21 Jun 2021 12:18 amFeatured

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 133 சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெற்றி மகுடம் சூடியது தி.மு.க. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், 16 ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
முதல்வராக பதவியேற்றுக் கொண்டதும் தலைமை செயலகம் வந்த மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கான 5 முக்கிய திட்டங்கள் குறித்து அறிவித்தார். அதன்படி, கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு தலா 4 ஆயிரம், பெண்களுக்கு அரசு மாநகர பஸ்களில் இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 குறைப்பு உள்ளிட்ட 5 அறிவிப்புகளை வெளியிட்டார். இது தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக மே 11ம் தேதியும், சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதற்காக மே 12ம் தேதியும் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
வழக்கமாக புதிய அரசு பதவியேற்றதும், கவர்னர் உரை, அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டம், மானிய கோரிக்கை நிறைவேற்றுதல் உள்ளிட்டவைகளுக்காக சட்டப்பேரவை கூடுவது வழக்கம்.
ஆனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இருந்ததால், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றதும் தங்கள் தொகுதிகளுக்கு சென்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வரும் கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி மாலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசித்தார்.
அதன்படி 21ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட உள்ளதால், அன்றைய தினம் கவர்னர் உரையாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை தமிழக கவர்னரும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் வாலாஜா சாலை கலைவாணர் அரங்கத்தில் உள்ள 3வது தளத்தில் நடைபெறவிருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் இருப்பதால் விசாலமான கலைவாணர் அரங்கத்தின் 3வது மாடியில் உள்ள அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்தப்படுகிறது.
சட்டமன்றம் காலை 10 மணிக்கு தொடங்கும். முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் மு.அப்பாவு, சட்டபேரவை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் சட்டமன்ற மரபுப்படி பேரவைக்குள் அழைத்து வருவார்கள்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் நிகழ்த்தும் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். அதன் பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
நடைபெறும் நாட்களின் அடிப்படையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும், அனைத்து கட்சி உறுப்பினர்களும் உரையாற்றியபின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரையின் மீது தனது கருத்தை பதிவு செய்வார். இறுதியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நிறைவடையும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற 40 நாட்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதனால், இந்த கூட்டத்தொடரில் மேலும் பல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம் இது என்பதால் தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது






Users Today : 17
Total Users : 111028
Views Today : 18
Total views : 439391
Who's Online : 0
Your IP Address : 216.73.216.215