19 Apr 2022 11:16 pmFeatured
மகாராஷ்டிரா வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு வரும் மே 3-ம் தேதிக்குள் அனுமதி பெறாவிடில் அகற்றப்படும்’ என்று அரசு தெரிவித்துள்ளது.
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகள் குறித்து வரும் மே 3-ம் தேதிக்குள் மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்றும் அல்லது ஒலிபெருக்கிக்கு எதிராக மசூதிகளுக்கு வெளியில் ஹனுமான் சாலிசா பாடல்களைப் பாடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அன்றே மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சித் தொண்டர்கள் மும்பையில் மசூதிகளுக்கு வெளியில் ஹனுமான் பாடல்களைப் பாடி, கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்குக் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன், மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. மே 3-ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. ராஜ் தாக்கரே சொன்ன அதே தேதியை அரசும் கெடுவாக விதித்திருக்கிறது. எனவே அனுமதி பெறாத ஒலிபெருக்கிகளை மே 3-ம் தேதிக்குப் பிறகு அகற்றிவிடுவோம் என்று அரசு எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே நாசிக்கில் போலீஸ் கமிஷனர் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் உடனே ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதோடு நாசிக் போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே வெளியிட்டுள்ள உத்தரவில்
ஹனுமான் சாலிசா, பஜனை பாடுவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும்,
மசூதிகளின் பாங்கோசைக்கு முன்பும் பின்பும் 15 நிமிடங்களுக்கு பஜனை ஒலித்திட அனுமதியில்லை
மசூதியிலிருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படாது
என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் 3,000 சமூக வலைதளப் பதிவுகள் கண்டறியப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன. அதோடு ராம நவமியை ஒட்டி மத வன்முறையில் ஈடுபட்டதாக 61 பேரை மும்பை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
மத வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் தலைதூக்கவிடாமல் கட்டுப்படுத்த மாநில போலீஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்