31 Jul 2022 5:24 pmFeatured
மும்பையில் நகரத்தார் சமுதாயம் சார்பில் BNSCA என்னும் சமுதாயப் பண்பாட்டுக் கழகம் செயல்பட்டு வருகிறது.
மும்பை முலுண்ட் பகுதியில் அமைந்துள்ள இவ்வமைப்பின் விடுதி சிறப்பாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
தற்போது இந்த அமைப்பு மும்பை மாநகரில் சமுதாயத்தின் அடிநிலையில் வாழக்கூடிய மக்களுக்கும் தம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வி நல உதவி திட்டத்தை தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக அருகில் உள்ள இரண்டு அரசு மானியம் பெறும் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து சமீபத்தில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கியது.
முதல் நிகழ்வு யஷ்வந்த் சந்த்ஜி சாவந்த் வித்யா மந்திர் மற்றும் ஜூனியர் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இதில் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு அரங்கில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
புத்தகங்களைப் பெறும் மாணவர்களும் சில ஆசிரியர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வை ஆசிரியர் திரு. மன்ச்கர் அவர்கள் நடத்திக் கொடுத்து சங்கத்தினருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அடுத்து துல்சேட்பாடா MNP மராட்டி செகண்டரி பள்ளி, பாண்டுப்-ல் இரண்டாவது உதவி வழங்கும் நிகழ்ச்சி 10.30 மணிக்கு தொடங்கியது.
BNSCA சங்கத்துடன் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியர் நாகேஷ் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் சரஸ்வதி வந்தனம் மற்றும் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் BNSCA பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பையும் அவர் தொகுத்து வழங்கினார். இது போன்ற ஒரு நிகழ்வு அந்தப் பள்ளியில் நடப்பது இதுவே முதல் முறை என்று நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டது சங்கத்தினர் எடுத்துக் கொண்ட இந்த முயற்சியின் பலனை உணர்த்தியது.
இந்தப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டுக்களும்,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டுக்களுடன் அனைத்து பாடங்களுக்குமான விளக்க உரைப் புத்தகமும் (guide) கொடுக்கப்பட்டது.
ஆசிரியர் நாகேஷ் தனது நன்றியுரையில் கொடை வழங்குபவர்களுக்கு அந்தச் செயல் மிகச் சிறியதாகத் தெரியலாம் ஆனால் இங்கு படிக்கின்ற இந்த மாணவர்களுக்கு இது பெறற்கறிய உதவி என்று கூறியது அனைவரையும் நெகிழச் செய்தது.
இரண்டு பள்ளிகளிலுமே சங்கத்தின் கல்வி உதவி திட்டக் குழுவின் சார்பாக ஒருங்கிணைப்பினைச் செய்தவர் திரு. AN. சேவுகன் செட்டி அவர்களும் அவரது துணைவியார் திருமதி சிவகாமி அவர்களும் ஆவர்.
மேலும் சங்கத்தைச் சேர்ந்த மராட்டி மொழி அறிந்த திருமதி உஷா ரவிச்சந்திரன் அவர்கள் பள்ளி ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு பேருதவி செய்தார்.
இந்த இரு பள்ளிகளிலும் கல்வி உதவி அளிக்கும் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவரான திரு R. மணிகண்டன் அவர்கள் மாணவர்களும் ஆசிரியர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக மராட்டி மொழியிலேயே சிறு உரை நிகழ்த்தியது முத்தாய்ப்பாக அமைந்தது.
பள்ளி நிகழ்ச்சிகளில் சங்கம் சார்பாய் திரு. V. பழனியப்பன், திரு M. சூடாமணி, திருமதி மீனா விஜய் மற்றும் திருமதி மீனாள் மணிகண்டன் போன்றோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றி இது போன்ற வேறு பல நிகழ்ச்சிகளையும் எதிர்காலத்தில் நடத்துவதற்கு ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது என அமைப்பின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரபல எழுத்தாளர் சேதுராமன் சாத்தப்பன் நெகிழ்வுடன் தெரிவித்தார்.