07 Sep 2019 10:45 amFeatured
அத்தியாயம் 3
விமான நிலையத்தை உளவு பார்த்தல்!
தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
இந்த விவகாரம், கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும். அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை பணயக் கைதிகளை மீட்க அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.
அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றது!
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல,மிகத் தெளிவாகபுரியக்கூடிய விடயம் இது. இஸ்ரேலிய விமானம் வருவது, பணயக் கைதிகளை மீட்கும் ரகசிய ஆபரேஷன் என்பதை கென்யா ஊகித்திருந்தது.
ஆனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல், தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை. அதனால்தான் துருவித் துருவி விபரங்களைக் கேட்டது கென்யா.
டேவிட் கிம்சீ, மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.
இஸ்ரேல் சொன்ன பொய்
“இந்த விமானத்துக்கும் பணயக் கைதிகளுக்கும் சம்மந்தமே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை கூடாது. அது கென்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலுள்ள ராஜாங்க உறவுகளைக் கெடுத்துவிடும்” என்பதை டேவிட் ஒப்புக்கொண்டார்.
அதே நேரத்தில், பணயக் கைதிகளை மீட்க அதிரடித் திட்டம் ஒன்றுக்காகத்தான் இந்த விமானம் என்று கூறவும் அவர் விரும்பவில்லை.
எனவே, இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் புதிதாக, அதே நேரத்தில் நம்பும்படியாக ஒரு கதை கூறுவது என மொசாத் முடிவெடுத்தது. அந்தக் கதைதான் கென்யாவுக்கும் இஸ்ரேலினால் சொல்லப்பட்டது.
அந்தக் கதை என்ன?
“விமானக் கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பணயக் கைதிகளை மீட்கவே இஸ்ரேல் முடிவெடுத்திருக்கிறது. ஆனால், கடத்தற்காரர்களின் கோரிக்கையை இஸ்ரேல் நிறைவேற்றிய பின்னரும், பணயக் கைதிகளை நோக்கித் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டால் என்ன செய்வது? ஒருவேளை அப்படி நடந்தால், உடனடி மருத்துவ உதவிகளைச் செய்யவே இந்த விமானம்!
இது ஒரு பறக்கும் வைத்தியசாலை போல அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் டாக்டர்கள் இருப்பார்கள். விமானத்துக்கு உள்ளேயே சகல மருத்துவ உபகரணங்களுடன் ஆபரேஷன் தியேட்டர் உண்டு. அப்படியான ஒரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பவே அனுமதி கேட்கிறோம்” என கென்யாவின் வெளிவிவகார அமைச்சிடம் கூறப்பட்டது.
விமானத்துக்கும் மொசாத்துக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போலவே ஒரு தோற்றம் காண்பிக்கப்பட்டது.
மருத்துவ உதவி என்ற இந்தக் கோரிக்கையுடன் சென்றபோது கென்யாவால் அதை மறுக்க முடியவில்லை. சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலிய விமானம் நைரோபி விமான நிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியை கென்யா அரசு கொடுத்தது. மனிதாபிமான ரீதியிலான அனுமதி என்று கென்யாவின் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.
அந்த ஏற்பாடும் சரி. இனி அடுத்த பிரச்சினை.
உளவாளிகள் உகண்டாவுக்குள் எப்படி நுழைவது?
மொசாத் ஏற்கனவே கென்யாவுக்குள் தனது உளவாளிகள் ஆறு பேரை அனுப்பிவிட்டது. மேலதிக உளவாளிகளையும் அங்கே அனுப்பலாம்.
ஆனால், கென்யாவிலிருந்து உகண்டா நாட்டுக்குள் இஸ்ரேலிய உளவாளிகள் நுழைவது எப்படி என்பதுதான் இன்னமும் குழப்பமாக இருந்தது.
கமாண்டோக்களை ஏற்றிச் செல்லும் விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் போய் அதிரடியாக இறங்கி, பணயக் கைதிகளை மீட்பது என்பதுதான் மொசாத்தின் திட்டம். அப்படிச் செய்வதற்கு முன்னர் மொசாத்தின் உளவாளிகள் அந்த விமான நிலையம் இருக்கும் ஏரியாவுக்குள் ஊடுருவிச் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
முக்கியமாக அந்த விமான நிலையம் பற்றிய உளவுத் தகவல்கள் வேண்டும்.
விமான நிலையத்தில் இப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப் பட்டிருக்கின்றன என்பது தெரிய வேண்டும். எந்த நேரத்தில் குறைவான பாதுகாப்பு இருக்கின்றது என்பதை அறிய வேண்டும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, அந்த விமான நிலையத்தின் முழுமையான வரைபடம் வேண்டும்.
இந்தக் காரணங்களுக்காக முதலில் உளவாளிகள் உகண்டாவுக்குள் நுழைய வேண்டும்.
இஸ்ரேலியர்களை உத்தியோகபூர்வமாக உள்ளே நுழைய இடி அமீன் அனுமதிக்க மாட்டார் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரியும். எனவே யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாகத்தான உள்ளே நுழையவேண்டும்.
அடுத்த சிக்கல், P.L.O.!
மொசாத் இப்படி உகண்டாவுக்குள் நுழைவதற்கு மற்றுமோர் பெரிய தடையும் இருந்தது. அது பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம்.
அந்த நாட்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை வெளிநாடுகள் பலவற்றில் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தது. அதற்காக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் போராளிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமல்லவா?
அப்படியான பயணங்களுக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் அந்த நாட்களில் நுழைவாயிலாகப் பயன்படுத்திய விமான நிலையம் எது தெரியுமா?
இதே என்டபே விமான நிலையம்தான்!
என்டபே விமான நிலையத்தினூடாக உள்ளே நுழையவும், அதனூடாக மற்றய ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கு இடி அமீன் முழுமையான அனுமதி வழங்கியிருந்தார். அதைவிட உகண்டாவுக்கு உள்ளே பாலஸ்ததீன விடுதலை இயக்கத்துக்கு ஒரு ரகசியத் தலைமை அலுவலகம் அமைக்கவும் இடி அமீனால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
யாருடைய வீடு அது தெரியுமா?
உகண்டாவுக்குள் அமைக்கப்பட்டிருந்த இந்த ரகசியத் தலைமை அலுவலகம் பற்றியும் அனேகருக்குத் தெரியாத ஒரு சுவாரசியமான தகவல் உண்டு.
1972ல் இடி அமீன் இஸ்ரேலுடன் உகண்டாவுக்கு இருந்த ராஜாங்கத் தொடர்புகளையெல்லாம் துண்டித்துக் கொண்டார். இஸ்ரேலியத் தூதரகத்தையும் உகண்டாவிலிருந்து வெளியேற்றினார். அப்போது இஸ்ரேலியத் தூதுவர் உகண்டாவில் தங்கியிருந்த வீட்டையும் தம்வசம் எடுத்துக் கொண்டார் இடி அமீன்!
அந்த வீட்டைத்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ரகசியத் தலைமையகமாக உபயோகிக்கக் கொடுத்திருந்தார்.
அந்த வீட்டில் இருந்துதான் அவர்கள், இஸ்ரேவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான உத்தரவுகள் போய்க்கொண்டிருந்தன.
இந்த விபரம் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. மூலமாகவே மொசாத்துக்குத் தெரிய வந்திருந்தது.
இப்படியாக பாலஸ்தீன் ஆட்கள் அங்கிருப்பது, மொசாத்துக்கு அடுத்த சிக்கலாக இருந்தது.
மொசாத் உகண்டாவுக்குள், அதுவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வந்துபோகும் என்டபே விமான நிலையத்தில், அதிரடி ஆபரேஷன் ஒன்றை திட்டமிடுகிறது! சூழ்நிலை கொஞ்சம் தந்திரமானதுதான்.