16 Jun 2023 10:30 amFeatured
கடந்த 2021-ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 97-வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டிய 15 மாதங்களிலேயே மருத்துமனை கட்டிமுடிக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை ஜூன் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
240 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மருத்துவமனையானது ஆயிரம் படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைந்துள்ளது. தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 3 கட்டடங்களை கொண்ட 52,428 ச.மீ. பரப்பளவுடன் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிறுநீரகவியல், இருதயவில், நரம்பியல், மயக்கவியல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட துறைகள் செயல்படவுள்ளன.
249 ரெகுலர் மற்றும் 508 அவுட்சோர்சிங் எனப்படும் ஒப்பந்த அடிப்படை என மொத்தம் 757 பணியாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். மருந்தாளுநர்கள், செவிலியர்கள், உளவியல் நிபுணர்கள் இந்த மருத்துவமனையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். 60 செவிலியர்கள், 30 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த மருத்துவமனையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொள்வார் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், குடியரசுத் தலைவரின் தமிழ்நாடு வருகை திடீரென ரத்தானது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மருத்துவ பணியாளர்களும் இணைந்து மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மருத்துவமனையின் மையத்தில் வைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சிறப்புகள் :
6 தளங்கள்: 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ.,பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 'ஏ' பிளாக் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் நிர்வாக கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கும். 'பி' பிளாக் ரூ.78 கோடியில் 18,725 சதுர மீட்டர் பரப்பளவில் அறுவை சிகிச்சை பிரிவு இயங்கும். 'சி' பிளாக் 15,968 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.74 கோடியில் கதிரியக்க நோய்க்கான பிரிவு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
23 துறைகள்: இந்த மருத்துவமனையில் சிறுநீரகவியல் , இருதயவியல் , கதிரியக்கவியல் , நரம்பியல் , நுண்ணுயிரியல் , மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை, அவரச சிகிச்சை, பல்வேறு ஆய்வகம் என்று மொத்தம் 20 உயர் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், ரத்தநாளம், புற்றுநோய், ரத்த மாற்று தொடர்பான உயர் சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் வழங்கப்படவுள்ளன.
பணியாளர்கள்: கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இணைப் பேராசிரியர்கள் 30 பேர், உதவிப் பேராசிரியர்கள் 100 பேர் என்று ஆக மொத்தம் 130 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு தனியாக ஓர் இயக்குநர், இரண்டு உதவி நிலைய மருத்துவர் நியமிக்கப்பட உள்ளனர். இதைத் தவிர்த்து மருத்துவமனை நிர்வாகத்தை மேற்கொள்ள புதியதாக 757 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.