03 Feb 2023 11:43 amFeatured
-கவிஞர் இரா. சண்முகம்
பரணம்பேடு.
காஞ்சியில் பிறந்த
தமிழகத்தின் மன்னர்
இலட்சக் கணக்கில்
பின் தொடர்ந்த தம்பிகளுக்கு
என்றென்றும் அண்ணா.
திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கி
திறம்படவே நடத்தியவர்
தேசிய ஆதிக்கத்திலிருந்து
மாநில உரிமைகளை மீட்டவர்
இன்றுவரை மாநில ஆதிக்கம் தொடர
ஏற்ற வழிவகைகள் செய்தவர்.
சென்னை மாகாணத்தை
செந்தமிழ் நாடாக்கிய
முத்தமிழின் வித்தகர்
மூத்த தமிழின் தனி முதல்வர்.
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மூலம்
ஏழைகளின் சிரிப்பினில்
இறைவனைக் கண்டவர்
திராவிட பூமியின் தன்னிகரில்லா
தனிப் பெரும் தமிழகத்தின்
தானைத் தலைவர்.
எதிரியையும் அரவணைத்து
அவையின் கண்ணியம் காத்தவர்
கடமை கண்ணியம்
கட்டுப்பாட்டை வகுத்து
கட்சியினைக்
கட்டுக்குள் வைத்தவர்.
ஆங்கில இலக்கியத்தில்
ஈடில்லாப் புலமையினால்
அகிலம் அனைத்தையும்
தன்பால் ஈர்த்தவர்.
செந்தமிழ் வாவியிலே
மலர்ந்த தாமரையெனினும்
மாற்றான் தோட்டத்து
மல்லிகையையும் மதித்தவர்.
புற்று நோய் என்னும்
கொடிய பெரும் பூதம்
பற்றியதோர் உடும்பாகி
செம்மையாய் ஆக்ரமிக்க
மண்ணுலகப் பற்றருந்து
வங்கக் கடலோரம்
மீளாத் துயில் கொண்டவர்.
இவர் பூவுடல் மறைந்தாலும்
தமிழர் தம் இதயங்களில்
என்றென்றும் மறையாமல்
தனித்துவமாய் வாழ்பவர்.
வாழ்க தமிழ். ஓங்குக அண்ணாவின் புகழ்