07 Mar 2021 5:01 pmFeatured

பாவரசு முனைவர் வதிலை பிரதாபன்
(துணைச் செயலாளர், புறநகர திராவிட முன்னேற்றக் கழகம்)
தன்னடக்கத் தலைமகன் தமிழாய்ந்த பெருமகன்
உள்ளடக்க நினைவினில் வேட்கைதனைக் கொண்டது
தென்றலொன்று மறைந்தது தேன்தமிழைத் துறந்தது
நெஞ்சந்தனில் நிறைந்தது நேர்வழியில் கரைந்தது
எண்ணங்களில் மிதந்தது ஏன்பிரிந்து போனது?
ஆழ்மனத்துச் சிந்தனையில் ஆர்ப்பரித்துத் திரிந்தது
ஆடம்பரக் கருத்தியலை அமைதிகொண்டு வென்றது
புயல்வடிவச் சிந்தனையில் பூமணக்க வைத்தது
பொன்மனத்துப் போக்கினை பதியமிட்டுச் சென்றது
அன்பிணைந்த நட்பினை அள்ளியள்ளித் தந்தது
அவனிதனில் அறிவினை ஆட்கொண்டு எழுந்தது
அக்கரையில் உள்ளோரும் அடிதொழுகச் செய்தது
அண்ணலவர் கரந்தனில் அறவரிசை பதித்தது
ஆயுள்நிறை கடந்தினும் அசையாது ஒளிர்ந்தது
தன்மான வேட்கையை தரணிதனில் விதைத்தது
தமிழாய்ந்த சொற்களால் தகைமையுடன் மிளிர்ந்தது
தலைமையிட்ட பணிதனை தலையுயர்த்திச் செய்தது
தானென்ற அகந்தையை தரம்பிரித்து வென்றது
தன்தலைவர் கலைஞரின் தகைமைவழி கொண்டது
தனைப்போற்றும் தமிழனை தமிழ்போற்ற வைத்தது
இயக்கத்தின் வழிதனில் இடிமுழக்க உரையினால்
இதுகாறும் அறியாதோர் இயலாத போக்கினை
இடித்துரைத்துச் சொல்லியே இயங்கிடவே சொன்னது
இனமான மென்றதோர் எழிலார்ந்த வார்த்தைக்கு
இலக்கணமாய் வந்தேதான் இலக்கியத்தில் நின்றது






Users Today : 62
Total Users : 105931
Views Today : 97
Total views : 433513
Who's Online : 1
Your IP Address : 18.97.14.90