16 Feb 2022 2:11 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-63
படைப்பாளர் - செ. தரணிக்குமார்
கயல், எட்டு வயது சிறுமி. தன் கையில் தண்ணீர் நிறப்பப்பட்ட சிறிய ஓட்டை வாளியுடன் பரபரப்பாக நடந்து வந்துகொண்டு இருக்கிறாள். வாளியின் ஓட்டையில் இருந்து சிந்தும் நீர் துளிகளை விட அவள் வேகத்தினால் அங்கும் இங்கும் சிதறும் நீர் அதிகமே. தன் வீட்டிற்கு முன்னே இருக்கும் சிறிய தோட்டத்திற்கு அருகில் வருகிறாள், அங்கே இரண்டு செடிகள் உள்ளது, ஒன்று கத்தரிச்செடி மற்றொன்று ரோஜாச்செடி, கயல் கொண்டு வந்த தண்ணீர் முழுவதையும் ரோஜாச்செடிக்கு ஊற்றுகிறாள்,
அவளுக்கு கத்தரிச்செடியின் மேல் இருந்த வெறுப்பு ரோஜாச்செடியின் வளர்ச்சியில் தெரிகிறது. கயலிடம் அடிக்கடி வம்பிலுத்து விளையாடும் பக்கத்து வீட்டு பிரபு இந்தமுறை அவளின் தலையில் அடித்துவிட்டு ஓடுகிறான், அவனை துரத்திக்கொண்டு கயல் ஓடுகிறாள். ஓடிய தூரம் அதிகமும் இல்லை, சண்டை முடியவும் இல்லை அனால் இருவரும் ஒரு இடத்தில் நிற்கின்றனர், தன் முன்னே எதையோ அபூர்வ பாணியில் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் இருவரும்.
அவர்களுக்கு எதிர்ப்புறத்தில், ஞாயிற்று கிழமையிலும் கட்டிட வேலை பரபரப்பகாக நடந்து கொண்டிருக்கிறது, ஒரு இயந்திரம் கீழே இருந்து அடுக்கி அனுப்பப்படும் செங்கற்கள்களை மேலே இழுத்து செல்கிறது, பெரியளவிலான கட்டிடம் கட்டுபவர்கள் பயன்படுத்தும் பிரத்யேக இயந்திரம் அது, இப்போது அந்த இயந்திரம் செல்வந்தர் திரு ராஐலிங்கனாரின் பழைய நான்குமாடி வீட்டை மறுசீரமைக்கவும் புதிதாக ஐந்தாவது மாடி ஒன்றை கட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இயந்திரம் உச்சத்திற்கு செல்வதை கயலும் பிரபுவும் பார்க்கின்றனர். அப்போது வேலையாள் ஒருவர் 'பாப்பா அங்குட்டு போய் வெளாடுங்க கல்லு மண்ணு மேல விழுந்துற போவுது'. கயல் தன் அருகில் நிற்கும் பிரபுவை எதிர்பாராத நேரத்தில் அடித்துவிட்டு சிறித்தபடி ஓடுகிறாள், வேகமாக தன் வீட்டை நோக்கி ஓடுகிறாள்.
சுற்றி இருக்கும் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு நடுவில் ஒரு ஓட்டு வீடு அது, கோழி முட்டைகளுக்கு நடுவில் ஒரு குருவி முட்டை இருப்பது போல காட்சியளிக்கிறது. கயல் வீட்டிற்குள் நுழைகிறாள். பூமிநாதன், அரசு உதவி பெரும் பள்ளியில் சமூகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறான், இன்னும் ஒரு சில மாதங்களில் அரசு ஆசிரியாராக ஆகிவிடலாம் என நம்பிக்கொண்டிருக்கும் கயலின் தந்தை. மாரியம்மாள், பத்து வருடத்திற்கு முன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தன் கணவன் என்றாவது திரும்பி வந்துவிடுவார் என நம்பிக்கொண்டிருக்கும் கயலின் பாட்டி. லட்சுமி, என்றாவது இந்த ஓட்(டை)டு வீட்டை விட்டு தப்பித்து வாடகைக்காவது நல்ல வீட்டில் குடியேறிவிடலாம் என நம்பிக்கொண்டிருக்கும் கயலின் தாய்.
ஞாயிற்று கிழமையான இன்றும் கத்திரிக்காய் சாம்பார் வைத்து நாவிற்கு தண்டனை கொடுக்கமாட்டால் தன் தாய் என நம்பிக்கொண்டிருக்கும் கயல், அடுப்பங்கரை மேசைக்கு அருகில் வருகிறாள். காய்கறி கூடையை சத்தமின்றி ஆராய்கிறாள், உள்ளே கருவேப்பிலை கொத்தமல்லியை விலக்கி பார்த்தால் அடியில் கத்தரிக்காய் கூட்டமே ஒலித்துவைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. கயல் கோவமாக தந்தை பூமிநாதனை நோக்கி வருகிறாள். பூமிநாதன் கட்டை நாற்காலியில் தன்னால் முடிந்த அளவிற்கு முதுகை வளைத்துக்கொண்டு தொலைக்காட்சியை பார்த்துகொண்டிருக்கிறான், தொலைக்காட்சியிலோ பிரபல வலதுசாரி இடதுசாரி கட்சிகளுக்கிடையே மாட்டிறைச்சி பற்றிய விவாதம் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது.
கட்டிட வேலையும் திரு ராஜலிங்கனாரின் நான்கு மாடி வீட்டில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. கட்டிட தொழிலாலி நல்லமுத்து தலைபாகை கட்டிக்கொண்டு வேலைக்கு தயாராகிறார், ஏறத்தாழ அறுபது வயது இருக்கும் அவருக்கு நாலாவது மாடி வெயிலில் நின்று வேலை பார்ப்பது என்றவுடன், ஒன்பது கோடி மைல் தொலைவில் இருக்கும் சூரியன் அருகில் இருப்பது போல இருக்கிறது. வழக்கம் போல தாமதமாக வந்ததற்கு திட்டு வாங்கிக்கொண்டே சிமெண்டயும் மணலையும் பூசுவதற்கேற்ப கலந்துகொண்டு இருக்கிறார்.
"தண்ணீர், மணல், சிமெண்ட், செங்கற்கள் இவை அனைத்தும் சேர்ந்தால் மட்டுமே ஒரு உறுதியான சுவரை கட்டமைக்க இயலும், நம் நாடும் அதுபோலத்தான்" என பூமிநாதான் தன் மகள் கயலுக்கும் இன்னும் சில மதவாத கூட்டத்திற்கும் புரியாத கருத்துகளை கூறிக்கொண்டு இருக்கிறார்
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளை காரணமாக, ஆனால் கயல் அதை கேட்பதற்கு தயாராக இல்லை மாறாக கத்திரிக்காய் வாங்கிவந்தமைக்காக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள், பூமிநாதனோ சிறித்தபடி அவள் கள்ளங்கபடமில்லாத கோவத்தை ரசிக்கிறான், சிறிது நேரத்தில் கயலின் தோழன் பிரபுவின் தாய் கோபத்தோடு கத்தியபடி வருகிறாள்,
அவள் கத்திக்கொண்டு இருப்பதில் வழக்கமாக பிரபுவுக்கும் கயலுக்கும் ஏதோ சண்டை வந்துள்ளது என்பது மட்டும் புரிகிறது. ஆனால் கயலுக்கு ஒன்றும் புரியவில்லை, அனைவரும் பிரபுவின் தாய் கோபம் தனிய காத்திருந்தனர்.
மேலே மாடியில் சிமெண்ட் கலவைக்கு காத்திருந்த நல்லமுத்து இப்போது சுவரை கட்ட தயாராகிறார், சிமெண்டை பூசி முதல் செங்கற்கல்லை வைக்கிறார் அப்போது அவரின் பார்வை, அருகில் கீழே இருக்கும் கயலின் ஓட்டு வீட்டை நோக்கி செல்கிறது, நகரத்தின் நடுவில் இப்படி ஒரு ஓட்டு வீடா என்ற ஆச்சரியமான பார்வையல்ல அது, தன் கிராமத்திலுள்ள தன் வீடு தன் வாழ்க்கைக்கான நினைவுகளை நினைத்து அசைபோடும் பார்வை அது.
நினைவுகள் நாம் நினைக்கும் நேரம் வருவதில்லை, அது நாலாவது மாடியின் நுனியில், கொழுத்தும் வெயிலில், தொடை வலிக்க அரை காலில் அமர்ந்திருக்கும் பொழுதும் வரலாம். அதே நினைவோடு அடுத்த செங்கற்கல்லை நடுங்கிய கையுடன் எடுக்கிறார் நல்லமுத்து. கீழே பிரபுவின் தாய் கோவத்தில் இருந்து கொஞ்சம் தனிந்தாள். கயலை துரத்திக்கொண்டு பிரபு ஓடி வரும்பொழுது விழுந்து அவனது முட்டி காயப்பட்டு உள்ளது, அதை கயல்தான் தள்ளிவிட்டால் என்று மாற்றி சொன்னதால் இந்த சண்டை நடைபெற்று உள்ளது.
இது கயலுக்கும் புதிதல்ல, அவளது குடும்பத்திற்கும் புதிதல்ல. கயல் அவள் இதை செய்யவில்லை என கூறியவுடன் மீண்டும் சண்டை சுடுபிடிக்க தொடங்குகிறது. கயலின் தாயும் பிரபுவின் தாயும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர், கொஞ்சம் கொஞ்சமாக சத்தம் அதிகரிக்கிறது, கயலின் பாட்டியும் வாக்குவாதத்தில் இணைகிறாள்.
பூமிநாதன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தொலைக்காட்சியில் கவனம் செலுத்துகிறான் ஆனால் நிகழ்ச்சியை விட இவர்களது வாக்குவாதம் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது, கயலும் பிரபுவும் நமக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்,
தீடீரென ஒரு பயங்கரமான சத்தம் ஏதோ உடைந்து நொறுங்குவது போல. அனைவரும் சண்டையை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் பார்க்கின்றனர், தொலைக்காட்சி பெட்டி நொறுங்கிய நிலையில் இருக்கிறது,
அதன் மேல் ஓட்டு கற்களும் செங்கற்கல்லும் உடைந்த நிலையில் இருக்கிறது, வீட்டின் மேலே நான்கு ஓடுகள் இருக்கும் இடத்தில் விட்டம் தெரிகிறது. பூமிநாதன் அதிர்ச்சியில் இருந்து மீள்ந்து, நாற்காலியை விட்டு பதட்டத்துடன் எழுந்து மேலே ஓடுகள் உடைந்த இடத்தை பார்க்கிறான், ஓடுகள் உடைந்த இடத்தின் ஓட்டைக்கு நடுவில் மேலே பார்த்தால் நல்லமுத்து செங்கற்களை தவறவிட்ட பயத்தொடும் பதட்டத்தொடும் அந்த மாடியின் நுனியில் அமர்ந்திருக்கிறார்.
பூமிநாதன் ஆத்திரத்தொடு அவரை பார்க்கிறான். நினைவுகள் மட்டும் அல்ல, சில உணர்வுகளும் நாம் நினைக்கும் நேரத்தில் வருவதில்லை, அதில் முக்கியமான ஒரு உணர்வு கோபம். மாணவர்களை கூட கை நீட்டி அடிக்காத, யாருடனும் வீண் வம்பிற்கு செல்லாத, சாதுவான ஒரு ஆசிரியருக்கும் கோபம் வரலாம். பூமிநாதன் நல்லமுத்து இருக்கும் மாடியை நோக்கி நடக்க தொடங்குகிறான். அவன் நடக்கும் வேகத்தை விட அவனது கோபத்தின் வேகம் மிக அதிகமாக உள்ளது.
காதல், காமம், கண்ணீர், கோபம் இவை அனைத்தும் ஒரு மாயையே, நிரந்தரமட்றது ஆனால் வாழ்வினை அதிலில் திசைமாற்றக்கூடியது. பூமிநாதன் படியில் ஏறி மாடியை சென்றடைகிறான். அதீத கோபம் இடமறியாது, நேரம் அறியாது, சிந்திக்க நேரம் கொடுக்காது. நல்லமுத்துவின் சட்டையை பிடித்து இழுத்து பூமிநாதன் தாக்குகிறான்,
நல்லமுத்துவின் மூக்கு உடைக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார், திரு ராஜலிங்கனார் அழைத்துவரப்படுகிறார், பூமிநாதனின் தொலைக்காட்சி பெட்டி மாற்றித் தரப்படும், ஓடுகள் மாட்டித் தரப்படும் என உறுதியளிக்கப்படுகிறது,
பிரச்சினை எந்தவித வெளி தலையீடும் இன்றி சுமூகமாக முடிக்கப்படுகிறது, சூரியனும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மாலை நேரம் வருகிறது, பூமிநாதன் தன் வீட்டு வாசல் முன் அமரந்திருக்கிறான், கோபம் குறைந்து இயல்பு நிலைக்கு வருகிறான், அவனது மன ஓட்டமும் இதய துடிப்பிம் இயல்புக்கு திரும்புகிறது. கோபம் தந்த சாபம், தீராத சிந்தனை. பதில் கிடைக்காது என தெரிந்தும் சிந்திக்க தொடங்குகிறான். 'ஏன் இந்த பிரச்சினை? இதை எப்படி நடக்காமல் தடுத்திருக்கலாம்? கோவப்படாமால் இருந்திருக்கலாமோ. தீடீரென வீட்டின் நடுவில் ஒரு கல் வந்து விழுந்தால் எப்படி கோபப்படாமல் இருப்பது, அதுவும் பதினைந்தாயிரம் ரூபாய் கொண்ட தொலைக்காட்சி பெட்டியின் மேல் விழுந்தால் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும், ஆனால் ஒரு முதியவரை கூட அடையாளம் கொள்ளாத என் கோவம் அவ்வளவு மோசமான ஒன்றா?'.
'நான் கோபப்படாமல் இருக்க என்ன செய்திருக்க வேண்டும்? ஒரே வழி திரு ராஜலிங்கனார் மாடிகளின் மேல் மாடிகள் கட்டுவது போல நானும் என் வீட்டை கட்டியிருக்க வேண்டும், அது முறையான தீர்வாக இருக்குமா?. நானும் சில பெரிய மாடிகளின் உச்சியில் நின்று இந்த உலகத்தை ரசித்திருக்கிறேன், நான் மேலே செல்ல செல்ல இந்த பூமி எவ்வளவு பரவலாக தெரிந்துகொண்டே வருகிறதோ என்னை போன்ற மனிதர்கள் என் பார்வைக்கு அவ்வளவு சிறிதாக குறுகிக்கொண்டே வருவர்.
ஒரு இடத்தை மேடாக்குவதற்கு மற்றொரு இடத்தை பள்ளமாக்குவது என்பது முற்றிலும் நியாயமற்ற செயல், ஆனால் என்னிடம் பணம் இருந்திருந்தால் நான் இப்படி சிந்தித்திருப்பேனா என தெரியாது, திரு ராஜலிங்கனார் அளவிற்கு என்னிடம் பணம் இருந்திருந்தால் அவரை விட மூன்று நான்கு மாடிகள் அதிகம் கட்டியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, இல்லாதவர்கள் தனது இல்லாமையை நியாயப்படுத்த கருத்துகளை உருவாக்கி தன்னை தானே மெச்சிக்கொள்ளும் செயலயே நானும் செய்கிறேன்'
இப்படி பூமிநாதன் குழப்பமான பல சிந்தனைகளை சிந்தித்தபடி அமர்ந்திருக்கிறான், அவன் கேள்விகளுக்கு பதிலை சிந்திக்க முற்பட்டால் இன்னும் அதிக கேள்விகளே பதிலாக கிடைக்கின்றது, ஆனாலும் அவனது சிந்தனைகள் ஓயவில்லை. 'தவறு யாரின் மேல் இருக்கும், நல்லமுத்தின் மீதா? இல்லை ராஜலிங்கனாரின் மீதா? இல்லை நான் தான் தவறா? நான்குமாடி வீட்டின் அருகில் நான் ஓட்டு வீட்டில் இருப்பது தவறா? இல்லை ஓட்டு வீட்டின் அருகில் ராஜலிங்கம் நான்கு மாடி வீட்டில் இருப்பது தவறா?' என சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது கயலின் சத்தம் கேட்கிறது, கயல் அந்த ஓட்டை வாளியில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வாசலில் அமர்ந்திருக்கும் தன் தந்தையை தள்ளிக்கொள்ள கூறி வேகமாக நடந்து வருகிறாள்,
கத்திரிச்செடியும் ரோஜாச்செடியும் உள்ள அந்த சிறிய தோட்டத்தின் அருகில் வந்து முழு வாளி தண்ணீரையும் ரோஜா செடிக்கு ஊற்றிவிட்டு செல்கிறாள், அவளுக்கு கத்தரிச்செடியின் மேல் இருந்த வெருப்பு ரோஜா செடியின் வளர்ச்சியில் தெரிகிறது. இதை பார்த்த பூமிநாதனுக்கு இரண்டு கசப்பான உண்மைகள் புரிகிறது, பதில் கிடைத்ததால் எழுந்து வீட்டிற்குள் செல்கிறான்.
கலவையான கதை….ரசிக்கலாம்.
super congratulations dharani all the best
Super.
மனம் தொட்ட பதிவு …மேலும் பல கதைகள் எழுத என் வாழ்த்துக்கள்… 😇👍🏻
,,👍
Story very sooper da..
Superdaa bro…
அருமையான சிறுகதை ..மனித உணர்வுகளின் விளக்கத்தையும் அதன் விளைவுகளையும் ஒரு சிறுகதையில் அருமையாக வெளிபடுத்திய ஆசிரியர் தரணிகுமார்க்கு என் வாழ்த்துக்கள்