்ள நீரை அண்டை மாநிலங்களிலிருந்து வரவிடாமல் பகைமை போக்கை உருவாக்கி தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மறுவழியில் மொழியின் வழி ஊடுருவி மொழியைச் சிதைக்கிறார்கள்.

ஆகவே இந்தியை திணிப்பது என்பதும் தமிழர்களை அழிப்பது என்பதும் ஒன்றுதான். எட்டு கோடி மக்களுடைய மறத்தமிழினம் வடவர் முன் ஒருக்காலும் மண்டியிடாது. எனவே இன்று இந்திய இறையாண்மைக்குத் தேவை ஒருமைப்பாடா? இல்லை இந்தி மொழியா? என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

- நெல்லைப் பைந்தமிழ்

கருவி நூற்பட்டி:

  • இந்து இந்தி இந்தியா - எஸ்.வி. இராஜதுரை
  • இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் - திராவிட மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
  • ஒப்பியன் மொழி நூல் - திராவிட மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
  • இந்திக்கு இங்கே இடமில்லை – அறிஞர் அண்ணா
  • தமிழ் நாட்டின் ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை
  • தமிழரின் மறுபக்கம் - க.ப. அறவாணன்.
  • தமிழர் மேல் நடந்த பண்பாட்டு படைபடையெடுப்புகள் -க.ப. அறவாணன்
  • எம்மொழி செம்மொழி – நெல்லைப் பைந்தமிழ்
  • சங்பரிவாரின் சதி வரலாறு – விடுதலை இராஜேந்திரன்
  • R.S.S. இந்து பாசிசம் – நாத்திகம் இராமசாமி
  • இராமன் தேசிய நாயகனா? தேசிய வில்லனா? – கீழைக் காற்று வெளியீடு
You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 5
Total views : 410192
Who's Online : 0
Your IP Address : 18.118.102.225

Archives (முந்தைய செய்திகள்)