14 Feb 2021 3:26 pmFeatured
கவிதை
-வே.சதானந்தன்
முதியோரில்லம் விட்ட அன்னையை தந்தையை
தேடிச்சென்று அவர்தம் முகம் மலர
தேவையொரு நாள் அவர்க்கு
பெற்றோர் தினம்
எந்நாளும் எம்முடனே
கூழானாலும் கூடி குடித்து மகிழும்
கூட்டுக் குடும்பமே
எம்வாழ்வு
காப்பகமே கதியாய் ஆண்டு முழுவதும்
அன்புகிட்டா தன்அபலை குழந்தைகளை
கொஞ்சிட அவர்தம் வாழ்வில் தேவை
ஓர் குழந்தைகள் தினம்
இரைதேட பறந்தாலும் அணைக்குள் வைத்தே
இமையாய் காப்பேன் இணைந்தே இருப்போம்
கந்தையாய் நானிருந்தாலும் கசக்கியேயுனக்கு
நான் தருவேன் அன்பேயென்பது எம்வாழ்வு
நாளெல்லாம் அடக்கியே அடக்கியே
அடிமையாக்கிட்ட அணங்கினை
அமைதிப்படுத்த தேவை அவருக்கோர்
மகளிர் தினம்
காதலோ காமமோ கஷ்டமோ நஷ்டமோ
இணைந்தே இருப்போம் வாழ் நாளெல்லாம்.
முன்னெவர் தம் வாழ்வைத் துறந்தாலும்
வாழ்வோம் அவர் நினைவாகவே
இதுவே எம் வாழ்நெறி
இருப்பவனோ(ளோ)டு
விட்டுச் சென்றவனை(ளை)யும்
இனி வரவிருப்பவனை(ளை)யும்
வாழ்த்திடும் மேலைநாட்டு நன்நாளாம்!?
இருப்பவனோ(ளோ)டு மட்டும்
இந்நாள் போல் என்னாளும்
இணைந்தே இருக்க வேண்டிடும்
எம் திருநாளாம் இந்நாள்.
வேண்டுமோ எமக்கு இந்நாளும்?
எமக்கோ எந்நாளும் நன்னாளே!
என்னாளும் திருநாளே!!