02 Oct 2019 12:44 pmFeatured

கவிஞர் கா.பாபுசசிதரன்
மும்பை
மாறுவேட போட்டியில்
காந்திவேடம் போட்ட
குழந்தையைப்போல்
இன்றைய ஆளுமைகள்…
உன்னை வைத்து
கைத்தட்டலும்…
மொய்ப்பொட்டலமும்…
வாங்கிச் செல்கிறார்கள்..!!
எது சுதந்திரம்…?
யாருக்கு சுதந்திரம்…?
என்ற கேள்வியை - இங்கு
கேட்டுக்கொண்டே இருக்கிறோம்…
இருந்தவரை நீயும்
சொல்லவில்லை…
நீ இறந்த பின்பும் - விடை
கிடைக்கவில்லை…
வந்தவர்களிடம்
இருந்ததை வாங்கி…
இருந்தவர்களிடம் கொடுத்தாய்…
இன்று., இருப்பவர்கள்
ஆணிக்கும்… பயணிக்கும்…
பகிர்ந்து
கொடுத்து விட்டார்கள்
சுதந்திரத்தை..!
சுதந்திர தினத்திற்கும்…
குடியரசு தினத்திற்கும்…
காந்தி ஜெயந்திக்கும்…
விடுமுறை கிடைத்த
குழந்தையின்
மனநிலையில் தான்
இருக்கிறது…
இன்றைய இந்தியா…!!
இங்கு உனது.,
ஆடை…
பேனா..
கைத்தடி…
கண்ணாடி…
கடிகாரம்…
ஏன்.,
உன் செருப்பும் கூட
பாதுகாப்பாய் தான்
இருக்கு…
நீ விட்டு சென்ற
சுதந்திரத்தை தவிர…
காந்தி.,
நீ மீண்டும் வா…
வரும் போது.,
கர்ணனைப்போல்
கவச குண்டலங்களோடு வா…
நீ போராடப்போவது
அன்னியர்களோடு அல்ல…
உன்னவர்களோடு…
இங்கு மீண்டும் தேவை
ஒரு குருஷேத்திரம்…
இது.,
இராட்டை சுற்றும்
காலமல்ல…
சாட்டை சுழற்றும்
காலம்..!
வருகையில்…
ஆடை குறைந்த
அகிம்சாவாதியாக மட்டும்
வந்துவிடாதே…






Users Today : 22
Total Users : 119970
Views Today : 24
Total views : 451327
Who's Online : 0
Your IP Address : 216.73.216.232