01 Feb 2020 10:11 pmFeatured
(சிறுவர் கவிதை)
கவிஞர் இரஜகை நிலவன்,
மும்பை
நிலவின் முகத்தைப் பிரதிபலிக்கும் சின்ன நிலவே!
நிஜத்தை சுமக்கும் ஐம்பொன்னே.. பைங்கிளியே!......
மலரே…. மலரின் அழகே.. மகரந்த முகிலே….
மனதில் பொலிவாய் மகிழ்ச்சி தரும் ஆதவனே….
குழந்தைச் செல்வமே.. – அன்பைக்குழைத்து ..
குவலயமாய் அள்ளித்தரும் மகிழ்வின் உருவே…
குல விளக்கே.. –செம்பவழ இதழ் திறந்து சிந்துகின்ற
குயவன் கை சிற்பமாய் விளைந்த சிற்றருவியே!....
வெண்பனியின் தூய்மையைத் தாங்கிய இதயமே!
வெண்ணிலவின் கலக்கமின்றி பூமிக்கு வந்த அன்பின்
வெண்புறாவே! உண்மையைத் தூண்டும் விளக்கே!
வெண்கல பிரதிபலிப்பின் மறு ஒளிபரப்பே!
இறைவன் வந்து உன்னிடம் என்ன வரம் வேண்டுமெனக்
கேட்டால் – என்றும் குழந்தை மனம் கொண்ட
மானிடனாய் வாழ்ந்திட வேண்டுமென்றே வரம்
கேட்டு பூமியில் புனிதனாய் நீ வாழ்ந்திட வேண்டுமன்றோ!
இல்லை என்போருக்கு உதவிக்கரம் நீட்டிடவும்
இவ்வுலகில் இல்லாமை இல்லை என்றே ஆகிடவும்
அன்பின் மாட்சியைப் பாரெங்கும் பரப்பிடவும்
அவனியில் தீங்கின்றி அனைவரும் வாழ்ந்திடவும்ஆண்டவனை அன்புடன் கேட்டிட வேண்டுமன்றோ