20 Jun 2022 9:50 amFeatured
பொறியியல் சேருவதற்கான விண்ணப்பப்பதிவும் இன்று துவக்கம்
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
இன்று (ஜூன்20), காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்த நிமிடமே மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
அதேபோன்று, நண்பகல் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கீழ்கண்ட இணைய தளங்கள் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம்.
http://www.tnresults.nic.in
http://www.dge1.tn.nic.in
http://www.dge2.tn.nic.in
https://www.dge.tn.gov.in
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்:
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று (20ந் தேதி ) முதல் துவங்குகிறது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்திலான 12 ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் துவங்க உள்ளது.
மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், 110 மையங்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும். இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண்(ரேண்டம் எண்) ஜூலை 22 ந் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.
விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20ம் தேதி முதல் ஜூலை 31 ந் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும்
மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8 ந் தேதி வெளியிடப்படும். அதில் குறைகள் இருந்தால் களைவதற்கு ஆகஸ்ட் 9 ந் தேதி முதல் 14 ந் தேதி வரையில் தொடர்பு கொண்டு பூர்த்தி செய்யலாம்.
கலந்தாய்வு விபரம்: மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 16 முதல் 18 ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
பொதுக் கலந்தாய்வு:
பொதுக்கல்வி , தொழில்முறைக் கல்வி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கும் ஆகஸ்ட் 22 ந் தேதி முதல் அக்டோபர் 14 ந் தேதி வரை நடைபெறும்.
இதையடுத்து துணைக் கலந்தாய்வு அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் நடைபெறும். அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 17,18 ந் தேதிகளில் நடைபெறும்.
மேலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த சந்தேகங்களுக்கு
0462-2912081, 82, 83, 84 & 85,
044-22351014,044-22351015
என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.