Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

முத்துக்கொடிக்கொரு முகவரி – வடலூர் ஜெகன்

17 Feb 2022 2:10 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures jegan

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-78
படைப்பாளர் - வடலூர் ஜெகன்

தடுமாற்றத்தோடு வருகிற தன் கணவரைப்பார்த்து அச்சத்தோடு வியந்துபோனாள் அஞ்சுகம்.

" என்னங்க இது புதுப்பழக்கம்....?" ஐய்யய்யோ, நான் இன்னாப்பன்னுவேன்... புள்ளவேற பள்ளிக்கொடம் விட்டு  வர்ற நேரமாச்சே, எங்கப்பன் குடிகாரன்னு நெனச்சா அவ தாங்கமாட்டாளே என்று பதறினாள்  அஞ்சுகம். அஞ்சுகத்தோட வூட்டுக்காரன் மதியழகன் என்கிற தோலு ஏரியாவுல அப்படித்தான் கூப்புடுவாங்க.

    அஞ்சுகம் பதற்றப்படக் காரணம் இருக்கு . கல்யாணம் ஆனப்புதுசுல குடிகாரனா இருந்தவருதான்  தோலு.அடிக்கடி குடிச்சிட்டு வர்றாருன்னு கோவிச்சிக்கிட்டு மூணுவயசு பொம்பளப்புள்ளைய தூக்கிக்கிட்டு எங்கம்மா வூட்டுக்குப்போயிட்டேன்.புள்ளப்பாசம் தாங்கலன்னு ரெண்டுநாள் கழிச்சி வந்து புள்ளையகுடுன்னு வம்புபன்னினார்.அப்பவும் நல்லப்போதைதான். ஆனா, எங்க வீட்லயும் ,ஊர்காரங்களும் நாளைக்குப்போகலாம்பா பொழுதுபோயிடுச்சி நீயே ரெண்டு ஆளா இருக்க இதுல கொழந்தைய வேற கேக்குறீயே இது சரிவராதுன்னு எவ்வளவோ சொல்லிப்பாத்தாங்க . ம்ஊங்ங்.  " அதிகமா படிச்சவங்களுக்கும் புத்தி இருக்காது அதிகம் குடிச்சவங்களுக்கும் புத்தி இருக்காது"  எங்காத்தா அடிக்கடி சொல்லும்.என்ன பிரயோசனம்.யார் சொல்வதும் அந்தாளு காதுல விழல. சரி இனியும் பேசிப்புண்ணியமில்லன்னு ஒரு வழியா புள்ளைய அனுப்பிவச்சிட்டு தலைவிதிய நொந்துக்கிட்டு குந்திருந்தேன்.என்னைமாதிரி கோடிசனம் குமுறிக்கிட்டுக்கிடக்குதே எப்பத்தான் விமோசனம் என்றவாறு புலம்பிக்கொண்டிருந்தவள் தோலு போயி ஒரு அரை மணிநேரமிருக்கும் திடீரென்று  நானும் கெளம்புறேன்னு அந்த இருட்டப்போற நேரத்துல  கெளம்பிட்டேன்.புள்ளைய வுட்டுட்டு தனியா இருக்க முடியுமா ? அதுவும் சரிதாம்மா, "அவன்கிட்ட வாத்தக்குடுக்காத ஒன்னக்கெடக்க ஒன்னுப்பேசிக்கிட்டு மேலும் சண்டை வளக்க வேணாம்" என்று அக்கம்பக்கம் உள்ளவங்க சொல்ல எல்லாத்தையும் காதுலப்போட்டுக்கிட்டவ அண்ணமொவன் ராஜாவ வண்டி எடுத்துட்டு வரச்சொல்லி ஏறிபோனாள் அஞ்சுகம். ஒரு பத்துநிமிஷம் இருக்கும் ஆத்தாங்கறை ஓரம் வந்தாங்க ஒரு நாலஞ்சிப்பேரு கும்பலா நின்னவங்கள பாத்து இறங்கிப்பாத்தா தோலு கீழவிழுந்துக்கிடக்குறான்.புள்ள ஒரே ஈரமா நனைஞ்சி இருந்தாள் ஐயோவென கத்திக்கிட்டு கொழந்தைய வாங்கி அனைச்சக்கிட்டு நடந்தது என்னான்னு விசாரிச்சா குடிபோதையில புள்ளைப்போட்டுட்டு விழுந்தது தெரிந்தது. அதுக்கப்புறம் வண்டியில புள்ளையத்தூக்கிக்கிட்டு அம்மாவீட்டுக்கே போயிட்டேன்.மறுநாள் காலையில வந்து வருத்தப்பட்டார்.ஆளாளுக்கு ஒன்னு சொல்ல அன்னைக்கே தோலு செத்துப்போன அவங்க அம்மா மேலயும், பாப்பா மேலயும் சத்தியம்பண்ணினான்.அதுக்கப்புறம் குடிக்கிறதே இல்லன்னு பக்கத்துவீட்டு பொம்பள மணியாச்சிக்கிட்ட சொல்லி ரெண்டுபேரும் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு படுக்கவைத்தார்கள். எல்லாருக்குமே தெரியும்

தோலு குடிகாரன் இல்ல குடிப்பழக்கத்த விட்டு ரொம்ப நாளாகுதுன்னு.

தோலு ஒரு சாதாரணமான  ஏழைக் கூலிக்காரன்தான் ஆனா அந்த ஊர்லியே அவன் ரொம்ப நல்லவன் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவன். பெருசா பின்புலம் இல்லாதத் தினக்கூலி . வீடுன்னுப்பாத்தா  ஒரு ரெண்டு செண்டுல சின்னதா ஆஸ்பெஸ்ட்ரா ஷீட் போட்ட ஒழுகாத வீடு,சுத்திரியும் மண்செவறு  மழைகாலத்தில சுவரெல்லாம் கூட இடிஞ்சி விழுந்திடும் அதுலயும் பொண்ணுப்படிக்கவேணுமுன்னு உள்ள ஒரு அறைமாதிரிக் கட்டி வச்சிருக்கான்.  கொஞ்சம் கஷ்டம்தான்.எப்டியோ ஓடினா சீவன் என்கிற கெதியில வாழ்க்கை ஓட்டுற ஓர் உழைப்பாளி. அஞ்சுகத்துக்கும் தோலுக்கும் ஓர் அழகான பொண்ணு பேரு தேன்மொழி ப்ளஸ்டூ பயாலஜி குரூப் எடுத்துப் படிக்கிறாள் .

தன்பொண்ணுக்காக ரொம்பவும் கஷ்டப்படுகிற பேர்வழி ,ஏன் அஞ்சுகத்தையே வெளிவேலைக்கெல்லாம் போகவேண்டாம்முன்னு சொல்லி தன்னோட உழைப்புல குடும்பம் நடத்துற நல்லவன் தான் தோலு. 

    கொஞ்சம் நேரத்துல தேன்மொழி ஸ்கூல்விட்டு வந்துட்டா. "அப்பா ஏன்மா படுத்துருக்கு? "அப்பாவுக்கு என்னம்மா ஆச்சி..? என்றாள்

"அது ஒன்னுமில்லம்மா  கொஞ்சம் முடியலன்னு கை காலெல்லாம் வலிக்குதுன்னாரு அதான் தூங்கட்டுமுன்னுட்டேன்".என்றாள் அஞ்சுகம்.

   "அப்பா பாவம் ரோம்ப கஷ்டப்படுறாருன்னு" மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டு உள்ளபோன தேன்மொழி உடைமாற்றிக்கொண்டு மறுநாள் தேர்வுக்குப் படிக்கத்துவங்கினாள்.

மறுநாள் காலையில் பக்கத்துவீட்டு பணங்கொட்டை என்ற செல்வராசோட பெயிண்ட் அடிக்குற வேலன்னு போயிட்டான் தோலு.

இப்பெல்லாம் முன்னமாதிரி ஊருக்குள்ள பெரிசா வேலைகள் இருக்குறதில்ல. அதனால பெரும்பாலும் ஆம்பளைங்க கேரளாவுக்கும்  ஓசூருக்கும் பொழப்பு தேடி போயிடுவாங்க. திரும்ப தீபாவளி பொங்கலுன்னாதான் ஊருபக்கம் வருவாங்க.அப்படியும் நம்ம தோலு புள்ளப்பொண்டாட்டிய விட்டுட்டு வெளியில் போக மனசில்லாம இங்க கிடைக்கிற எந்த வேலையா இருந்தாலும் செய்து வாழக்கூடியவன்.

     அன்னைக்கும் அப்படித்தான் பணங்கொட்டை அழைச்சிட்டு போன வேலையும் இல்ல.அந்த வீட்டுக்காரரோட சொந்தகாரர் டெத்விஷயமா வெளியூர் போனதால அன்னிக்குன்னுப்பாத்து வேலை இல்ல ,

  பணங்கொட்டய அனுப்பிட்டு சைக்கிள எடுத்துக் கொண்டு பக்கத்து ஊருப்பக்கம் போயி வீட்டுவேல ஏதாவது கேட்டுப்பாப்போமென்று சைக்கிள மிதிச்சான். மனசுக்குள்ள... "வெவசாய வேலையும் இல்ல, மனுசன் செய்யிற வேலய மிசினு செய்யுது இப்படி ஒருத்தனே வாழனும்ன்னு நெனைக்கிற நாட்டில்  நாமெல்லாம் என்னசெய்றதோ! சம்பாதிக்குனும்ன்னு நெனைக்கிற உலகத்தில நாம எப்படிடா காலந்தள்ளுறது ...?"

என்று எண்ணியவாறு அந்த ஊருக்குள்ள நுழைஞ்சான், ஒரு பெரியவரு வந்தார்

  "ஐயா வணக்கம் ,பக்கத்து ஊருக்காரன் நான். ஏதாவது வீட்டுவேலை ,தோட்டத்து வேலை வீட்டுத்தோட்டத்துல  மரங்கழிக்கிறது தென்னமரம் கழிச்சட்டு மருந்து வைக்கிறதுன்னு ஏதாவது  வேலை இருந்தா சொல்லுங்க. எந்த வேலைக் கொடுத்தாலும் செய்வேனுங்க  ஏதாவது வேலை இருக்குன்னு தெரிஞ்சா சொல்லுங்கய்யா என்று  சைக்கிளை ஸ்டேன்ட் போட்டு அங்கிருந்த பழையப்புளியமரத்து ஓரமா நின்னான். அந்த பெரியவர் காதில் போட்டுக்கிட்டவர் மாதிரி தெரியல ,அது தோலுக்கு தெரியும்.

 கொஞ்சம் நேர ஆச்சு ஒரு ஆள்வந்து "ஏன்பா நீதான் தென்னைமரம் கழிக்கிறேன்னு சொன்னியா"...? என்றான்.

   "ஆமாங்க, ...

அப்ப என் பின்னேடி வா.. என்றவுடன் கெளம்பி கொஞ்சம் நேரத்துல அந்த தோட்டத்துக்குப்போயி பாத்தான்.ஒரு ஆறு மரம் மட்ட அண்டிப்போயி கிடந்தது. சரசரன்னு மரத்துல ஏறி மட்டைய நீக்கி சுத்தம்பண்ணி கொடுத்திட்டு மரத்துக்கு அம்பது ரூபாங்க ,நீங்க குடுக்குறத குடுங்குன்னு இருநூத்தி  அம்பது ரூபா வாங்கிக்கிட்டு மறுபடியும் புளியமரத்துக்கு வந்தான், மணி ஒன்றை இருக்கும்.தூக்குவாளியில் வச்சிருந்த பழையசோத்த எடுத்து சாப்பிட்டுவிட்டு துண்ட ஒதறி கீழ விரிச்சி செத்த படுத்தான்.

    நல்லத்தூக்கந்தான். யாரோ எழுப்பினாங்க. எழுந்துப்பார்த்தான் அதேஆளுதான்.

    "சொல்லுங்கய்யா.. வேற எதனா செய்யனுமா ? " ஆமாம்,

  "சின்ன வேலை ஆனா நீ செய்வியான்னு சந்தேகமா இருக்குப்பா"

சொல்லுங்கய்யா ,வேலஇல்லேன்னுதான் வந்துருக்கேன் செய்யிறேன்  என்றான்.

ஒன்னுமில்ல , பக்கத்து வீட்டுக்காரங்க டாய்லட் அடச்சிக்கிட்டு ரெண்டு நாளா ரொம்பகஷ்டப்படுறாங்க.பாவம் படிக்கிற புள்ளிங்கள வேறவச்சிக்கிட்டு அந்த வீட்டம்மா கஷ்டப்படுது வந்து கொஞ்சம் இன்னான்னுப்பாக்க முடியுமா ? என்றான்.

கொஞ்சங்கூட யோசிக்காம "சரிங்க " என்று பின்தொடர்ந்தான். போய்பாத்தான் கொஞ்சம் கஷ்டமான வேலதான்  மூணு ஒறை போட்ருக்கு  லைன்பாத்து ரெடிப்பண்ணிக்கிட்டு  இவ்வளவு குடுங்கம்மான்னு ரேட்டயும் பேசிக்கிட்டு கொஞ்சம் பொறுங்கன்னு ஓடினான்.கொஞ்சம்

கூட்டம் கம்மிதான். ஒரு பத்துபேர் மட்டும்தான் வரிசையில.நின்னாங்க காசை நீட்டினான் ரெண்டு கோர்ட்டரை வாங்கிக்கொண்டு பக்கத்துல வந்து ஒடச்சி ஊத்தி உள்ள அனுப்பிட்டு அந்த வீட்டுக்கு வந்தான்.தோலு வரும்போதே வாடை அடிச்சிடுச்சி அந்த வீட்டு அம்மாவுக்கும் குடிகாரன்னா புடிக்காது ஏன்னா,அந்தம்மா வீட்டுக்காரரும் குடியாலதான் செத்தாராம்.அந்தம்மா அவன ஒரு மாதிரியா பாத்துட்டு " நமக்கென்ன நமக்கு வேலை நடந்த சரிதான்" என்று முணறிக்கொண்டே உள்ளே சென்றாள்.தோலு செப்டிக்டேங்குக்குள்ள நொழஞ்சான்  வேலை முடிஞ்சி ஒரு பக்கெட் தண்ணிவாங்கி ஒடம்பத் தொடச்சான் .ரெண்டாயிரம் ரூபா கொடுத்தாலும் யாரும் செய்யமாட்டாங்கம்மா,பாத்துப்போட்டுக்குடுங்கம்மா என்றான். அதற்குள்   அந்தவீட்டுப்பொண்ணு ரூபாவதி என்ன ஏதுன்னு விசாரிக்க வந்தவள் ஷாக் ஆயிட்டா. "இவரு தேன்மொழி அப்பா இல்ல..." என்று ஆச்சர்யப்பட்டவள்  கேட்டும்போயிட்டாள்.

தோலும் ஆமாங்கம்மா .தேன்மொழி என் பொண்ணுதாங்கம்மா நீங்க பாப்பாகூட படிக்கிறீங்களாம்மா என்றபடி சரிங்கம்மா பாப்பாக்கூட படிக்கறப்புள்ளன்னு தெரிஞ்சும் நான் என்ன கராறு பேசப்போறேன் நீங்க குடுக்குறது குடுங்கம்மா என்று  ஆயிரத்தி இருநூறுரூவாவ  வாங்கிக்கிட்டு "ரூபாம்மா உங்கள கையெடுத்துக்கும்புறம்மா என் பொண்ணுக்கிட்ட இந்தத் மாதிரிஎல்லாம் வேலைசெய்யிறேன்னு சொல்லிடாதம்மா" ஊரு ஒலகத்துல வேலைவெட்டி இல்ல இந்த மாதிரி எந்த வேலையும் செஞ்சாதாம்மா எங்களுக்கெல்லாம் பொழப்பு ஓடும்   என்று சொல்லிவிட்டு  கிளம்பினான்.வருகிற வழியில் ஒரு வயலில் போர் ஓடினது  கோர்ட்டர்போக மீதகாசுக்கு சோப்பு ஷாம்பு வாங்கி வச்சிருந்தான் போல, ஸ்மெல் வராம குளிச்சிட்டு துணியெல்லாம் தொவச்சிக்கிட்டு கிளம்பினான்.

இன்னிக்கும் லேசான தள்ளாட்டம்தான் வீட்டுக்குள் தள்ளாடியபடி நுழைந்தான். அஞ்சுகம் புரிந்துக்கொண்டாள் .

அஞ்சுகத்துக்கு  எல்லா விஷயத்தையும் பணமட்ட  சொல்லிட்டான். அதுல அவனுக்கொரு அல்பசந்தோசம். அதனால அஞ்சுகத்துக்கு

ஓ... அப்ப நேத்தியும் இதான்போலிருக்கு என்று எண்ணி   வாழ்வை நொந்துகொள்வதா...? தான்மட்டும்வாழ்ந்தா போதும்ன்ற சுயநலம்பிடித்த  உலகத்த நொந்துகொள்வதா தெரியவில்லை என்று புலம்பியவள் கணவனை கைத்தாங்களா விழுந்திடாம கூட்டிட்டுப்போயி படுக்கவைத்தாள்.

மறுநாள் காலை வகுப்பில்  எப்பொழுதும் போல ஒரே பெஞ்சில் ஒன்னாக்குந்திருக்கும் தேனும் ரூபாவும் அன்னைக்கு தேனுவை விட்டுட்டு ரூபா வேறுபொண்ணோட போய் குந்திக்கொண்டாள் .  தேன்மொழிக்கு ஒன்றும் புரியவில்லை. பட்ஒன்திங்  அவங்கல்லாம் பெரிய சமூகம்  அதனாலகூட ரூபா விரும்பாம இருக்கலாம் என்று உணர்ந்துகொண்டாள்.அதற்காக வருத்தப்படவில்லை. ரூபாவும் மெல்ல மெல்ல பேசுவதை விட்டுவிட்டு தவறாக பேசும்வதை தொடர்ந்தது.

   ஒருவழியாக ப்ளஸ்டூ தேர்வு வந்து எல்லோரும் நன்றாக எழுதினார்கள் தேர்வு முடிவு வந்தது.வழக்கத்திற்கும் மேலாக நல்ல மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தாள் தேன்மொழி.நல்லாப்படித்த ரூபா பின்தங்கிய மதிப்பெண்தான் பெற்றாள்.ஆசிரியர்கள் தேன்மொழியை மருத்துவப்படிப்புக்கு படிக்கத்தூண்டினார்கள்.

   மருத்துவப்படிப்புக்கு நுழைவு தேர்வு வந்தது அதிலும் மாநிலத்தில் ஆறாவது இடத்தில் தேர்ச்சிப்பெற்றாள்.மருத்துவசீட்டும் கிடைத்தது .பள்ளியில் பாராட்டுவிழா வைத்தார்கள் .அதில் தேன்மொழி பேசினாள்.எல்லாருக்கும் வணக்கம்.என்னை ஊக்கப்படுத்திய தலைமைஆசிரியர் அவர்களுக்கு  முதலில் எனது நன்றியை தெரிவிச்சிக்கிறேன். எனக்கு பிஸிக்ஸ் வர்றாது அதனால் "நீயெல்லாம்  என்னாத்தப்படிச்சிக்கிழிக்கப்போறன்னு " அடிக்கடி என் பிஸிக்ஸ் சார் கேப்பாங்க. அதை நான் தவறாகவே எடுத்துகொள்ளாமல் சார் கேட்டதை   பூஸ்ட்டா எடுத்துக்கிட்டேன். அதுமாதிரி எல்லாரும் மைனஸ் என்ற படுத்திருக்கிற கோட்டுமேல நேரா நிக்கிற கோடா மாறிநின்னா அது தானாவே ப்ளஸ்ஸா மாறும் நமக்கு பெரியவங்களோட பெரிய ப்ளஸ்ஸாவும் மாறும்".                "புத்தகத்த மூடிவைக்காதிங்க அது வெறும் காகிதம் மட்டுமல்ல, அதையே தொறந்து மூலைக்குள்ள வச்சா எல்லா வறுமையையும் விரட்டுற ஆயுதம் " என்று பேசிமுடித்தாள். நம்மள மாதிரி வீடுகளில்  அப்பாக்கள் குடிச்சிட்டு வர்றாங்க .அதுக்கு நம்மளும் ஒரு காரணம்.அவங்கக்கிட்ட அன்பா பேசுங்க சாப்ட்டியாப்பான்னு கேளுங்க ,நம்ம அன்பு கூட அப்பாக்களோட மனக்கஷ்டத்த மாத்தமுடியும்.என்றுபேசி முடித்தாள்.

நான் இந்த இடத்துக்கு வர்றதுக்கு எங்கப்பா எவ்வளவோ கஷ்டப்பட்டாங்கன்னு எனக்கு தெரியும் .வேலயே கிடைக்காத போதுகூட எங்கப்பா சம்பாதிச்சார் எப்டிதெரியுமா ? எந்த வேலையா இருந்தாலும் செய்யலாம்ன்னும்அதுல ஒரு நேர்மை இருக்கனும்ன்னும் அடிக்கடி சொல்லுவார். ஏன் ஒருநாள் நம்ம ரூபாவீட்டு செப்டிடேங்கக்கூட சுத்தும்பண்ணிட்டு அவுங்க கொடுத்தக்காச பத்திரமா எம்பொண்ணு ஊசிப்போடற  படிப்புக்கு சேத்து வைக்கிறேன்னு  சொன்னாரு.எங்கப்பா குடிக்கமாட்டாரு ஆனா சில நாள் குடிச்சிட்டுவந்தார் அதுவும் எனக்குத்தெரியக்கூடாதுன்னு, எங்கம்மா  மறைச்சாங்க உண்மையிலேயே அவங்களுக்கு புள்ளயாபொறந்ததுக்கு நான் ரொம்ப பெருமைப்படுறேன்,  ஆனா ,எனக்கு தெரியும் வேலகிடைக்காத பல நாட்கள் பல்வேறு வேலைகள செஞ்சித்தான் எங்கள காப்பாத்துறார் .அதுக்கு கைமாறு எங்கப்பா ஆசப்பட்டமாதிரி டாக்டராகியே  தீரணும் என்பதுதான். நான் நேசம்வைத்த  ரூபா கூட இதனாலதான் என்ன இழிவா நினைத்து எங்கிட்ட பேசுறத நிறுத்திக்கிட்டா மன்னிக்கனும் நிறுத்திக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஏற்றத்தாழ்வுகளும் தாழ்வு மனப்பான்மையும் செய்யிற வேலையில இல்ல தன்னோட மனசில இருக்கு.எங்கப்பா மாதிரி உலகத்துல எவ்வளவோ பேரு இருக்காங்க அவங்க இல்லாமப்போனா மூக்கப்பிடிக்காம போகிற உங்க உள்ளத்தையும்  உடலையும் சுத்தம்பண்ணவேண்டி வரும்.எனக்கு நல்லா சொல்லிக்கொடுத்த நம்ம சார் மிஸ் மற்றும் எச் எம் சர் எல்லோருக்கும் நன்றி என்று மேடையிலிருந்து கீழிறங்க ஒவ்வொரு படிக்கட்டுக்கும் கைத்தட்டல் விண்ணை முட்டியது.இப்படியாகவாவது படரவே முடியாத கொடிகளுக்கு முகவரி கிடைக்கட்டும்.

You already voted!
3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
7 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
செ. காவியா
செ. காவியா
2 years ago

இப்படி ஒரு காலத்தில் அருமையான கதை

நெய்வேலி பெ அரிகிருஷ்ணன்
நெய்வேலி பெ அரிகிருஷ்ணன்
2 years ago

நெகிழ்ந்துபோனேன் ஏழைகளின் வலிகளை உங்கள் வரிகள் பேசியுள்ளது
கண்கலங்கச்செய்யும் வரிகள்…
மிகவும் அற்புதம் 🙏

Dr.V.Ramesh Babu
Dr.V.Ramesh Babu
2 years ago

கிராமிய சொல்லாடல்
உழைப்பின் பெருமை
வறுமையின் தாக்கம்
படிப்பின் அருமை
நேர்மையின் உச்சம்
அன்பின் ஆழம்
எதிலும் நேர்மை
குடும்பத்தின் அன்பு
மகளின் உணர்ச்சி

இப்படி பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடான சிறப்பானதொரு சிறுகதை

வாழ்த்துக்கள் கவிஞருக்கு..
.

சே.முத்துவிநாயகம் திருநெல்வேலி
சே.முத்துவிநாயகம் திருநெல்வேலி
2 years ago

முத்துக்குட்டிக்கொரு முகவரி முத்தான சத்தான சிறுகதை. ஏழ்மையிலும் நேர்மைக்கு இலக்கணமான தோலு கதாபாத்திரம் . தந்தையின் பெருமையைப் பறைசாற்றும் தேன்மொழி மகள் கதாபாத்திரம் . யதார்ததைப் புரிந்த மனைவி படைப்பு.
கிராமிய மனங் கமழும் மொழிநடையில் சிறுகதையையை எழுதியுள்ள வடலூர் ஜெகன்
மென்மேலும் படைக்க வாழ்த்துக்கள்
சே. முத்துவிநாயகம். திருநெல்வேலி

சா.மோகனாம்பாள்
சா.மோகனாம்பாள்
2 years ago

அருமையான கருத்துக்கள் .. வரிக்கு வரி சமூகத்தின் பார்வையில்….. குடும்ப சூழலில் ஓர் நிகழ்வாய்…… அருமை… எழுத்தாளர் ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துகள்

முனைவர்.அ.இராசேந்திரன்
முனைவர்.அ.இராசேந்திரன்
2 years ago

வடலூர் ஜெகன் அவர்களின்”முத்துக் கொட்டிக்கொண்டு முகவரி”சிறுகதை நடப்பில் சமூக நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. இதைப் பின்னர் மிகவும் சிறப்பு

அதனி, விழுப்புரம்
அதனி, விழுப்புரம்
2 years ago

ஏழ்மையை உழைப்பு வென்றதை இக்கதை அருமையாக சொல்கிறது.
கல்வியால் எந்தச் சூழ்நிலையிலும் தனதாக்கலாம் என்பதை இப்படைப்பாளி பக்குவமாக கொண்டு செல்கிறார்.
எதார்த்தம் குறையாமல் அதே சமயம் விளிம்பு நிலை வாழ்க்கையையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார் கதையாசிரியர் வடலூர் ஜெகன் அவர்கள்.
வாழ்த்துகள்.
அருமையான படைப்பு.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092420
Users Today : 5
Total Users : 92420
Views Today : 7
Total views : 409986
Who's Online : 0
Your IP Address : 3.22.61.246

Archives (முந்தைய செய்திகள்)