21 Mar 2020 5:12 pmFeatured
தூரம்...
-கவிஞர் கா.பாபுசசிதரன்
பக்கத்து பக்கத்து வீடுதான்
எங்களுக்குள் பெரிதாக
அறிமுகம் ஒன்றும் இல்லை
நாங்கள்.,
பேசிக்கொண்டதும் கிடையாது
அவர்கள்தானா
என்ற சந்தேகத்துடன்
மின்தூக்கியில் பயணிக்கும்போது
சில நேரங்களில்
புன்முறுவலுடன் கடந்துள்ளோம்
சுதந்திரம்.,
யாருக்கு என்றே தெரியாத
சில கொடியேற்றங்களில்
கூட்டத்தோடு கூட்டமாக
நாங்களும் நின்றுள்ளோம்…
காம்பவுண்டு சுவற்றுக்குள்
சுதந்திரமாய் இருக்கும்
என் குழந்தைகள்.,
அவர் குழந்தைகளின்
பெயர் சொல்லி
அழைக்கும் போதும்
எங்களுக்குள்
எந்த குற்ற உணர்ச்சியும்
ஏற்பட்டதில்லை…
கார்… பணம்… வசதி வாய்ப்புகள்
அனைத்தும் இருந்தும்
ஏதோஒரு வாசத்தால்
எங்களுக்குள்
அறிமுகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
நான்.,
கொஞ்சம் நீர் கூட ஊற்றாத
அவர்கள் வீட்டுத் தொட்டியின்
பெயர் தெரியாத
ஒரு பூச்செடி..!!