முனைவர் ம.வி. வைத்திலிங்கம்
தாவரங்களின் தியாகத்தையும்
விலங்குகளின் வாழ்வையும்
மனிதர்களின் ஒற்றுமையையும்
வாழ்த்தும் பூமியாய்
எட்டுத் திசைகளில்
இணையும் மலைகளில்
கோபுர உயரத்திலிருந்து
கொட்டும் அருவியாய்
இளங்காற்றும் கடலும்
அமைதியான மாலையும்
இசைந்துத் தழுவும்போது
அசைந்தாடும் தென்றலாய்
சந்திரனையும் சூரியனையும்
மழையையும் வெயிலையும்
இரவையும் பகலையும்
இயக்கும் ஆகாயமாய்
அடர்ந்த காட்டில்
அமாவாசை இருட்டில்
இரவு முழுவதும்
ஒளிரும் தீபமாய்
ஆசையாய் அலங்கரித்து
இயற்கையின் எழிலோடு
ஒப்பிட்டுப் பார்க்கும்போது
ஒழுகும் அழகாய்
பெண்மையின் அன்பை
வண்ண வாசமலராய்
ஆண்மையின் பண்பை
அரண்மனைக் கோட்டையாய்
எண்ணம் உணர்ச்சியோடு
எழுச்சியொலிப் பெற்று
கருத்துக்களை கலைவார்த்தைகளில்
கவிதையாய் பிரசவிக்கிறது
உயிர் மெய்
உயிர்மெய் ஆயுதம்
எழுத்துக்களை இசைக்கும்
எழுத்து இலக்கணம்
இடை உரி
பெயர் வினை
சொற்கள் ஆளும்
சொல் இலக்கணம்
சொற்களைச் சேர்த்து
பாடலாக! வாக்கியமாக!
கருத்தோடு பயணிக்கும்
பொருள் இலக்கணம்
ஓசையின் பாசையில்
ஒருங்கிணையும் சொற்களை
கவிப்பாடலாய் உருவாக்கும்
யாப்பு இலக்கணம்
எழுத்தும் சொல்லும்
பொருளும் யாப்பும்
அகம்-புறத்தை அழகாக்கும்
அணி இலக்கணம்
வெற்றியின் இரகசியத்தை
விளக்கிக் கூறுவதற்கு
விவேகத்தின் அவசியத்தை
வலியுறுத்தி நிற்பதற்கு
காதலையும் மணத்தையும்
கொடையையும் வீரத்தையும்
ஆக்கமாய் ஊக்கமாய்
அழகாய் வெளிப்படுத்த
உயிரும் உடலுமாய்
எலும்பும் தசையுமாய்
இரத்தமுமாய் ஐந்தையும்
அறிந்துணர்பவன் கவிஞன்