03 Oct 2019 7:04 pmFeatured

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லையென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வழக்கில், மறுவாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டுமென அ.தி.மு.க சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறித்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்பொழுது அ.தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர் நீதிமன்ற நிராகரித்ததோடு இராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தடையில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016 மே மாதம் 16 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள், மே 19ஆம் தேதி, எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மொத்தம் 21 சுற்றுகளாக நடத்தப்பட்ட நிலையில் 18 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட்டதாகவும் கடைசி 3 சுற்றுகள் சரிவர எண்ணப்படவில்லை எனவும் தி.மு.க.வேட்பாளர் அப்பாவு நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடைசி சுற்றுகளில் பதிவான வாக்குகளையும் தபால் வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் இன்பதுரை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டியலில் வரும்போது விசாரணைக்கு எடுக்கப்படும் எனக்கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37