15 Feb 2022 2:54 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-48
படைப்பாளர் - கோவி.சேகர், சென்னை
கி.பி. 2000 ஆண்டுகளில் யாழ்பாணத்திலிரிந்து முல்லைத்தீவிற்கு ஒரு இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் பயணித்தால் ஏற்படும் சுகம், அதனை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற திமிர் உலகில் இலங்கை தமிழர்களைத் தவிர வேறு எவருக்கும் இருந்திருக்க முடியாது. பிரித்தானியர் ஆட்சி காலத்தில் குடியமர்த்தப்பட்ட வம்சாவழித் தமிழர்களையும் சிறிது சிறிதாக ஒற்றுமைப் பாதையில் நடைபோட வைத்தது. அதன் நீட்சி வடக்கே யாழ்பாணத்தில் தொடங்கி தெற்கே பொத்துவில் வரையிலும், மேற்கே வவுனியா, தலைமன்னார் வரை வியாபித்து இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்றால் தமிழகத்தைத் தாண்டிய கலை நிகழ்ச்சிகள் இலங்கையிலேயே நடக்கும் . முறத்தால் புலியை விரட்டிய தமிழ் பெண்களை கொண்ட நாடு இலங்கை என்றால் அது வாதத்திற்கு மட்டுமல்ல , உண்மையும் தான் . இந்த வருடத்தின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாயின. தமிழகளின் அடையாளங்கள் கொடிகளாய் பறக்க ஆரம்பித்தன . ஒருநாள் மீன் பிடித்தலை விட்டு விட்டு , தமிழ் புத்தாண்டை கொண்டாட மக்கள் ஆயத்தமானார்கள் .
காரணம் ,2009 ஆம் ஆண்டு போர், அனைத்தையும் புரட்டி , ஒரு சுனாமி போல் தமிழனின் கனவை தவிடு பொடியாக்கி போனது. இலங்கைத் தமிழன் நாடிழந்தான். தன்னை இழந்தான். ஒவ்வொரு குடிலும் பெண்களின் அழுகுரலால் கலை இழந்தன. இருந்தும் பீனிக்ஸ் பறவையாய் தமிழன் மீண்டு வந்தாலும், ஆங்காங்கே அவனை வேட்டையாடும் கழுகுகள் மறைத்தபாடில்லை.
யுத்தத்திற்கு பின் மீண்டு வரக்கூடிய ஒவ்வொரு பாதையும் மூடப்பட்டன. முல்லைத்தீவில் பரம்பரையாக மீன் பிடித்து வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்வும் நசுங்கியது. கடல் வளங்கள் அழிக்கப்பட்டன. அதையும் தாண்டி மக்கள் போராட்டத்தை வாழ்க்கையாக மாற்றினர். யுத்தம் , தோல்வி இவை எல்லாம் தாண்டி , இவற்றிக்கு பலியாகிக் கொண்டே இருக்கும் பெண்களின் அவலம் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அப்படி போராடி வாழும் மக்கள் தினம் தினம் படும் அவலங்கள், தோல்விகள், அவமானங்கள் எண்ணிலடங்க. அதுவும் பெண்கள் படும் சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர்களைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கழுகு சுற்றும் பிரம்மை எல்லோருக்கும் உண்டு. தங்களுக்கு உரிமை வேண்டும் என போராடுவதும் அதை மறுப்பதும் உலக நியதி. ஆனால் வெற்றி பெற்றவர்கள் அதைக் கொண்டாட பாவப்பட்ட பெண்களை சூறையாடுதல் என்ன நியதி ? இது வெற்றியின் கொண்டாட்டாமா அல்லது மிருகத்தின் வெறிச் செயலா ? கணவனை இழந்து , பிள்ளையை இழந்து , உரிமை இழந்து அது பத்தாது என பெண்மையையும் இழக்க வேண்டுமென்றால் .....?
அப்படி ஒரு கழுகாய் கடற்கரைக்கு வந்தவன் தான் விக்கிரமசிங்கா. எல்லோருக்கும் நாள், நட்சத்திரம் , குழந்தை பிறந்ததும் தான் பார்ப்பார்கள். இவனைப் பொருத்தவரை ஜோதிட பெரு மக்கள் ஒன்று கூடி நல்ல நாள், நட்சத்திரம் , ராசி எல்லாம் முன் கூட்டியே கணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பிறந்தவன் தான் “விக்கிரமசிங்கா.”
விக்கிரமசிங்கா, ஒரு ஆடம்பர பிரியன். எல்லாம் தன்னால் முடியும் என்கிற கலை கனமும், அதற்கு உரிய பணபலமும் உடையவன். அதன் காரணமாகவே பல பெண்களை தனக்கு இறையாக்கி , அதன் பாதிப்பு ஏதும் இல்லாமல் சுலபமாக கடன்துச் செல்லக் கூடியவன். அப்படி ஒருநாள் தன் நண்பனுடன் விளையுயர்ந்த காரில் கடற்கரை பக்கம் சென்று வரலாமென கிளம்பினான். அவன் வந்த விதம் , மிடுக்கு, அவன் செல்வந்தன் என்பது அனைவருக்கும் தெரிவிக்க. அதற்கான அங்கிகாரமும், மரியாதையும் அனைவரிடமிருந்தும் அவனுக்கு கிடைத்தது, ஒரு பெண்ணைத் தவிர.
கடற்கரையில் ஏகப்பட்ட கூட்டம் . அதில் கருஞ்சிவப்பு சேலை கட்டிய நிலவாய் ஒரு பெண் . கனநொடியில் அவனது மனதிற்குள் ஆயிரம் மின்னல்கள் அப்பெண்ணைப் பற்றி தோன்றி மறைந்தன. பெண்கள் அழகைப் பற்றி அவன் , இதுநாள் வரை கேட்டது , பார்த்தது , படித்தது அனைத்தும் அவளிடம் தோற்றுப்போயின. அவளோ தன் தோழியுடன் மீன்களை உப்பிட்டு காய வைப்பதுடன் , கொடிகளையும் தோரணங்களையும் கட்டிக்கொண்டு இருந்தாள். அவள் அலங்காரம் செய்வது வரப்போகும் தமிழர்திருநாளை முன்னிட்டு என்பது அவனுக்குத் தெரியாது .
பணத்தால் ,பெண்களை எல்லாம் இதுவரை அலட்சியமாகப் பார்த்தவன் , சுலபமாக வாங்கும் கடைப் பொருள் என நினைத்தவன் ,தூரத்திலிருந்த பெண்ணைப் பார்த்ததும் , பெண் தான் அனைத்தும் என்ற முடிவிற்கு வந்தான் .அவளை அழகி என்ற ஒற்றை வார்த்தையில் அடக்க விக்கிரமசிங்காவின் மனமும் , இதயமும் இடம்தரவில்லை. ஒரு பட்டத்து இளவரசியின் சாயல் தெரிந்தாலும், பட்டத்து இளவரசிகள் யாருக்கும் இல்லாத ஒரு தனித்துவம், அவளிடத்தில் தெரிந்தது. அம்மாவாசையன்று பெளர்ணமி நிலவு தோன்றினால்?....அப்படி அனைத்தும் இருளில் மூழ்க, அவள் மட்டும் , ஜொலிக்கும் சூரியனின் ஒளி பெற்று, நிலவின் குளிர்ச்சியோடு விக்கிரமசிங்காவின் கண்ணுக்கு தென்பட்டாள். தேரில் வரவேண்டிய தங்கத் தாமரை, பாமரர்கள் நடக்கும் புவியில் நடத்து வர, விக்கிரமசிங்காவின் இதயம் வெடித்திடும் அளவிற்கு வீங்கி சுருங்கியது.
சீதையின் அழகைப் பற்றி பாடிய கம்பர் “ மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை” என்கிறார். அந்த மன்மதனால் கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்ட முடியாதாம். புலவர்கள் பெண்னழகைப் பற்றி பாடியதெல்லாம் உண்மை என்ற முடிவிற்கு வந்தான் விக்கிரமசிங்கா..
அழகிய குழந்தைக்கு பிறர் கண் பட்டுவிடக் கூடாது என்பதற்காக , கருப்பு மையை கன்னதிலிடுவார்களே அதுபோல், அந்த பூலோக வைரச் சிலைக்கு அருகில் ஒரு பெண். பிறர் கண்களை அந்த வைரப் பதுமையிடமிருந்து காப்பாற்ற.
பிரமன் செதுக்கிய சிலைதான் அவள் என்றாலும், பிரமனுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? பூமியில் எல்லா பெண்களையும் சாதாரணமாக செதுக்கிவிட்டு, இவளை மட்டும் தன் கைகளால் பார்த்து பார்த்து தனியாக வடிவமைத்ததன் காரணம் என்னவென்று விக்கிரமசிங்கா தன் மனதிற்குள் ஆராய ஆரம்பித்தான். காரணமின்றி மனது சுற்றிக்கொண்டு இருந்தாலும், தான் பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளை, பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் என காட்டிக்கொள்ள புத்தி அலைபாய்ந்தது. தான் உட்கார்ந்து காற்று வாங்க , ஒரு ஆடம்பர இருக்கையையும், நிழற் கொடையையும் கொணர்ந்து போடச்செய்து. அத்துடன் காரோட்டி கொடுத்த குளிர் பானத்தை பருகியபடியே , மெல்ல பூலோக ரம்பையின் தரிசனம் வேண்டி கண்களை உலாவ விட்டான்.
விக்கிரமசிங்காவின் அதீத செயல்கள், அவனது உள்ள உணர்வை எளிதில் பிறருக்கு படம் பிடித்து காட்டியது. அனைவரும் உணர்ந்ததை, அவள் உணராமல் இருப்பாளா? இருந்தும் அதை ஒரு பொருட்டாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை. கவனித்தும், கவனியாது நடை பழகினாள் அலட்சியமாக . அன்னங்கள் அவளிடம் தான் நடைபயிற்சி எடுத்திருக்க வேண்டுமோ என உள்ளத்தில் ஒரு கேள்வி எழ, அவனையும் அறியாமல் ஒரு தடுமாற்றம் அவனது எண்ண ஓட்டத்தில் ஏற்பட்டதை அவன் உணர்ந்துக் கொண்டான். அவளோ , அவனது என்ன ஓட்டத்தை புரிந்துக் கொண்டாலும் , அது பற்றி கவலைப் படாமல் தன் தோழியுடன் சேர்ந்து புத்தாண்டு கலை நிகழ்ச்சிகளின்கொடிகளை நடுவதிலேயே கவனமாக இருந்தாள் .
அவளது அலட்சியம் ,அழகையும், பணத்தையும் ஒருசேர நினைத்துக்கொண்டு இருந்தவனுக்கு புது நியதியை , புதுப் பாடத்தை கற்றுத்தந்தது. வர்ண ஜாலங்களால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வண்ணத்துப்பூச்சிகள் எந்த அரண்மனையில் பிறந்தன?
கருமையாய் இருப்பவை காக்கையின் இனங்கள் என நினைத்தவனுக்கு, குயிலின் அருமை தனிப்பட்டது. அதிகாரத்திற்கும், பணத்திற்கும் அடிமைகள் தலை குனிவார்கள், மனிதர்கள் அல்ல என்பதையும் அந்த பேரழகியின் அலட்சியத்தால் உணர்ந்துக் கொண்டான்.
இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. பூலோக ரம்பை என யாரை, அவனது மனம் இவ்வளவு நேரம் மெய்மறந்து பாராட்டியதோ அவள், அவளுடன் வந்த பெண்ணோடு, மீன்களை வெட்டி, உப்பிட்டு, பதப்படுத்தி, சூரிய ஒளியில் காயவைத்திருந்த இடத்திற்கு வந்ததும், அவற்றிக்கு காவலாய் அங்கேயே நின்றுவிட்டாள்.
அவனைக் கவர்ந்தது, இதுவரை அவன் வாழ்வில் காணாத, அவளது அழகை மிஞ்சிய இரக்ககுணம். சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களிலிருந்து வாடிக் கொண்டிருக்கும் சுறாக்களை காத்த அவள், இறை தேடி வந்த பறவைகளையும் ஏமாற்றவில்லை. சிறு மீன்களை பறவைகளுக்கு உணவாகப் போட்டு , அவை அருந்திட அருகே மண் குப்பியில் நீரும் வைத்திருந்தாள் அவளது இச்செய்கை, பாரி வேந்தனின் செயலுக்கு சற்று நிகராகவே அவனுக்கு புலப்பட்டது.
“மீன்....” விக்கிரமசிங்காவின் மனம் எதையோ சொல்ல முற்படும்போது, அவனது கண்கள் அவளது அழகு எனும் கடலில் மூழ்கி , அங்கே ஆசை எனும் விதையைத் தூவி, அன்பெனுன் முத்தை எடுக்க முற்பட, மனம் பேச நினைத்த வார்த்தைகள் கூட பாதியில் பாதியில் நின்று போயின.
நீர்வீழ்ச்சியில் சிதறி விழும் நீர்த் துளிகள் பல, பூமியை அடையும் முன்பே காற்றின் வெட்பத்தில் ஆவியாவதுப் போல், விக்கிரமசிங்காவின் கற்பனையும், சிந்தனையும் செயலிழந்துப் போயின அவளது ஓர் நேர் கொண்ட பார்வையால். இதுநாள் வரை அவன் பார்த்த பெண்கள் அனைவரும், அவனது பார்வைக்கு முன்பே தலை குனிய, எந்த பெண்ணின் முகத்தையும் அவன் சரிவர பார்த்தது இல்லை. முதல் முறையாக ஒரு பெண்ணின் பார்வை அவனை தலை குனிய வைத்தது. அவமானத்தால் விழுந்தவன் எழ வில்லை. மனம் கூட.
மெல்ல தலை நிமிர்ந்தான். அதிர்ந்துப்போனான்.
அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை.
பூலோகரம்பை என தனக்குத்தானே கற்பனை செய்துக் கொண்ட பெண் அவன் முன் நின்று இருந்தாள் . வாய் திறந்து எதையும் கேட்கவில்லை , அச்சம் தவிர்த்த அதே நேர் கொண்ட பார்வை ஆயிரம் அர்த்தத்தை அவனுக்கு புகட்டியது. அச்சம் உட்பட.
எப்பொழுதும் பிறர் அஞ்ச பேசுபவன், ஒரு பெண்ணின் மௌனமான பார்வைக்கு வாயடைத்து செவிடாய் மாறிப்போனான்.
“தாங்கள் இவ்விடத்திற்கு புதிதா? இங்கு இதற்குமுன் உங்களை பார்த்தது இல்லையே? “
விக்கிரமசிங்கா தன்னிலைக்கு வருமுன்னே , வந்தவள் கேள்விக்கணையை தொடுத்தாள்.
“ஆம்” வார்த்தையின் சப்தம் வெளிவரவில்லை. தலை மட்டும் ஆடியது.
வந்தவள் எளிதில் விடுவதாக இல்லை. “ஏன் இவ்வளவு அச்சம். நாங்களும் மனித இனம்தான். மீன் பிடித்தல் எங்கள் தொழில். சீறிவரும் அலையைகூட பாதுகாப்பு கவசமாக மாற்றிக்கொள்ளும் வீரம் எங்களுடையது. அச்சம் தவிர்த்து பேசுங்கள்.”
“இல்லை... நான்...நான்...”
பேச ஆயிரம் வார்த்தைகள் போட்டியிட்டாலும், ஒன்றுக்கூட விக்கிரமசிங்காவிற்கு ஆதரவாக வெளிவரவில்லை.
“ நான், நான் என்றால், நீங்கள் புவியில் பெண்களைப் பார்த்தது இல்லையா?”
அவளது ஒற்றைப்பார்வையில் அவனது ஆயிரம் வார்த்தைகள் உயிரற்றுப்போயின.
தன்னை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியின்றி பேச ஆரம்பித்தான்.
“நீங்கள் , பார்ப்பதற்கு ஒரு பட்டத்து இளவரசியைபோல்....”
“அது உங்கள் கண் பார்வை மற்றும் மனதின் கோளாறு. படித்தவர் என நினைக்கிறேன். அழகு மனதைப் பொறுத்தது. செய்யும் தொழில்லையோ, பிறந்த இடத்தையோ பொறுத்ததில்லை.”
“நான், பட்டினத்திலிருந்து வருகிறேன். எனது குடும்பம் பற்றி அறிந்தால், நீங்களே .... “
“சொல்ல வந்ததைக் கூட சொல்ல தைரியமில்லை உங்களுக்கு. இங்கு பண்பாளர்களுக்கு மட்டுமே மரியாதை. ”
அம்பினும் கூர்மையான வார்த்தைகள் அவனை பேச விடாமல் தடுத்தது .
அம்பு, ஏய்தவள் மேல் திரும்பி பாய்ந்தால்... அப்படி இருந்தது அவளது பதில். அதில் திமிர் தெரியவில்லை. பெண்மையின் கண்ணியம் தெரிந்தது.
வைத்தகண் வாங்காமல் அவள் செல்வதைப் பார்த்தான்.
கொழுத்த சுறா மீன் என்றால், அவனுக்கு உயிர். அதுவும் சுறா புட்டு...அவனது உயிருக்கும் உயிரான உணவு. அவனது பூலோக ரம்பை அவனையே வெட்டி, உப்பிட்டு காயவைத்து, காவலிருப்பதைப் போல் நினைத்து உள்ளம் நடுங்கினான். அந்த நடுக்கத்திற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
நன்கு கொழுத்த, செழுமையான சுறா மீன்களை வெட்டி, சுத்தம் செய்து, பதமாய் உப்பிட்டு, பறவைகளிடமிருந்து பாதுகாக்க, அவற்றின் மேல் பயனற்ற மீன்பிடி வலைகளை பந்தலாய் கட்டி, அருகிலுருந்த இருக்கையில் அமர்ந்து காவல் காத்துக் கொண்டிருந்தவள் தான் அவனது பூலோக ரம்பை.
சிலருக்கு மீன் நாற்றம். சிலருக்கு அதுவே நறுமணம். அவனுக்கும் அவளைப் போலவே அங்கு வீசிய நறுமணம் பிடித்திருந்தது, அவளுக்காக.
“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே ” என்பார்களே, அது போல் ஒரு அசட்டு தைரியத்தை தன்னுள் வரவழைத்துக்கொண்டு , காத்திருந்தான் பதில் வரும் எனும் நம்பிக்கையில். அந்த நம்பிக்கையில் ஒரு கர்வமிருந்தது. அழகு தேவதை என உள்ளம் கொண்டாடினாலும், ஒரு சாதாரன மீனவப்பெண் தனது ஆடம்பரம், செல்வம், ஊரில் தன குடும்பத்திற்கு உள்ள அங்கீகாரம், இவற்றை அறிந்ததும் தானாக ஓடிவந்து தன் காலில் விழுந்து தஞ்சம் அடைவாள் என்ற அதீத குருட்டு நம்பிக்கைதான் அவனது அசட்டு தைரியத்திற்கும் ஆரம்பத்தில் காரணமாக அமைந்தது.
அவளது ஆரம்பப் பேச்சி அவனது ஆணவத்தை அடியோடு வெட்டிச்சாய்த்தது .
நிமிர்த்த நன்நடையும் , நேர் கொண்ட பார்வையும் அவளுள் தொடர்ந்து தென்பட, அதுவே அவனுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. வந்தவள் ஆரம்பித்தாள், “நன்றி. உங்கள் நேர்மைக்கு. நாங்கள் நல்லவர்கள் என காட்டிக்கொள்ள இங்கு ஒரு நாடகம் நடத்தி உங்களை அவமானப் படுத்தியிருக்கலாம். அந்த அவசியம், எனக்கு இல்லை. நாங்கள் ஏழைகள். ஆனால் தமிழச்சிகள். வீரம் செறிந்தவர்கள். குண்டுகள் எங்களை சூறையாடலாம். அதே நேரத்தில் மானம் என்று வந்துவிட்டால் , புலியாக இருந்தாலும் முறத்தால் அடித்து விரட்டிய பரம்பரையை சேர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் நம்புவோம். யாரையும் யாரும் காரணமின்றி சூழ்நிலையை வைத்து சந்தேகப்படமாட்டோம். அதைவிட ஆண்களின் உழைப்பை மதிக்க தெரிந்தவர்கள். எனவேதான் விற்காத மீன்களை சுத்தம் செய்து, உப்பிட்டு சூரிய ஒளியில் உலர்த்தி, பாது காக்கவும் செய்கிறோம். எங்களுக்கு செய்யும் தொழிலே தெய்வம். அதில் ஏற்றத்தாழ்வு பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள். உங்களைப் போன்று பட்டினத்தில் சொகுசாக வாழ்பவர்கள் நாங்கள் இல்லை. எங்கள் ஊர் மிகச் சிறியது. அதே நேரம் மிகச் சிறந்தது. எங்கள் ஊரோ, எங்கள் மனம் போன்று உலகளாவி எல்லையற்று பறந்து கிடக்கும் அழகிய கடற்கரையைக் கொண்டது. நாங்கள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தன் மானம் விட்டுக் கொடுத்ததாய் வரலாறு இல்லை .
இனி பயம் எங்களை விரட்டாது. இந்தப் பூமியில் எங்கள் உறவுகளின் இரத்த ஆற்றில் நீந்தி வந்தவர்கள் நாங்கள். இங்கேயே வாழ்ந்து, நெறி மாறாமல் அவர்களின் கனவை நினைவாக்க உழைப்பதே இப்போதைக்கு எண்களின் குறிக்கோள்.
அதே நம்பிக்கை எங்களுக்கு எங்கள் பெரியவர்கள் மீதும் உண்டு. உங்கள் பெரிய ஊரில் பணத்தால் உயர்ந்தவர்கள் எவ்வளவு உள்ளார்களோ, அதைவிட மிக அதிகமா பண்பால் உயர்ந்தவர்கள் எங்கள் சிறிய ஊரில் மிக அதிகமாக உள்ளனர். நாங்கள் அன்பால், பண்பால், அறிவால், தியாகத்தால் உங்களைவிட பல மடங்கு உயர்ந்தவர்கள். பணம் இல்லை என்றால் நீங்கள் இல்லை. பணம் நிலையற்றது. உங்கள் வாழ்வு போலே. எங்கள் வாழ்வு நிலையானது , இங்கு வீசும் மீன் நாற்றம் போல். அந்த நாற்றத்தில் பொறாமை இருக்காது. போட்டி இருக்காது. அன்பும் , வீரமும் மட்டுமே நிலைத்திருக்கும். அது என்றும் போராடிக் கொண்டே இருக்கும் இழந்ததை மீட்கும் வரை . இப்பொழுது சுற்றி உள்ளவர்களைக் கூட்டி , மற்றவர் முன் உங்களை அவமானப் படுத்தி வெளியேற்ற எங்களுக்கு மனமில்லை .இங்கு வீசும் மீன் நாற்றத்தை மட்டுமே காரணம் காட்டி, தாங்களாகவே சென்று விடுவீர்கள் என நம்புகிறோம்....”
வார்த்தைகள் முழுமையாக முடியும் முன்பே , விக்கிரமசிங்காவின் கார் அங்கிருந்து புறப்பட்டது. இப்பொழுது அவனது கண்களுக்கு கடற்கரையும், அதன் ரம்யமான காட்சிகள் மட்டுமே அழகாய் தென்பட்டது.
பெண்மையின் வீரம் மிளிர்கிறது
Very good. I like it 🌹
Exemplary written, I liked very much the writing style. Very relevant to the title. Congrats. Super sekar. Expecting more in future.
Weldone sekar 👌👌👌👏👏👏
குட் ஒன்
SuperSekar
Very well written!!
Well written and articulated.
Super 👌👌👌