15 Feb 2022 2:33 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-46
படைப்பாளர் - வீ.பூமிநாதன், ஈரோடு
மௌனத்தில் நீண்டிருந்த அந்த வீட்டில் யாவரும் தங்கள் பேச்சினை தூக்கிலிட்டுவிட்டு விரிந்த கண்களின் வழியில் எதையோ தேடிக்கொண்டிருந்தன. எல்லாக்கண்களிலும் அதிர்ச்சியும் வியப்பும் சோகமும் மாறி மாறி புதைவதும் விளைவதுமாய் இருந்தது. அந்த வீட்டில் அன்றை இயல்பான நாளுக்கான எல்லாமும் பிறந்திருந்தது செய்தித்தாள், பால், காய்கறி, கீரை, அந்தச் செடியில் தினமும் மலரும் மலர் என யாவுமே இருந்தன. சிறுநீரும் மலத்திலும் கூட இயல்பாகவே நடந்தது. ஆனாலும் அந்த வீட்டில் நிலைத்த மௌனம் குடியேறியிருந்தது. எல்லா உயிர்களும் பிணமாக மௌனிக்கிறது,அதுவரை காணாத வீட்டின் அனைத்து அறையையும் சலிக்கிறது, ஜன்னல் கம்பிகளில் ஏதேனும் மாறுபாடு உள்ளதா என புலன் விசாரணை செய்கிறது. திடிரென நினைவு வந்தபடி வீட்டின் முற்றத்திற்குச் சென்று அது முற்றம் அல்ல அடுக்குமாடி என்பதால் போர்டிக்கோ அல்லது பால்கனி என்று கூறலாம் அங்கு சென்று செருப்புகளையும் பரிசோதிக்கின்றன கண்கள், ஆனாலும் விடை தெரியாத வினாவிலே அனைவரும் தேர்வெழுதிக்கொண்டிருந்தனர்.
காலை கதிரவனின் வெளிச்சம் அவர்களின் அழுத்தத்தை உடைக்க முயன்றுகொண்டிருந்தது. முதலில் அம்மாதான் தனது உடைந்த குரலை ஒட்டியெடுத்து சொன்னால் இரவு பத்து மணிக்கு வழக்கமாக நான்தான் அவருக்கு தேநீர் கொடுத்தேன். வாங்கி நன்றாகத்தான் குடித்தார், என்னை உறங்கவில்லையா என்று கேட்டுவிட்டு அவர் உறங்கச் சென்றார். பிறகு எங்கே? என்று பாட்டியின் கேள்வி நீண்ட கண்ணீர் வரியாய் கழுத்தைக் கடந்துகொண்டிருந்தது. ஏறக்குறைய ஐம்பதாவது முறையைத் தாண்டி தனது அப்பாவினை அலைபேசியில் அழைத்தாள் மகள். அது தனது அப்பாவின் அறையில்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தோட்டத்து செடிகளில் எல்லாம் தனது பார்வையை நிறைத்துவிட்டு சற்று தூரத்தில் அப்பா எப்பொழுதும் தேநீர் அருந்தும் டீக்கடை வரை சென்று பார்த்தான் மகன் அங்கு அவனின் அப்பாவிற்காக காத்துகொண்டிருக்கும் இரண்டு நாய்கள் மட்டுமே இருந்தன, அதற்கு இரண்டு வருக்கியை முதல்முறையாக வாங்கிப்போட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தான் மகன்.
கலைந்த அல்லது அலைந்த முகத்தோடே அமர்ந்திருந்தாள் அம்மா, சற்று நேரத்தில் தகவல் அறிந்த அம்மாவின் சகோதரனின் திடனமான வாசம் அந்த வீட்டில் நுழைந்தது, ஆம் மற்ற யாரும் குழைந்துபோய்தான் இருந்தனர். சகோதரன் மாமாவின் நண்பர்களை எல்லாம் விசாரிக்கத் துவங்குகிறார். ஆனால் பதில்கள் எல்லாம் கனியாமல் காயாகவே திரும்புகிறது, ஒவ்வொரு அழைப்புக்கும் வீட்டினரின் முகங்கள் மட்டுமே மாறி மாறி மீண்டும் அதே இடத்தில் வந்தமர்கிறது. அப்போது சூரியன் அன்றைய நாளில் தனது பாலியப்பருவத்தில் நுழைந்திருந்தான். எல்லோருமே வெறுமையை மட்டுமே உட்கொண்டிருந்தனர். அம்மாவின் சகோதரன் தான் அனைவரையும் சாப்பிட கட்டாயப்படுத்திக்கொண்டிருந்தார். இதுவரை சுவைக்காத ஒரு சுவையில் கண்ணீருடன் வயிற்றை அடைய மறுக்கும் உணவினை அவர்கள் உண்டு முடித்தனர். என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் மீண்டும் மீண்டும் அவரது அறையில் மட்டும் நுழைந்து நுழைந்து வெளியேறினர்.
அப்போது நேரம் பதினொன்றைத் தொட்டுக்கொண்டிருந்தது. வாசலில் மாமாவின் நண்பர் கார் வருகிறது அவர் அங்குள்ள அனைவருக்கும் தெரிந்தவர்தான், மாமாவின் மூலம் தகவல் அறிந்து அன்று நீதிமன்றம் செல்லாமல் இங்கு வந்துள்ளார். அவரது கருப்பு அங்கி அவரை எப்பொழுதும் வழக்கறிஞர் என்பதை எல்லோருக்கும் நினைவு படுத்தும். நேரம் கடந்துகொண்டே இருப்பதால் நாம் காவல்துறையில் புகார் கொடுத்துவிடுவோம் என்று கூறுகிறார். வேறு வழியும் வழிகாட்டலும் இன்றி மௌனத்தால் அதனை அவ்வீட்டினர் அங்கிகரிக்கின்றனர். ஒரு புகைப்படத்துடன் தனது தங்கை மகனையும் அழைத்துக்கொண்டு மாமா காவல் நிலையம் செல்கிறார்.
எப்போதுமே காரணம் தெரியாமல் சுமந்துகொண்டிருக்கும் சிவப்பு நிறச் சுவர்கள் இவர்களை கடுமைக்கும் விரைப்பிற்கும் நடுவில் வரவேற்றது. உடன் வழக்கறிஞர் இருப்பதால் முழுமையான காவல் நிலையத்தின் முகம் சற்று சிவந்தே இவர்களை வரவேற்றது, காலை நேரம் ஆதலில் உயர்அதிகாரியும் அங்கேயே இருந்தார் அவர் உடையும் மனதும் அன்று இன்னும் அழுக்காகவே இல்லை. தகவலைச் சொல்லுகிறார்கள், ஓ மிஸ்ங் கேசா ஓகே. அவரை எப்பொழு கடைசீயாக பார்தீர்கள், என்ன நிற ஆடை அணிந்திருந்தார் என்ற கேள்விகளையெல்லாம் இரயில் நிலையத்தின் அறிவிப்பு ஒலிப்பெருக்கிபோல் எவ்வித சுவையும் இன்றி கேட்கப்பட்டு இறுதியில் வீட்டின் விலாசத்தில் நிறைவு பெற்றுவிட்டது. இதை இப்பொழுது எப். ஐ. ஆர் போடவில்லை விசாரித்துவிட்டுப் போட்டுக்கொள்ளலாம். நீங்கள் முன்னாடி செல்லுங்கள் நாங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று அந்த உயர் காக்கி விடை அளித்தது.
அன்று வேறு எதுவும் முக்கியப் பணி இல்லாததோ அல்லது வந்தவர்கள் காரில் வந்தவர்கள் என்றோ ஏதோ ஒரு காரணத்தால் காக்கிகள் உடனே கிழம்பிவிட்டது. நிச்சயமாக அதனை நாம் கடமை என்றோ கருனண என்றோ எண்ணுவது கடினம்தான். தனது கலட்டப்படாத காலணியோடு வீட்டிற்குள் நுழைகிறது காக்கிகள். எல்லோரிடம் தனித்தனியான விசாரணை, வயதிற்கு ஏற்பவும் உறவிற்கு ஏற்பவும் கேள்விகள் மணம் மாறிமாறி அமைந்தது. அவற்றில் அவரின் சொத்து மதிப்புகள் பற்றியும் நடத்தை பற்றியும் அதிக வினாக்கள் இருந்ததாக வெள்ளைக் காகிதத்தில் அவர் மட்டுமே படிக்கமுடிந்த கிறுக்கல் குறிப்பில் நாம் அறியலாம். அவரின் மனைவியிடம் சற்று ஆழமான வினாக்கள் என்று கருதப்படும் நீங்கள் யார் மீதாவது சந்தேகப்படுகிறீர்களா அல்லது அவருக்கு வேறு உறவு ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியைக் கேட்டுத் தேக்கி வைத்துள்ள கண்ணீரை உடைத்தனர். இரு கையால் தனது வாயை மூடியோ அல்லது அவர்களைக் கும்பிட்டோ எதுவும் இல்லை என்ற பதிலை அவர்களுக்குப் புரியவைத்தாள் அவள். சரி ஒருவர் என்னுடன் வாருங்கள் எப். ஐ. ஆர். போட்டுவிடலாம், பிறகு தேட ஆட்களை அனுப்பலாம் என்று கூறிவிட்டு அந்த விரைப்பான கார் சென்றது. அதனைத் தொடர்ந்து தளர்ந்த மாமாவின் காரும் சென்றது.
அந்த வீட்டில் மரணம் எதுவும் நிழ்ந்ததாகத் தெரியவில்லை ஆனால் பத்து மரணத்திற்காக துக்கமும் மௌன அழுகையும் அங்கு வழிந்துகொண்டிருந்தது. என் மகன் இப்படியான கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவான் என்று அந்த முதிர்ந்த தாயுள்ளம் கடைசி நிமிடம் வரை கற்பனையோ அல்லது கதையோ கூட கேட்டதில்லை. அந்த முதிர்ந்த மனது வெடித்து அழுகிறது, அழுதது மாமியார்தான் என்று அறிந்தும் கூட மருமகளின் கண்களும் சத்தமாக அழுதது இரண்டு அழுகையோடு மகளும் சேர்ந்தாள் அப்போதுதான் அந்த வீட்டில் ஏதோ நடந்திருக்கிறது என்று அந்த வீட்டின் பூச்சிகளுக்கும் தோட்டத்தின் செடிகளுக்கும் புரியத்தொடங்கியது, அப்பொழுது கூட அவரின் அறையில் ஒரு மாற்றமும் இல்லை அனைத்தும் இருந்தது இருந்த படியே இருந்தது. அக்கம் பக்கம் செய்தி அறிந்து பலர் விசாரணைக்கு வந்துவிட்டனர், என்ன சொல்வதென்றெ தெரியாமல் தவித்தனர். அந்த தவிப்பு கணவர் காணவில்லை என்ற துக்கத்தைத் தோற்கடித்தது.
காவல்துறை வழக்கறிஞரின் கருப்பு அங்கியையும் மாமாவின் வசதியும் கண்டு எவ்வளவு விரைவாக தேடுதல் பணியைத் தொடங்கியது என்பதைக் கண்ட மகன் வியந்தான். சட்டம் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது.
அவர் பணியிலிருந்தும் சமூகத்தின் உயர்ந்த சுயநல போக்கிலிருந்தும் ஓய்வு பெற்று, மீதமுள்ள வாழ்நாளையாவது வாழ வேண்டும் என்று பல வழிகளில் முயன்றவர். எல்லாப் பாதைகளிலும் சற்று தொலைவிலேயே, அதிலும் சுவையற்ற சுயங்கள் மட்டுமே வேர்களாக இருப்பதையும் அறிந்தார். ஆனாலும் மீத வாழ்வை வாழ்ந்தே ஆக வேண்டும் ( வாழ்வு என்பது அகத்தின் ஆழத்தில் எதுவுமற்று மகிழ்ச்சியிலோ அல்லது துன்பத்திலோ தன்னை முழுமையாக எதற்கும் பங்கு கொடுக்காமல் ஈடுபடுத்திக்கொள்வது ) என்ற எண்ணம் மட்டும் அவரிடமிருந்து அகலவேயில்லை. ஏதோ சில தினங்களோ மாதங்களோ இப்படி குழப்பத்திலேயே சென்றது. ஒரு நாள் மாலையில் நண்பருடன் பேசிக்கொள்கையில் ஏதோ ஒரு நூலினைப் பற்றி அவர் பேசுகையில் அதை படிக்கத்தோன்றுகிறது. அதுவரை அவருக்குத் தனது அறையில் பழைய, அவசரத்தில் புரட்டிய, பரிசாகவோ நன்கொடையாகவோ வந்து கவர் கூட பிரிக்காத நுல்கள் நிறைய உள்ளன என்ற சிந்தனை அவருக்குத் தோன்றவே இல்லை. பிறகு அந்த சிறு நூல் அவர் அடைத்து வைத்திருந்த அத்தனை ஜன்னல்களையும் திறந்தது அவர் அறியாமலேயே அவர் வாழ்வதற்கான வழியில் பயணிக்கத் தொடங்கினார். அவரின் நூல் வாசிப்பு என்பது கிளைகளைப்போலவும் வேர்களைப் போலவும் படர்ந்து கொண்டே இருந்தன. இலக்கிய நண்பர்களும் விரிந்துகொண்டே இருந்தனர்.
அது நண்பகலுக்கும் மாலைக்கும் இடைப்பட்ட நேரம், வீட்டில் மிகுந்த துயரம் அடைத்துக்கொண்டே இருந்தது, ஒரு நாளை அவர் இல்லாமல் அந்த குடும்பம் கடக்கப் போகிறது. இறந்திருந்தால் கூட அந்த உயிரற்ற உடலை அனணத்தபடி அழுதாலாவது ஆறுதல் கிடைக்கும், என்ன நடந்தது என்பதே தெரியாமல் நமது இருப்புகள் இல்லாமல் போவது எவ்வளவு கொடுமையானது, அந்த கொடுமையில் அவர்கள் முழுமையாக நனைந்துகொண்டுடிருந்தனர். அப்போதுதான் தகவல் எட்டி அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர் பதறியபடி வீட்டிற்குள் நுழைகிறார். காவல் துறையால் இதுவரை அவர் பணியாற்றிய இடம் மற்றும் ஒரு சில நண்பரின் மூலமாக அவர் நன்னடத்தை உடையவர் என்பது மட்டுமே கண்டறிய முடிந்தது.
நண்பரை கண்டவுடன் அங்குள் அப்பாவை காணவில்லை என்று கத்தி அழுதுவிடுகிறாள் மகள். அந்த குரல் இதுவரை இருந்த துயத்திற்கு மீண்டும் வேர்பிடிக்கச் செய்தது. அவருள்ளும் தாங்க இயலா தவிப்பு இருக்கிறது. நேற்று மாலை கூட இருவரும் இலக்கியம் பற்றி ஆழ்ந்த உரையாடலில் வெகுநேரம் செலவழித்தனர். இரண்டு நேர் எண்ணம் கொண்ட நபர்கள் ஒன்றிணைந்தால் காலம் நிச்சயமாகத் தோற்றுதான் போகும் எதிரில் இருப்பவருக்குப் பால் வேறுபாடு பொருந்தாது எண்ணம் மட்டுமே பொருந்தும், இவர்கள் பொருந்திய பார்வையும் மனமும் கொண்டவர்கள். வாழ்வின் இன்பங்கள் வாசிப்பிலும் படைப்பிலும் உள்ளதை சுவைத்தவர்கள், இவர்களை ஆன்மீகம் கூட தற்போது வெல்ல முடியாது அப்படியான ஒரு வெளிச்சத்தை அவர்கள் அடைந்திருந்தனர். அத்தகு சூழலில் இந்நிகழ்வு நண்பரை ரனமாக்கியது. கண்ணீரைத் துப்ப நினைக்கும் கண்களுக்கு ஒப்புதல் வழங்க முடியாமல் குழைந்து வளைகிறார். வாசிப்பில் பனையானவர் நேசிப்பில் நாணலாகிறார். துக்கம் குமட்டலாகிறது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு குடும்பத்திற்கும் ஆறுதல் கூறுகிறார். அவரது அடி மனதில் ஒரு தீபம் எரிந்துகொண்டே இருந்தது. அதற்குப் பெயர் நம்பிக்கை என்று கூட அவரால் சொல்ல முடியவில்லை. தன் நண்பன் இருந்த அந்த அறையை நோக்கி துயருடன் மெல்ல தவழ்கிறார்.
அறையில் ஆடைகள், படுக்கை என இருந்தாலும் நிறைய நூல்கள் இருந்தன. அங்குள்ள நூல்களை கவனிக்கிறார். அவற்றில் பெரும்பான்மையான நூல்களைப் பற்றி அவர்கள் ஏற்கனவே நிறையப் பேசியிருந்தனர். அறையில் இருந்தவற்றை ஒவ்வொன்றாக அவர் கவனிக்கிறார். எல்லாமும் அவரிடம் ஏதோ ஒரு நினைவுகளைத் திரும்பக் கொடுத்துவிட்டுச் சென்றது. சுவரில் மாட்டியிருந்த நேற்று அணிந்திருந்த அந்த சட்டையினைப் பார்த்தவுடன் முடியாமல் சத்தமாகவே அழுதுவிடுகிறார். சத்தம் குறைந்து கனத்த காரிருள் மௌன அழுகை வர எவ்வளவு நேரமானதென்றே தெறியவில்லை. முகங்கள் எல்லாம் கண்ணீரால் பலமுறை அபிஸேகம் நடந்திருந்தது. ஏறக்குறைய அவர் தன் நினைவுகளை இழந்து மயக்க நிலைக்குச் சென்றுகொண்டிருந்தார். இதுவரை தகவல் ஏதும் கிடைக்காத குடும்பம் அமாவாசையின் முன்னிரவு தீயிட்டு களவாடப்பட்ட தேனீக்களாய் சிதறிக்கிடந்தது.
தனது நண்பனின் உறுதியான மன நிலைப்பாட்டினை நன்கு உணர்ந்திருந்தாலும், அவநம்பிக்கை காலூன்றினால் எல்லாம் மாறிவிடுகிறதே என்று தனக்குள்ளாகவே பேசி கண்ணீரில் நனைந்துகொண்டிருக்கிறார். அப்போது நண்பனின் மேசை மீது இருந்த ஒரு புத்தகம் படபடப்பதை கண்டு ஏனோ? திரும்புகிறார். கவனம் நூலில் நிற்கிறது. அந்த நூல் அவரை அழைத்ததாக உணருகிறார். அருகில் சென்று அந்த நூலினைப் பார்க்கிறார். தனது மனைவி மீது பேரன்பு கொண்டிருந்தாலும் சற்று அழகான பெண்ணைப் பார்க்கும் பொழுது ஒருகனம் மனம் கலைந்து கூடுவதைப்போலவே, பிறர் பையிலோ அல்லது மேசையிலோ உள்ள நூலினைப் பார்க்கும் போதும் மனம் அதை அவ்வாறுதான் உணருகிறது. இவரும் மனிதன் என்பதால் அவ்வாறே.
நூலின் பெயரை வாசிக்கையில் விரல்கள் அடுத்தபக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த பக்கங்களை விரல்கள் புரட்டும் போது ஏற்கனவே அறிந்த மணம் ஒன்று வீசுவதாக உணர்ந்தார். அது நூல் வாசிப்பைக் கடந்த ஒன்றாக இருந்தது. பக்கம் பத்தினைத் தொடும் பொழுது புத்தகத்தில் காலின் நகங்களை அவர் உணருகிறார். பயமும் மிரட்சியும் அடுத்தடுத்த பக்கங்கங்களுக்கு அவரை துரத்துகிறது. ஒவ்வொரு பக்கமும் நகங்கள் வளர்ந்து கால்கள் முளைக்கிறது. அக்கால்கள் அவருக்குப் பயத்தை ஏற்படுத்தவில்லை, அறிந்த ஒன்றாகவே இருக்க அவர் அந்த புத்தகத்ததை வெகு வேகமாகத் தோண்டுகிறார். ஒவ்வொரு பக்கங்களிலும் அவர் உடல் வளர்ந்துகொண்டே உள்ளதை அவரால் உணர முடிகிறது. அரை உடலை அவர் தொடும்பொழுது அவருள் புதைத்து வைத்திருந்த துக்க விதைகள் துளிர் விட்டு மகிழ்ச்சியாய் பரிணமிக்கிறது. சட்டையின் வாசம் துயரம் தந்தது, நூலில் அவர் கண்டெடுத்தது நேற்று அவர் உடுத்தியிருந்த வேட்டி, ஆனந்தனம் கைகொள்ளவில்லை, நூலின் பக்கங்கள் பறந்தன. தனது வீட்டினர் யாராலும் கண்டுபிடிக்க முடியாத தனது நண்பனைத் தான் கண்டறிந்த செறுக்கினை இலக்கியம் வழங்கிய கொடை என நினைவுகள் வேறுதிசையை நோக்கினாலும் விரல்களும் நாவும் மிக வேகமாக தன் நண்பனின் இதயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க ஓடிக்கொண்டிருந்தது. புத்தகத்தின் ஒரு பக்கத்தில் கனத்த சிரிப்பொலி கேட்டது, பிறகு அது கேட்டது நண்பா என்னைக் கண்டறிய இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா? நான் எங்கே செல்வேன், இங்குதான் இருக்கிறேன் என்றார் அவர், மிக விரைவில் நூலி்ன் கடைசிப்பக்கத்தில் முழுமையாக தனது நண்பனை நூலிலிருந்து மீட்டுவிட்டு, தான் அதே நூலில் மறைந்து போனார்.
நெஞ்சை நெகிழ வைக்கும்
அருமையான படைப்பு.
வாழ்த்துக்கள் ஐயா.
Nice sir
வாழ்த்துக்கள் நண்பா…
Superrr sir
சிறப்பு
மிக அருமையான பதிவு வாழ்த்துகள் மச்சான் எனக்கு மிகவும் பிடித்தது
அருமை அருமை அருமை தோழர்
கதையை வாசிக்க வாசிக்க நானே கதைக்குள் காணாமல் போனது போன்ற உணர்வு. இந்தக் கதையில் உங்களுக்குள் இருக்கும் கவிஞனை முழுமையாக காட்டுகிறது.
இது கதையா கதைவிதையா என்று பிரித்தறிய முடியவில்லை.
ஒவ்வொரு வரியும் கண்ணுக்குள் காட்சியாக நிற்கிறது.
கடைசி பத்தியை வசிக்கும் முன்னர் கதையின் முடிவு தெரிந்தாலும் வாசிப்பின் வேகத்தை குறைக்க முடியவில்லை.
இப்போதைய இளைஞர்கள் பாணியில் சொல்வதானால்
“வேற லெவல் தல”
நிச்சயம் முதல் பரிசு கிடைக்க வேண்டும். வாழ்த்துகள் தோழர்.
Super sir
Super
Hai sir
Congratulations boomi
வாழ்த்துகள் பூமி..
கதையின் நடை சிறப்பு..
உவமைகளும் சிறப்பு..
இன்னும் கொஞ்சம் மெய்ப்புத் திருத்தம் பார்த்திருக்கலாம்..
சில இடங்களில் மட்டும் வருணனை வலிந்து வந்ததாக எனக்குப்படுகிறது..
வாசிப்பில் பனை
நேசிப்பில் நாணல்
துக்க விதை
போன்ற தொடர்கள் சிறப்பு..
மேலும் உங்கள் இலக்கியப் பணி தொடர என் வாழ்த்துகள்..
அருமையான கதை
அருமையான கதை
வாழ்த்துக்கள் ஜயா. கதை அருமையாக இருக்கிறது
வாழ்த்துக்கள்…
மிக சிறந்த கதை
அருமையான கதை ஐயா
அருமை பூமி
மிகச் சிறந்த சிறுகதை
மிக நன்று