08 Feb 2022 12:59 amFeatured

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-18
படைப்பாளர் - ஞான. ஷைலா மேரி, தாம்பரம்-கி, சென்னை

அரசு மருத்துவமனையின் அறைகளில் தொங்கிக்கொண்டிருக்கும் பச்சை திரைச்சீலைப் போல் எந்த பக்கம் பார்த்தாலும் பசுமை. குற்றால அருவியின் தாய்ப்பாலை பருகி, பரப்பளவில்லா கருவறையில், சுற்றளவில்லா நெற்கதிர்கள், நிறைந்த வளமையை பார்த்து, மனிதரை மனிதர்பார்த்து ஏங்குவது போல், செழுமையான வயல்வெளியை பார்த்து சஹாரா பாலைவன அன்னையும் வடிப்பாளே கானல் கண்ணீர்என்று கூறுமளவுக்கு எப்போதும் பச்சை சேலையை போர்த்தியபடி காட்சியளிக்கும் செழுமையான கிரமாம் அது. நகரத்து வாழ்க்கை என்றால் என்னவென்று இன்னும் அறியாது, கிராமத்து வாழக்கையில் ஊறிக்கொண்டிருக்கும் அந்த ஊர்மக்கள், அது மட்டும் இல்லாமல் நகர மக்களின் பார்வைக்கும் எட்டாத தூரமாய் விளங்கிய விளங்கா புதிர்அந்த ஊர்புதிரை திரை கிழித்தாள் ஒருத்தி.
தேச வரைபடத்தில் ஓளிந்துகொண்டிருக்கும் அந்த அழகான ஊரின்பெயர் "கொடிநிலாவூர்". அப்பெயருக்கான வரலாறும் உண்டு. அதிசயத்து போகுமளவு அரசிகள் ஆட்சி செய்து கொண்டிருந்த சமயமது, கொடிக்களனூர்சிற்றரசாகவும், இந்த சிற்றரசின் அரசி "இராணிமாதேவி கவிநிலா" இவர் பெண் கொடை வள்ளலாக திகழ்ந்து தன் உயிரையும் மக்களுக்காய் தியாகம் செய்தார். தான் ஒரு இராணி எனவே அரண்மனையே கதி, அந்தபுரமே விதி என்று இல்லாமல், அரசி என்றும் பாராமல் இராஜ்ஜியத்திற்குள் மாறுவேடத்தில் உலா வருவதும், மக்களின் துன்பங்களை நேரடியாக களைவதும், மக்களின் நலனே, தன் நலன் என அவார்களுக்கு சேவை செய்வதே, தன் முழு நேர வேலையாக வைத்துக்கொண்ட இராணி அவர். இதனால் இவரை கர்ண மகாராஜாவின் தங்கை என்றே அழைப்பார்கள். அவரின் நினைவாக அவ்வூர் மருவி கொடிநிலாவூர் என பெயர்வந்தது என்றும், அவ்வூரின் நுழைவாயிற் கதவு, ஓர்அதிசய கதவு. எவரொருவர் அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக உச்சகட்ட தியாகம் செய்கிறார்களோ, அவர்கள் மட்டும் அந்த நுழைவாயில் வழியே செல்ல, அந்த அதிசய கதவு மிக பிரகாசமான ஒளியுடன் திறக்கும்.
இறுதியாக அந்த கதவு இராணிமாதேவி கவிநிலாவின் சவ ஊர்வலத்திற்கு திறந்தது என்றும் அந்த வானாளாவிய கதவின் எதிரில், சாலை வேகதடை ஒன்று உள்ளது என்றும் அவ்வழியில் செல்லும் வாகனங்கள் அந்த வேகதடையை கடக்க மெதுவாக செல்லும் போது, அதில் பயணிக்கும் நபர்கள் அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக உச்சகட்ட தியாகத்தை செய்திருந்தார்கள் என்றால், அந்த நுழை வாயில் கதவு திறக்கும், எளிதாக ஊருக்குள் சென்றுவிடலாம். இல்லையென்றால் 7 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஊருக்குள் நுழைய வேண்டும் என்றும் அந்த கதவின் அதிசய தகவலையும் சேர்த்து, அவ்வூரில் ஒரு நூற்றாண்டை தொடுமளவு உயிரோடு உலா வரும் பாட்டி ராகிணி சொல்லி கேள்வி.
அன்று காலை 10 மணியிருக்கும், என்ன செல்வி பாட்டி" உனக்கு முதியோர்பென்சன் வந்துடுச்சா?… என்று வினா தொடுத்துக்கொண்டே நடந்தாள் தேவசேனை.ஆமா கண்ணு, கை நிறைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கைநாட்டு வச்சி வாங்கிட்டேன் கண்ணு. நீ நல்லா இருக்கணும் கண்ணு… என்றாள் செல்வி பாட்டி..
தேவசேனையை மோத வரும் வண்டியை பார்த்து, ஏய்ய்... பாத்து பாத்து, பாத்து பா… பத்திரமா ஓட்டிக்கிட்டு போ.. என்ன புரியுதா டெசி.. விட்டா எம்மேல ஏத்திருவ போல… என்றாள் தேவசேனைசும்மாக்கா, உன்ன பயமுறுத்த அப்படி ஓட்டினேன்.. போலியோ அட்டாக்குல கால் நடக்க முடியாம இருந்த எனக்கு, கவா;ன்மெண்ட் கொடுத்தன்னு சக்கர வண்டிய, எங்கெங்கையோ அலஞ்சி திரிஞ்சி வாங்கிக் கொடுத்து, அத ஓட்ட வேற கத்துக்கொடுத்தியேக்கா… உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலக்கா.. ஒரே இடத்தில முடங்கி கிடந்தேன். ஆனா நான் இப்போ, நெனச்ச இடத்துக்கு வண்டில போரேன் தெரியுமா. இதுல என்னான்னா, கிட்ட வாயேன்.. காத காட்டேன்.. கால் நல்லா இருக்கிறவங்கள கூட என் வண்டியில ஏத்திக்கிட்டு போறேன்னா பாத்துக்கோயேன்…. என்று சிரித்தாள் டெசி…சரிசரிசரியா.. ஓட்டிட்டு போ, உன்ன நம்பி உட்காரவங்க நல்லகால உடச்சிடாதமா… டெசியை கிண்டலடித்தபடி நடையில் வேகத்தைக் கூட்டினாள்….தேவா தேவா… இரும்மா.. உன்வேகத்துக்கு என்னால உன்கூட ஓட முடியாது, இந்தா… ஒரு ஆவின் குல்பி ஐஸ்சை சப்பிட்டே போ… வெயிலுக்கு நல்லா இருக்கும்… என்றாள் ஜெயந்தி மேரிவேண்டாங்கா… அவசரமா போறேன். அது வேற கையெல்லாம் ஒழுகிட்டு பிசு பிசுன்னு இருக்கும் நீ வியாபாரத்த பாரு…
ஆங்… என்ன சொல்றன்னு கேட்கல..
ஆமாம் தொண்ட கிழிய கத்தி சொல்லிட்டா மட்டும் உன்காதுல விழுந்திடும் பாரு..
முதல்ல செவிட்டு மஷினை காதில் மாட்டு" எனஜாடை செய்தாள்.. தேவசேனை
ஓஓஓ… இப்ப சொல்லு… இப்ப சொல்லு..
அவசரமா போய்ட்டு இருக்கேன் குல்பி ஐஸ் வேணாம்னு சொன்னேன்.
என் செவிட்டுக்காதுக்கான காது மெஷினை வாங்கிக் கொடுத்து, ஊனமுற்றோர்வியாபாரம் செய்ய அரசாங்கம் கொடுத்த ஆவின் கடையை எனக்கு எடுத்துக்கொடுத்து, என்னையும் கை நிறைய சம்பாதிக்க செய்த, என் சாமி தேவசேனை நீ…
அக்கா, என்னை கும்பிடறத விட்டுட்டு, கணக்கு வழக்க கரெக்டா பாரு, கடைய பாரு போக்கா…போ.. என்று ஜெயந்தி மேரியிடம் சொல்லிக்கொண்டே தெருவை கடந்தாள் புயலாக.. அடைந்தாள் தன் இலக்கான கிராம வங்கியை…
அவளை பார்த்ததும் கிராமவங்கி அதிகாரி சசிரேகா, என்னம்மா தேவசேனை மகளிர் சிறுதொழில் கடன்தொகை இன்னும் சேங்ஷனாகி வரலை, ரெண்டு வாரத்துல வந்துடும்.. நீ அப்ப வந்து பாரு.. என்றதும்..
சரிங்க அம்மா நான் அடுத்த வாரம் வாரேன்… என்றபடி சோகத்தோடு திரும்பினாள் வீட்டிற்கு.…
அவ்வூரில், சுட்ட குழல் ஓடால் அமைக்கப்பட்ட வீடு தான் தேவசேனையின் வீடு. வீட்டுத்திண்ணையில் தேவசேனையின் அப்பா நிலக்கடலையை உடைத்து, கடலையை ஒரு பாத்திரத்திலும், தோலை சுவத்துப்பக்கம் ஒதுக்கியும், வேலை பார்த்துட்டே….
இதபாரு புள்ள தாயில்லா புள்ளையாச்சேன்னு செல்லம் கொஞ்சி போனாபோகுதுன்னு விட்டா, நீ எம்பேச்ச கேக்குறதே இல்ல. கட்டன் ரைட்டா சொல்லிட்டேன், மாப்பிள வீட்டுக்காரங்க சாயங்காலம் வருவாங்க, நீ தயாராயிக்க. என்கிட்ட கதகிதசொல்லிட்டு திரியாத ஆமாம், சொல்லிப்புட்டேன். போலீஸ்ல இன்ஸ்பெக்டர்உத்தியோகம் பாக்கிற மாப்ள, ஏதோ உன்ன பாத்துட்டு, உன்ன தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நிக்கிறதா, தரகர்சொல்றார். அவங்க தராதரம் என்ன, நம்ம தராதரம் என்ன.. அவர கட்டிக்கிட்டா இன்ஸ்பெக்டர்பொண்டாட்டின்னு, ஊரே உனக்கு மரியாத கொடுக்கும். அப்ப அவரோடு சேர்ந்து, இன்னும் யாருக்கெல்லாம் ஓடி ஓடி உதவி செய்யணும்னு நினைக்கிறியோ, உன் இஷ்டம் போல உதவி செய்யலாம்..
திண்ணை ஓர கொம்பில் படர்ந்த கொடியில் சங்குப்பூவை பறித்துக்கொண்டே… தேவசேனை..
இந்த தரகர தொலச்சிகட்டினா சரியாயிடும், அப்பா எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீ கேக்க மாட்ற, மாப்ளகீப்ளன்னு யாராச்சும் வீட்டுக்கிட்ட வந்தாங்க, நடக்கிறத வேற சொல்லிப்புட்டேன். மாப்ள இன்ஸ்பெக்டரா இருந்தா என்ன? இன்ஜினியரா இருந்தா என்ன? எனக்கு யாரும் வேனாம் பா..
படிச்ச திமிர பாரு, ஏன் நீ யாரையாச்சும் மனசுல வச்சிக்கிட்டு தட்டிக்கழிக்கிறியா? அதையாச்சும் சொல்லி தொலைக்கலாம்ல..
ஆமாம் பா என் மனசுல நீ தான் இருக்க, உன்ன விட்டுட்டு கல்யாணத்த பண்ணிக்கிட்டு உன்ன தனிமரமா ஆக்கிட்டு போகமாட்டேன் பா. நீ சாகுற வரைக்கும் உன்கூடவே இருந்துக்கிறேன் பா.
நான் செத்த பெறவு நீ என்ன பண்ணுவ தனியா? இதோ பாரு, எனக்கும் வயசாகுது. நான் நல்லா நடக்கும் போதே, உன்ன ஒருத்தன் கையில புடிச்சிகொடுத்துட்டா, நான் நிம்மதியா போய் சேர்ந்துடுவேன். நான் பட்டுப்போன மரம், நீ பசுமரம், நடக்க வேண்டிய நேரத்தில் அது அது நடந்தா தான், கரெக்டா இருக்கும், இல்லன்னா நீ, காத்தாயிக்கு அத செய்யணும், அக்காயிக்கு இத செய்யணும்னு, ஓடிட்டே இருப்ப. இன்னைக்கு மட்டும் நீ அம்மா சேலையை கட்டிக்கிட்டு, நகையை போட்டுக்கிட்டு, வர்ற மாப்ள முன்னாடி நின்னு, கவர்ன்மெண்ட் மாப்ளைய புடிச்சிருக்குன்னு சொல்லல, என்ன உயிரோட பாக்கமாட்ட பாத்துக்க. இதுக்குமேல உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க முடியாது என்னால.
சுட்டெறிக்கும் சூரியனின் வெப்பக் கதிர்களை, கருமேகம் சில நாழிகை மறைப்பது போல், சில துளி நொடிகளே மனதில் கோபம் கொண்டாள் தேவசேனை… தினமும் மாலை நேரத்தில் சிலுசிலுவென வேப்பமர கிளைகள் தன் மேனிக்கு சாமரம் வீசுவதை போல், அந்த நண்பகலில் உணர்ந்து, தணிந்தாள் தன் கோபக்கனலை. மேற்கிலிருந்து கிழக்காக வானசல்லடை மழைத்தூரலை சலித்தது. அவள் வீட்டு முன் மழைச்சாரலை கண்டவுடன், ஓடினாள் வீட்டிற்குள், முற்றம் நெற்றியில் இடித்தது சின்னதாய்… ஆ...ஆ... என நெற்றியை தடவிக்கொண்டே வலியை பொருட்படுத்தாமல் அலுமினிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்…
இவ்ளோ நேரம் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன், நீ செவிடன் காதில ஊதின சங்காட்டாம் தொடச்சி போட்டுட்டு, பாத்திரத்த கையில எடுத்துட்டு எங்க கிளப்பிட்ட?…
எனும் அப்பாவின் கத்தல் குரலை சிறிதும் மதியாமல், திண்ணையில் இருந்த அவரின் தலையை, ஒரு கையால் சாய்த்து இறுக்கி பிடித்து, சுருங்கி போன கன்னத்தில் அழுத்தி முத்தம் வைத்துவிட்டு, வயல் வெளி வரப்பில் நெளிந்து வளைந்து ஓடினாள் சிறுபிள்ளை போல்.
இழுத்துவிட்ட ஸ்பிரிங் போல் பட படவென இதய துடிப்புடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நின்றாள். நின்றவளின் மீது வழிந்த மழை துளிகளும் வயலுக்குள் நிறைந்தது. அவள் பார்வை நீருக்குள் ஊடுருவியது, கண்களில் மின்னல் பரவசம்.. "வெளிய வந்துட்டியா? வா வா…"இதோ வரேன்" என சொல்லியபடியே பாவாடையை முழங்கால் வரை எடுத்து செருகி, சேற்றில் இறங்கினாள் தேவசேனை. வளையை விட்டு மழைநீரில் ஆட்டம் போட வந்த கொழுத்த நண்டுகளை, படக் படக்கென்று பிடித்து பாத்திரத்தில் வீசினாள்… பாத்திரத்தினுள் சலசத்த நண்டுகளுடன் பேசியபடி வீடு வந்து சேர்ந்தாள். அடுத்த நொடி வீட்டில் அடுப்பு மூட்டினாள்….. சிறிது நேரத்தில் நண்டு ரசம் மணக்க மணக்க தயாரானது. மூக்கைத்துளைத்த வாசம் வெளியே போகாமல் ஒரு தூக்கில் ரசத்தோடு போட்டு அடைத்தாள். இருந்தும் வாசம் வீடு முழுக்க வீச, பரபரப்பாய் வீட்டைவிட்டு வெளியே வர எத்தணித்தவள்
"அப்பா நீ சாப்பிட்டுட்டே இரு, இதோ நான் வந்துடறேன்…. என்றாள்
நண்டு ரசம் வைக்கிற நேரமா இது.. மாப்ள வீட்டுக்காரங்க வர்;ற நேரம்…. எங்க போற? என சிடுசிடுத்தார்அப்பா..
கொஞ்சம் இருப்பா, ரெண்டு நாளா சிட்டுக்கவி பாட்டி, லொக்கு லொக்குன்னு இரும்மிட்டு இருக்கு. அதான் நண்டு ரசம் வச்சேன். போய் கொடுத்துட்டு வந்துடுறேன்…. என்று சிட்டுக்கவி பாட்டி வீட்டுக்கு விரைந்தாள்…
வீட்ல யாரு, சிட்டுக்கவி பாட்டி… சிட்டுக்கவி பாட்டி, படுத்திருக்கியா… சரிஎழுந்திருடா உனக்குன்னு நண்டு ரசம் வச்சி கொண்டாந்திருக்கேன். ஒரு வாய் சாப்பிட்டுட்டு, காலையில வாங்கிக்கொடுத்த மாத்திரைய போட்டுட்டு படுத்துக்கோ… வீணா போன, மாப்ளவீட்டுக்காரங்க என்னப்பொண்ணு பாக்க வர்றாங்களாம்… ஊrர்ல உலகத்துல பொண்ணே கெடைக்கலையாம். என்னதான் புடிச்சிருக்காம் அந்த மாப்ள பையபுள்ளைக்கு… அவங்கள ஒரு கை பார்த்துட்டு, ராத்திரிக்கு களி கிண்டி, தூதுவள துவையல் அரச்சி கொண்டுவரேன்… என்ன சரியா… எழுந்திரு சிட்டுக்கவி பாட்டி…
பாட்டி மெல்ல எழுந்தபடி, கண்ணு தேவசேன, நீ கல்யாணம் கட்டிக்கிட்டு, புள்ள குட்டிங்களோடு சந்தோசமா வாழறத நான் பாக்குணும்ல.. உங்கப்பன் உமாசங்கரும் நிம்மதியா இருப்பான்ல…அவனுக்கு, உன்னால கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போச்சு….
நான் வந்த மாப்ளய கட்டிக்கிட்டு போய்ட்டா, உங்கள யாரு பாக்க… அட போ பாட்டி…. நான் போய்ட்டு ராத்திரிவறேன்….
வீட்டுக்கதவில் மாட்டிய குடைய எடுத்துக்கிட்டு வீட்டை நோக்கி ஓடினாள் தேவசேனை….
******
ஹலோ, வணக்கம் சார் உங்க ஏரியா மின்னலூரில மழையில் பாலம் உடைஞ்சி இருக்கு, வண்டிங்க போகாமா மாற்று பக்கம் திருப்பி விட்டிருக்காங்களாம். அந்த பாலத்த கலெக்டர் விஜயலட்சுமி மேடம் பாக்க வர்றாங்களாம்… அந்த ஏரியா இன்ஸ்பெக்டர வர சொல்றாங்க சார் வர்றீங்களா? என்றார் தொலைபேசியில் கலெக்டர் உதவியாளர்,கீதா...
இந்த போலீஸ் வேலை செய்யறவங்களுக்கு சாபகேடு, ஒரு நல்ல விஷயத்துக்கும் போக முடியாது, ஒரு கெட்ட விஷயத்துக்கும் போக முடியாது.. இன்னைக்கு நான் பொண்ணு பாக்க வரேன்னு சொல்லியாச்சு…இப்ப போய் கலெக்டர் வர்றாங்கன்னு சொன்னா என்ன செய்ய? வர முடியாதுன்னா சொல்ல முடியும் கலெக்டர்கிட்ட… பொண்ணு வீட்ல சொல்ல சொல்லி தரகருக்கு, தகவல் சொல்ல வேண்டியது தான்… இன்னைக்கு என் கனவும் அந்த பாலம் போல உடஞ்சி போச்சுங்க… கலெக்டர் வர்றதுக்கு முன்னாடி நான் அங்க இருப்பேன்… சொல்லிடுங்க மேடம். அழைப்பை துண்டித்தார்… இன்ஸ்பெக்டர்ராஜ்.
*******
உனக்கு செலவு செஞ்சி செஞ்சி, நான் ஊர சுத்தி கடன வாங்கிட்டேன் மா… ஆனால் இன்னும் உனக்கு என்ன வியாதின்னு யாரும் சரியா சொல்ல மாட்றாங்களே? சொன்ன நேரத்தில் கடனை திருப்பித்தர நம்ம பூர்வீக நிலத்தையெல்லாம் வித்தாச்சு.. என்றார் அசந்தமித்திரையின் தாய் வனிதா
நிலத்த விக்காம வச்சிருக்கலாம்ல, ஏம்மா கொஞ்ச நாள் கழிச்சி நான் குணமாயிட்டு வேலைக்கு போய் சம்பாதிச்சு கடன அடச்சிடுவேன்லமா, அப்றம் தரேன்னு சொல்லி சமாளிக்கலாம்ல, என்றாள் நோயில் படுத்திருக்கும் அசந்தமித்திரை..
வாயமூடு… என்னை என்ன நினச்ச? பணத்த வாங்கும்போது மட்டும் கரெக்டா, தந்துடறேன்னு நம்பிக்கை வார்த்தை சொல்லி வாங்கிட்டு, அத திருப்பி தர முடியாம, இழுத்து அடிக்கிறவ நான்னு நினச்சியோ? இத கேட்டுக்க, இராமாயணத்துல ராமனும் இராவணனும் சண்ட போடும் போது, இராவணன் தோத்து நிக்கிற நிலைமையில், ராமன் இன்னொரு வாய்ப்பு தர மாதிரி, இராவணனை பார்த்து, இன்று போய் நாளைக்குவான்னு, உயிர்பிச்சை கொடுத்து சண்டையை நாளைக்கு போட்டுக்கலாம்ன்னு சொல்லி அனுப்பிடுவாரு இராவணன கொல்லாமல் அனுப்பியதை நெனச்சி, உயிர்பிச்ச எடுத்து வந்துட்டோமேன்னு, மனம் வருத்தப்படுவத, எதுக்கு உதாரணமா கம்பர் பெருமான் சொல்றாரு தெரியுமா? கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்னு, சொல்றார்னா பாத்துக்கோயேன்னு என் அன்புசெல்வி பாட்டி எனக்கு சொல்லி கொடுத்துருக்காங்க…
ஏன் கம்பரு, பிள்ளையை இழந்த பெற்றோர் போலன்னு சொல்லியிருக்கலாம்… சொத்தை இழந்த பணக்காரன் போலன்னு சொல்லியிருக்கலாம்.. கண்களை இழந்த மனிதன் போலன்னு, இப்படி எத வேணும்னாலும் சொல்லியிருக்கலாம்ல.. ஆனால், கம்பரு "கடன் பட்டார்நெஞ்சம் போல் கலங்கினான்" என சொல்லியிருக்கிறார்னா பாத்துக்கோ.. அந்த காலத்தில் கடன் வாங்கியவங்க, கடனை திருப்பித்தரலனா அப்படி துடிப்பாங்களாம்… அதே போலதான் நானும், என் மகளின் உடம்பு சரியாகனும்னு வாங்கிய கடனை சொன்ன நேரத்தில் திருப்பி தராமல் இழுத்தடிக்க என்னால முடியாது, வாக்கு சுத்தமில்லனா தப்பு. அதுக்கு பதிலா நாண்டுக்கிட்டு செத்து போயிடுவேன்.. அதனால தான் என் பூர்வீக சொத்தை வித்து கடனை அடச்சிட்டேன். இதுக்கு மேல என்கிட்ட பணங்காசு எதுவும் இல்ல உனக்கு செலவு செய்ய…. கல்யாண வயசில இப்படி எந்த நோயினே தொரியாம படுத்துக்கிடக்கிறாளே எம்மக… அசந்தமித்திரையின் அம்மா வனிதா விம்மிகொண்டிருந்த நேரம்…
மா வலிக்குது மா.. தாங்கல மா என்னால.. ஏதாச்சும் கலக்கி கொடுத்துடு மா.. நான் இந்த வலியை தாங்கறதுக்கு பதிலா செத்து போயிடறேன் மா…. என்று வயிற்று வலியில் துடிதுடித்தாள் அசந்தமித்திரை.
கொஞ்சம் பொறுத்துக்கோம்மா, ஆம்புலன்ஸ் வந்துடும், தேவசேனா போன் பண்ணிட்டா.. #hஸ்பிட்டல் போய்ட்டு பாத்துக்கலாம் மா... என்று தனது கண்ணீரை மறைத்து, மகளை ஆசுவாசபடுத்தினாள் வனிதா.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றதும், மக்கள் கூடினா;. அசந்தமித்திரையும் அவளது தாய் வனிதாவும், ஆம்புலன்ஸில் ஏறிய பின், பத்திரம் பா, பாத்து கூட்டிப்போங்க, இதுவரை இந்த கிராமத்தில் இருந்து பட்டிணத்துக்கு யாரும் போனது இல்ல.. பத்திரமா கூட்டிப்போங்க பா… உங்களுக்கு புண்ணியமா போகும்… என்றனர்ஊrர்மக்கள்.
மருத்துவமனை அடைந்ததும், மருத்துவர்அசந்தமித்திரையை பரிசோதித்து,
அசந்தமித்திரைக்கு ரெண்டு கிட்னியும் பழுதாயிடுச்சி, மாற்று கிட்னி பொறுத்தனும் அப்பத்தான் உயிர்பிழைப்பாள். மாற்று கிட்னியும், அதற்கான அறுவை சிகிச்சைக்கு, சேர்த்து மொத்தம் 5 லட்சம் செலவாகும்ன்னு பரிசோதித்த மிகப்பேர்போன மருத்துவர்ஆனிவிஜயா சொன்னதை கேட்டு மனம் பதைத்தாள் வனிதா.
அம்மா, தேவசேனா அக்காக்கிட்ட விவரத்த சொல்லி அனுப்புங்கம்மா, அவங்க என்ன எப்படியாவது காப்பாத்திடுவாங்க… அவங்களால மட்டும்தாம்மா என்ன காப்பாத்த முடியும். யார்கால், கையாவது பிடிச்சி, அவங்க, இவங்க கிட்ட கெஞ்சி என்னை காப்பாத்திடுவாங்கம்மா.. தேம்பினாள் அசந்தமித்திரை…
*******
மாப்பள வீட்டுக்காரவங்க வர்ற நேரமாச்சே…. இந்த கழுதைய காணோமே எங்க போய் தொலஞ்சுச்சோ என குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடை போட்டு கொண்டிருந்த தேவசேனையின் தந்தையை பார்த்து
பெரியவரே எங்க தேவசேனை? என்று கேட்டார் தரகர்
அவ பிரண்டு கலைச்செல்வி வீட்டுக்கு போயிருக்கா.. இதோ வந்திடுவா..
பொpயவரே, மாப்ளைக்கு, ஸ்பஷல்லா கலெக்டர் ஏதோ வேலை வச்சிட்டாராம்.. அதனால அவரால இன்னைக்கு வர முடியாதாம்… தப்பா நினச்சிக்க வேணாம்னு சொல்லி, ரொம்ப வருத்தப்பட்டார்மாப்ள.. ரெண்டு வாரம் கழிச்சி வர்றதா சொல்ல சொன்னாரு.. போலீஸ் வேலைன்னாலே இப்படித்தான். பாவம் அவர்மட்டும் என்ன விதிவிலக்கா?… என முனங்கிக்கொண்டே சென்றார்தரகர்….
நல்ல வேளை, இந்த சனியன் எங்க போய் தொலஞ்சுதோ தெரியல… ஒரு வேள கல்யாணம் பிடிக்கலன்னு எங்காயச்சும் ஓடிப்போச்சோ…. நேரமாகுது… காணலையே…. என்று வாசலையே எட்டி எட்டி பார்த்து ஏங்கி தவித்தார்உமாசங்கர்…. இரவானது பகலை வரவழைத்து மறைந்தது…. ஆனால் தேவசேனை வீட்டிற்கு வரவில்லை….
ஏம்பா தேவசேனை எங்க? துறுதுறுன்னு இங்கையும் அங்கையும் ஓடிட்டு அலைவா, மாப்ள வீட்ல வர்றாங்கன்னு எங்காவது போயிட்டாளா என்ன? வயசு பொண்ணு நேத்து ராத்திரிமுழுசா வீட்டுக்கு வரலன்னா…. தப்பாச்சே….பா… என்றாள் பக்கத்து வீட்டு மெர்லின்...
தேவசேனை காணலங்கற விஷயம் வி&ம் போல் பரவியது…ஊருக்குள்….
*******
அம்மா என்னால முடியல மா வலி தாங்கல மா ….
கொஞ்சம் பொறுத்துக்கோ மா, அமைதியா இரு டாக்டர்வர்றாங்க.. என்ன சொல்றாங்கன்னு தெரியல...
இங்க பாருமா, உங்க மகளோட ஆப்பரேஷனுக்கு, தேவையான பணமும் கிட்னியும் கிடச்சிடுச்சி, 10 மணிக்கு ஆப்பரே&ன்… என்றார்மருத்துவர்ஆனிவிஜயா…என்னம்மா சொல்றீங்க? எப்படிம்மா கிடச்சது? யாரும்மா கொடுத்தது?…
அம்மா, இப்படி கேள்வியை அடுக்கிட்டேபோகாதிங்க. உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருந்தா, ஆப்ரேஷனுக்கு நேரமாயிடும்… கிளம்பி வாங்க…
தாய்நாட்டை விட்டு வெளி நாட்டில் வேலைக்கு சென்று தவறான நிறுவனத்துக்கிட்ட மாட்டிக்கிட்டு தாய்நாட்டுக்கே திரும்ப முடியாதுன்னு தவிக்கும் மனுஷன் கிட்ட, நீ உன் நாட்டுக்கு போகலாம்ன்னு சொன்னா எப்படி சந்தோஷப்படுவானோ அப்படி துள்ளி குதித்தாள்... அசந்தமித்திரையின் தாய்..
அம்மா, தேவசேனை அக்காகிட்ட தகவல் சொல்லியாச்சா? நான் ஆப்பரேஷனுக்கு போகமுன்னாடி அக்காவ ஒரு முறை பார்த்துட்டு போக ஆச படுறேம்மா…
இப்பமட்டும் என்னமா.. ஆப்பரேஷன் முடிச்சி ரெண்டு வாரத்துல ஊருக்கு போய்ட்டு அக்காவ பார்த்துக்கலாம்… எவரோ புண்ணியவான் உதவி செஞ்சிருக்காங்க… அத இத நினச்சிட்டு இருக்காம அமைதியா இருமா… நல்லபடியா ஆப்பரேஷன் முடிச்சி நீ உயிரோடு பத்திரமா திரும்பி வந்துட்டா போதும் எனக்கு…
*******
சோறு தண்ணி எடுத்துக்காம இப்படி கிடந்தா எப்படி, எங்க போயிருப்பா தேவசேனை? உன்ன விட்டுட்டு ஒரு நாள் கூட பிரியமாட்டாளே… நீ அவ இல்லன்னா சாப்பிடாம பசியில இருப்பன்னு அவளுக்கு தெரியுமே… ஒரு வாயாவது எடுத்துக்கய்யா… என்றாள் பக்கத்து விட்டு பிரேமா
வேண்டாம் மா. எம்புள்ளக்கு புடிக்காத கல்யாணத்த நடத்த பார்த்தேன்… இப்ப எம்மகள இழந்துட்டு நிக்கிறேன்… அவ அப்பவே சொன்னா எனக்கு கல்யாணம் வேணாம்னு.. நான் தான் கேக்கல… மடப்பயன்… இப்ப அவள எங்க போய் தேட.. இன்னும் ஒரு நாள் பார்க்கலா... இல்லன்னா போலீஸ்ல புகார்கொடுத்துடலாம்….
தரகருக்கு தொpஞ்சா கல்யாணம் நின்னு போய்டும்… சாமி புண்ணியத்துல, மாப்ளைக்கு கலெக்டர்ஏதோ வேல வச்சிட்டாராம்.. தரகர்சொன்னாரு. அன்னைக்கு மட்டும் மாப்ள வீட்டுக்காரங்க வந்திருந்தா என்ன ஆயிருக்கும்.. எம்மான மரியாத போயிருக்கும்… அவங்க வர்றதுக்குள்ள இவ வீடு திரும்பிட்டா நல்லாயிருக்கும்… கடவுளே நான் என்ன செய்ய… எம்மகளுக்க என்ன ஆச்சோ… எங்க இருக்காளோ? தெரியலையே…. என நொந்துக்கொண்டார்…
*******
ஆப்ரேஷன் சக்ஸஸ் மா. உங்க பொண்ணு, இனிமே எல்லாரபோலயும் நல்லா இருப்பா.. அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம், குழந்தை பெத்துக்கலாம், இனி எந்த கவலையும் வேண்டாம். இரண்டு வாரத்தில் டிஸ்சார்ஜ்பண்ணிடுவாங்க, அப்றம் உங்க ஊருக்கு போய்டலா சரிங்களா…
ஒரு கிட்னி இருந்தா பரவாயில்லையா மா? ஒரு கிட்னி இருக்கிறதுனால எந்த பிராபுலமும் வராதுமா.. ஆரோக்கியமா நூறு வரு&ம் வாழுவா உங்க மக.. கவல படாம போங்க…
இவ்வாறு பேசிக்கொண்டிருந்த சமயம், இன்ஸ்பெக்டர் ராஜ்மருத்துவமனையில் இருப்பதை மருத்துவர் ஆனிவிஜயா பார்த்து,
ஹலோ ராஜ்சார்என்ன இந்த பக்கம்…
மந்திரிக்கு கிட்னில ஸ்டோனாம்.. இங்க தான் அட்மிட் பன்ன வர்றாங்களாம் அதனால அவர்பாதுகாப்புக்காக அவருக்கு முன்னாடியே வந்து நான் என் கடமையை செய்யணும்ல…
நீங்க என்ன டாக்டர்… இப்பத்தான் ஆப்ரேஷன் தியேட்டர்லர்ந்து வெளிய வந்திருக்கீங்க போல…
ஆமாங்க சார்ஒரு இன்ட்ரஸ்டிங் கேரக்டர் வாங்க பேசிக்கிட்டே நடக்கலாம்…
*******
டாக்டரம்மா, ரெண்டு வாரம் ஆயிடுச்சி, நாங்க இன்னைக்கு ஊருக்கு போறாம், அதுக்கு முன்னாடி உங்கள கெஞ்சி கேட்குறேன். யாரும்மா எம்புள்ளைக்கு உதவினாங்க.. அவங்களுக்கு என் நன்றிய சொல்லணும். என் வாழ்நாள் வரைக்கும் அவங்க தான் என் குலசாமி மா… கண்கலங்க தொண்ட தழுதழுக்க கேட்டாள் வனிதா…
உதவி செய்யறவங்க கர்த்தருக்கு சமம்…. அது யாருன்னு தெரியாமலே போகட்டும்… நீங்க நல்லபடியா போய்ட்டு வாங்கமா 6 மாசம் கழிச்சி ஒரு செக்கப்க்கு தவறாம வந்துடணும்.. போய்ட்டு வாங்க.. என சொன்னார்...ஆனிவிஜயா..
நன்றிங்கமா சரியா வந்துடறேன் புள்ளைய கூட்டிட்டு.. நன்றிமா..
அம்மா, டாக்டர் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துட்டியா மா… வண்டில பத்திரமா ஏறுமா.. போலாங்க வண்டிய மெதுவா ஓட்டுங்க ஆப்பரேஷன் முடிஞ்சி பாவப்பட்ட உடம்புக்காரி. பத்திரமா ஓட்டுங்கய்யா தம்பி.. சரிங்கம்மா..
ஊரு வந்துடுச்சி.. ஆம்புலன்ஸை பார்த்ததும் அக்கம் பக்கம் உள்ளவார்கள் கூடி, அசந்தமித்திரையும் அவங்க அம்மாவும் வந்துட்டாங்க எல்லாவாங்க.. என்றனர்.
பாத்து பாத்து பத்திரமா இறங்குடா கண்ணு… அந்த பேக்க எடுத்து கீழே வைங்க.. இந்தாங்க தம்பி இத வச்சிக்கோங்க இவ்ளோ தூரம் எம்பொண்ண பத்திரமா கூட்டிட்டு வர ஆம்புலன்ஸை அலுங்காம குலுங்காம ஓட்டி வந்திங்க நன்றிபா தம்பி.. பாத்து பத்திரமா போங்க..
இவள பத்திரமா புடிச்சி வீட்டுக்குள்ள கூட்டிட்டு போங்க.. என்றார்இல்ல பாட்டி நான் மெதுவா நடந்துடுவேன் என்றபடி அவளை சுத்தி ஐம்பது பேர்நின்றாலும் தேவசேனையை தேடியது அவள் கண்கள்.. அக்கா எல்லாருக்கும் ஓடுமே.. என் விஷயத்தில் அக்கா ஏன் வராம இருந்துடுச்சி, என்ன பாக்கக்கூட வரலியே.. அது முகத்த பாக்கணும்னு தேடியது அவள் கண்கள் நாளா பக்கமும் துளாவியது தேவசேனையை. கண்களுக்கு அகப்படவில்லை. வருத்தம் மேலோங்கியது.
*******
பெரியவரே, ரெண்டு வாரம் கழிச்சி மாப்ள வீட்டுக்காரங்க வர்றதா சொன்னேனே, அவங்க ஊருக்குள்ள நுழைஞ்சிட்டாங்க. பொண்ண தயார்செய்யுங்க.. என்றார்தரகர்...
அய்யோ, என்ன சொல்ல, பொண்ணு என்ன தவிக்க விட்டுட்டு, வீட்டவிட்டு வெளிய போயிட்டான்னு சொல்லவா? ஓடிப்போச்சுன்னு சொல்லவா? … என தனக்குள் யோசித்தபடி பாpதவித்தார்.
ஜீப் தெருவுக்குள் நுழைஞ்சிடுச்சி, நீங்க என்ன இப்படியே உக்காந்துட்டு இருக்கீங்க? பரபரத்தார்தரகர்
அய்யோ நான் என்ன பண்ணுவேன்? என்ன சொல்லி சமாளிக்க புரியலையே கைகளை பிசைந்தபடி மனசுக்குள் புலம்பி தவித்தார்.
ஜீப் வீட்டு வாசலில் நின்றது… அந்த நேரம் திடீரென ஊரே பிரகாசமாய் ஒளிர்ந்தது.. இருட்டு வானில் பிரகாசிக்கும் நிலவு போல் ஆயிரம் ஊர்மத்தியில் கொடிநிலாவூர்பிராகாசித்தது. திறக்காத அதிசய கதவு திறக்கும் சப்தம் மக்களின் காதுகளை துளைத்தது... அசந்தமித்திரை வீட்டில் குழுமியவார்கள் வெளியில் திபுதிபுவென வந்தனர்அசந்தமித்திரை உட்பட..
அந்த வெளிச்சத்தை பார்த்து, சத்தத்த கேட்டு, படுத்த படுக்கையாய் கிடந்த நூற்றாண்டை தொட காத்திருக்கும் பாட்டி ராகிணி, தட்டு தடுமாறியெழுந்து கண்கள் பரவசத்தோடு முகத்தில் சந்தோஷம் பீச்சிட, இராணிகவிநிலா உத்திரவு கொடுத்துட்டா.. யாரோ அவ மனச அபிஅபிஷேகம் செய்யுறமாதிரி, அடுத்தவருக்கு உச்சகட்ட உதவி செய்து, அந்த சாலையை கடக்க பாத்துருக்காங்க, ஊரை சுத்தி வராம ஊருக்குள் எளிதா வர கதவு திறக்குது… அந்த அதிசய கதவு திறக்குது போங்க போய் பாருங்க அந்த தியாகி யாருன்னு பாருங்கன்னு என கத்தி சொல்ல முடியாம மெதுவா நடுநடுங்கி சொன்னதை கேட்டு, நடையும் ஓட்டமுமாக விரைந்தார்கள் அந்த அதிசய கதவை நோக்கி…
சைரன் சத்தத்துடன் ஊரின் பிரதான நுழைவு வாயில் அதிசய கதவு திறக்க ஊருக்குள் நுழைந்தது ஆம்புலன்ஸ். ஊர்மக்கள் இமை விரித்தனா. என்னது இறங்குவது தேவசேனையா.. ஆமாம் அகிலா பாட்டி நான்தான். ஏய் உமாசங்கர்,உம்பொண்ணு வந்துட்டாபாரு. என்னம்மா நீ ஆம்புலன்ஸ்ல வந்து இறங்குற… அப்பா, எனக்கு அம்மா இல்லாத மாதிரிஅசந்த்தமித்திரையும் அப்பா இல்லாத பொண்ணுபா.. அவளுக்கு, கிட்னி பழுதடஞ்சிடுச்சின்னு எனக்கு சுகாதார துறையில இருக்கிறவங்க அரசல்பிரசலா பேசிக்கிட்டாங்க. அதனால தான்பா அவபோனஹாஸ்பிட்டலுக்கு யாருக்கும் சொல்லாம போயிட்டேன். சொன்னா நீங்க யாரும் கிட்னி தானம் செய்ய ஒத்துக்கமாட்டிங்க. கிட்னி தானம் செய்வதால் எந்த பிரச்சனையும் வராதுன்னு நான் நல்லா புரிஞ்சிக்கிட்டு தான் தானம் செய்ய போனேன்பா..
மீதியை நான் சொல்றேன்னு இடை மறித்தார் இன்ஸ்பெக்டர்மாப்ள.. ஆப்ரேனான ஹாஸ்பிட்டல்ல தான், நான் டியூட்டிக்கு போனேன். அப்ப டாக்டர் ஆனிவிஜயா சொன்னாங்க... எல்லா விஷயத்தையும். பெட்ல படுத்திருந்தது தேவசேனைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். இவசெய்த தியாகத்துக்கு என்ன கொடுத்தாலும் தகாதுன்னு சொல்லி முடிக்கும் முன் மாப்ளயின் அம்மா, வாடான்னு மாப்ள கைய பிடிச்சிஜீப்பை நோக்கி இழுத்துட்டு போய்ட்டே இருந்ததை பார்த்தாள் தேவசேனை. பெரியவரே, இவ பண்ண வேலைக்கு நல்ல மாப்ள கைநழுவி போய்டுச்சி. இனியாருஇவள கல்யாணம் செய்துக்குவாங்க என்றார்தரகர்... அழுதபடி தேவசேனையை மெல்ல அழைத்து சென்றார்அவளது தந்தை... ஓடமுடியாமல் ஓடிவந்து கட்டி அணைத்தாள் கண்ணீர்மல்க அசந்த்தமித்திரை, அக்கா, நீ வரல நீ வரலன்னு நினைச்சேன்.. உனக்காக ஏங்கினேன் தெரியுமா?.
இல்லடா உனக்கடுத்த அறையில் தான் நான் இருந்தேன். நீ என்ன பாக்கலைனாலும், நான் உன்ன பாத்துட்டே இருந்தேன் தெரியுமா? என்று சொல்லிக்கொண்டே, தலையை சிறிது திருப்பிஜீப்பை ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டே மெல்ல நடந்தாள் தேவசேனை…
என் கொலசாமியேன்னு ஓஓஓ என்று தேவசேனையை கட்டி அழுதாள் அசந்தமித்திரையின் தாய்.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லம்மா, என்கிட்ட ரெண்டு கிட்னி இருந்துச்சி ஒன்ன கொடுத்தேன். அவ்ளோ தான், அவளுக்கு மூளையில் பிரச்சனைன்னா நான் உதவி செஞ்சிருக்க முடியாது, ஏன்னா என்கிட்டதான் மூளையே இல்லையே என்று அப்போதும் கிண்டலடித்து இதழ்கள் சிரித்த போதும், அவளது கண்கள் ஜீப்பை நோக்கியே இருந்தது..
ஜீப் ஸ்டார்ட் செய்து தெரு முனைவரை சென்றுவிட்டது. தேவசேனையின் கண்கள்ஜீப்பின் திசையையே நோக்கியது..
ஏன்டா உனக்கறிவிருக்கா இந்த பொண்ணு ஒரு கிட்னிய கொடுத்துட்டா, உன் இல்லற வாழ்க்க சந்தோஷமா இருக்குமாடா? இவள வச்சிக்கிட்டு நாம என்ன செய்ய? இதவீட்லையே சொல்லி தொலச்சிருக்க வேண்டியது தானே? நீயெல்லாம் ஒரு இன்ஸ்பெக்டர்... பொண்ண தேர்ந்தெடுக்ககூட தெரியலையே உனக்கு. ஆரோக்கியம் இருந்தா தான் வாழ்க்கை இனிக்கும்டா..
இல்லம்மா... போலீஸ் வேலையில குற்றவாளிகளால் எனக்கு எந்த நேரத்திலையும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு என் கைகளை வெட்டலாம், முகத்தில் ஆசிட் அடிக்கலாம், பிளேடால கீறிட்டு போகலாம், ஆக்ஸிடென்ட் பண்ணலாம் அதுல எனக்கு எதுவேணா நேரலாம், நான் அவலட்சணமா ஆனா கூட, இந்தப் பொண்ணு போல மனசு இருந்தா என் வாழ்க்கை நல்லா இருக்கும்மா.. பணத்துக்கு ஆசபடலமா அவ.. அவ கல்யாணத்துக்கு வச்சிருந்த நகையெல்லாம் டாக்டர் ஆனி விஜயா கிட்ட கொடுத்துட்டா ஆப்ரேஷனுக்காக.. இந்த மாதிரிஅடுத்தவங்க மகிழ்ச்சியா இருக்கனும்னு தனக்கான எல்லாத்தையும் கொடுத்து, உதவ நினைக்கிற பொண்ணு எங்கம்மா கிடைக்கும்? நீங்களே சொல்லுங்க.. என்றதும் மாப்ள அம்மா காயத்திரி கண்கலங்கி போனாள்.. ஜீப்பின் டயர் திரும்பியது தேவசேனையின் வீட்டை நோக்கி…..
இராணிமாதேவி கவிநிலா, தேவசேனைக்கு ஆசி வழங்கி, அதிசய கதவினை மூடினாள்.. நான் மீண்டும் ஒரு முறை அந்த அதிசய கதவு திறப்பதை பார்த்துவிட்டேன்… இனி அந்த அதிசய கதவு திறக்கும் நாள் எந்நாளோ?... அடுத்தவருக்கு உச்சகட்ட உதவி செய்வது தான், அந்த கதவை திறக்கும் சாவி என்று ஊர்நம்பியது.. நான் சொன்னது பொய்யாகவில்லை.. என்ற நிம்மதி பெருமூச்சுடன் அந்த பாட்டி ராகிணி கண்களை மூடினார்நிம்மதியாக உறங்க…
கதவை மூடியும் பிரகாசம் குறையவில்லை கண்களுக்குள்…. "ஊர்மக்கள் எல்லோரும் தன்னலம் துறந்து பொதுநலத்துடன் செயல்பட்டால் அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக வாழ்ந்தால்" அந்த கதவை மூட வேண்டிய அவசியமில்லை என்று கனவில் இராணிமா தேவி காது கிழிக்க சொன்னதை கேட்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் பாட்டி ராகிணி… ஆமா ஆணித்தரமான உண்மை. நானும் 98 வருடங்களாக உயிருடன் இருக்கிறேன் நான் செல்லும் போது இதுநாள் வரை கதவு திறக்கவே இல்லையே.. ஊருக்கெல்லாம் கதசொல்லிட்டிருந்தோம் ஆனா நாம அந்த அதிசய கதவு திறக்கும் அளவு எதுவும் அடுத்தவருக்காக செய்யலியே. அந்த கதவு திறக்கும் உக்தி, சாவியை பற்றிய ரகசியம் தெரிந்தும் அதனை திறக்க நான் முயற்சிக்கலியே…என் ஆயுள் முடியபோகுது.. இப்ப யோசித்து பயன் என்ன? விடிந்ததும் ஊர்மக்களுக்கு சொல்லணும் ஆயுசிருக்கும் போதே அடுத்தவர் மகிழ்ச்சிக்கு நம்மாள முடிஞ்சத செஞ்சிடுங்க, என்னைப்போல ஆயுசு முடியும்போது யோசிச்சா பயன் இல்லன்னு சொல்லணும்…. அந்த கதவ மூடாம பார்த்துக்கோங்கண்ணு சொல்லணும்…. என்று முனங்கிக்கொண்டே தன்னுடலை கண்ணயர மெதுவாய் சாய்த்தாள் திண்ணையில்...
அறம் என்றால் அவள், அறம் செய்யவும் மறம் வேண்டும். அறம் மறம் இரண்டும் நிறைந்த இராணிமா தேவி, தேவசேனை போன்ற உள்ளங்கள் உலகில் உதவிக்கொண்டு உலா வரட்டும்…






Users Today : 23
Total Users : 107810
Views Today : 30
Total views : 435777
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90
Devasenavil ungalai paarkiren..
Nice story
Aram bodhikkum paadam
Awesome story I enjoyed it. Devasena and inspector super character
Aram endraal aval miga poruththamaana thalaippu. Devasena gunam Pol anaivarukkum irundhaal naadu nalam perum
Kadhai gramathu solladalil எழுதியது அருமை… தேவசேனா உச்ச கட்ட தியாகம் அருமை . இது அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.. குறும் படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்…
Story very nice. Mrvelous Concept
Kadhai Karu nandru. Irudhi mudivu sirappu .
Kadhai sirpunga.. idhu Pol kadhaigalai thodarndhu padaiungal….
Madam ungal manadhil ulla arathai kadhai aakki tinga
Kadhai arumai
Kadhai aasiriyar kadhaiyai miga nerthiyaai kondu sendru araththai bodhikiraar vaazhthukkal
Ungal kadhai sirappu amma ungal ennam pol kadhai selgiradhu vaazhthukkal. Devasenavil ungalai paarkiren
அருமை mam.
விருவிருப்பன கதை.
*பொது நலம் *
தேவசேனையின்
*அறம் என்றால் அவள் *
கதையில் தேவசேனை
நிஜத்தில் ஷீலா மேரி
வாழ்த்துக்கள் mam 💐💐💐💐🌹🌹
Superb
Sirappaana kadhai amaippu.
Arumai story.
Super, kadhai Karu அருமை. Finishing touching scenes
அருமையான கதை. வாழ்த்துக்கள்
அருமையான கதை