27 Aug 2023 9:21 pmFeatured
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வரான பின் முதன்முறையாக மும்பை வருகிறார் அதுகுறித்து மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் மற்றும் மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கருவூர் இரா பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை பின்வருமாறு:
திராவிட முன்னேற்றக்கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட இயக்கச் சிந்தனையார்களின் எழுச்சிமிகு தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மராத்திய மாநிலம் மும்பைக்கு மேற்கொள்ளும் முதல் அரசியல் பயணமாக வருகிற 31 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மும்பை சர்வதேச விமான நிலையம் (சாஹர் முனையம் 2)
(Mumbai Airport Terminal 2, formerly known as Sahar International Airport) வந்தடைகிறார்.
31-08-2023 மற்றும் 01-09-2023 ஆகிய இரண்டு நாட்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய அரசின் சீர்கெட்ட ஆட்சிமுறையிலிருந்து நாட்டைக் காக்கவும்; இனம், மதம், மொழிப் பாகுபாடற்ற மனிதநேயம் நிறைந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும், ஒத்த கருத்துகளையுடைய இருபத்தியாறு (26) அரசியல் கட்சிகளை இணைத்து உருவான இந்தியா (INDIA) என்ற அனைத்திந்திய எதிர்கட்சிக் கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரியவுள்ளார் என்ற தகவலைப் பகிர்வதில் மகிழ்கின்றோம்.
அவ்வேளையில், நமது இயக்கத்தின் தலைவரை; 'திராவிட மாடலெனும்' சொலவடையோடு ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை; மும்பை விமான நிலையத்தில் நிர்வாகிகள், துணை மற்றும் கிளை அமைப்புகளின் நிர்வாகிகள், கழகத் தோழமைகள், மும்பைவாழ் தமிழ்மக்கள் புடைசூழ கலந்து கொண்டு வரவேற்று நமது மகிழ்வையும் பேராதரவையும் தெரிவிக்கும்படி மும்பை புறநகர் மற்றும் மாநகர திராவிட முன்னேற்றக் கழகங்களின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி!
அலிசேக் மீரான்,
செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம் - மும்பை புறநகர்
கருவூர் பழனிச்சாமி,
பொறுப்பாளர், திராவிட முன்னேற்றக் கழகம் மும்பை மாநகர்