Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மகாராஷ்டிரா சிவசேனா ஆட்சிக்கு சிக்கல்!?

22 Jun 2022 1:39 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
Uddhav Thackeray

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால், அந்த மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்பியுள்ளனர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்குமாறு கட்சித் தலைமையிடம் கோரியதாகவும், இதற்கு கட்சி தலைமை மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது செல்வாக்கை காட்டும் வகையில், 25 எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மொத்தம் 285 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 143 ஆகும். இதில் மகாராஷ்டிரா விகாஸ் அகாதிக்கு 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். குறிப்பாக, சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.க்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 52 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

பா.ஜ.க. கூட்டணிக்கு 119 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 25 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினால், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்படும்.

இந்த நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளையும், அரசு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சரிடம் கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.

செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், "மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை எந்த முன்மொழிவும் வரவில்லை. கட்சியிடம் இருந்தோ, ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்தோ எந்த முன்மொழிவும் வரவில்லை. அரசியலில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலுக்குப் பின்னர் சிவசேனாவின் 13 எம்.எல்.ஏக்கள் திடீரென தலைமறைவானதால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

காலியாக உள்ள 10 எம்.எல்.சி இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது, சட்டமேலவைக்கான (எம்.எல்.சி).உறுப்பினர்களை எம்.எல்.ஏக்கள்தான் வாக்களித்து தேர்ந்தெடுப்பர்.

மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக- 106; சிவசேனா 55; தேசியவாத காங்கிரஸ்-51; காங்கிரஸ் 44; இதர கட்சிகள், சுயேட்சைகள்- 29. மொத்தம் உள்ள 288 எம்.எல்.ஏக்களில் 285 பேர் இத்தேர்தலில் வாக்களித்தனர். சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லடாகே கடந்த மாதம் காலமானார். தேசியவாத காங்கிரஸின் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் இருவரும் சிறையில் உள்ளதால் வாக்களிக்கவில்லை.
மொத்தம் 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலா 2 வேட்பாளர்களையும் பாஜக 5 வேட்பாளர்களையும் நிறுத்தியது. 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. நேற்று மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒரு எம்.எல்.சி. வெற்றி பெற மொத்தம் 26 எம்.எல்.ஏக்கள் தேவை.

இதனடிப்படையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 2 இடங்களிலும் பாஜக 4 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். ஆனால் நேற்று நடைபெற்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் வென்றது.

அதாவது காங்கிரஸ், சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் கொறடா உத்தரவை மீறி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்ததால் இந்த வெற்றி சாத்தியமானது. அண்மையில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலிலும் பாஜக இதேபோல ஒரு வெற்றியை பெற்றது.

அடுத்தடுத்து பாஜகவுக்கு மறைமுகமாக ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 13 சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் திடீரென தலைமறைவானது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

தலைமறைவான 13 சிவசேனா எம்.எல்.ஏக்களும் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாநிலங்களில் ஆட்சிகளைக் கவிழ்க்கக் கூடிய ஆபரேஷன் தாமரையை மகாராஷ்டிராவிலும் பாஜக தொடங்கிவிட்டதா என அரசியல் நோக்கர்கள்
சந்தேகம் எழுப்பி வருகின்றனர்

கட்சி நடவடிக்கை பாயும்

மகாராஷ்டிராவில் அதிஉச்ச அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் சிவசேனா கட்சியின் 33 எம்.எல்.ஏ.க்கள் இன்று முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்தனர். மேலும் போர்க்கொடி தூக்கிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சி நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் 13 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான இந்த கலகக் குரல் எம்.எல்.ஏக்கள் தற்போது பாஜக ஆளும் குஜராத்தின் சூரத் நகரில் முகாமிட்டுள்ளார். இம்முகாமில் மேலும் பல சிவசேனா எம்.எல்.ஏக்கள் இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களையும் மும்பைக்கு வரவழைத்தது சிவசேனா. அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 33 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும் முதல்வர் உத்தவ் தாக்கரேவை 33 எம்.எல்.ஏக்களும் சந்தித்து தங்களது ஆதரவை உறுதி செய்தனர்.

அதேநேரத்தில் குஜராத்தின் சூரத் ரிசார்ட்டில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க சிவசேனா தலைவர்கள் முயற்சித்தனர். அக்கட்சியின் மிலிந்தர் நர்வேகர், ரவீந்த பதாக் ஆகியோர் சூரத் சென்றனர். ஆனால் இருவருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.

மேலும் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடிய தூக்கிய அத்தனை எம்.எல்.ஏக்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் சிவசேனா எச்சரித்துள்ளது. இதனிடையே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தங்களது எம்.எல்.ஏக்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக உள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார்

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் பாஜக மேற்கொண்ட 3-வது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி. எம்.எல்.சி. தேர்தலில் அனைத்து எம்.எல்.ஏக்களும் எங்கள் கட்சிக்கே வாக்களித்தனர். கட்சி மாறி வாக்களிப்பது என்பது அரசியலில் புதியது அல்ல.

தற்போது சிவசேனாவில் கலகக் குரல் எழுப்பியுள்ள ஏக்நாத் ஷிண்டே, முதல்வராக ஆசைப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அது சிவசேனா கட்சியின் உள்விவகாரம். சிவசேனா கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் உறுதியாக ஆதரிப்போம். தற்போதைய சூழ்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் எந்த ஒரு மாற்றமும் தேவைப்படவும் இல்லை என்றார்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092571
Users Today : 10
Total Users : 92571
Views Today : 14
Total views : 410281
Who's Online : 0
Your IP Address : 18.221.24.133

Archives (முந்தைய செய்திகள்)