11 Nov 2019 9:15 pmFeatured

288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. -105, சிவசேனா-56, தேசியவாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றி பெற்றன.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் 50:50 ஃபார்முலாவை ஏற்க பா.ஜ.க.வு மறுத்ததால் பா.ஜ.க.வுக்கும், சிவசேனாவுக்கும் புதிய அரசு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதற்கிடையே, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து அளித்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டதோடு, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
சட்டசபை தேர்தலில் அதிக (105) இடங்களை வென்ற கட்சி பா.ஜ.க. என்பதால் ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். மேலும், சட்டசபையில் நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டில் 'மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை’ என தெரிவித்தார்.
இந்நிலையில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற இரண்டாவது கட்சி (56 இடங்கள்) என்ற முறையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவின் விருப்பத்தை அறியவும் அக்கட்சிக்கு உள்ள பிற எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தெரிந்துக் கொள்வதற்காகவும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்து, கூட்டணி தொடர்பாக சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டார்.
பின்பு சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே தலைமையிலான தலைவர்கள், அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆதித்ய தாக்கரே, ஆட்சி அமைக்க விரும்புவதாகவும், அதனால் ஆட்சி அமைக்க 48 மணி நேரம் அவகாசம் வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டோம். ஆனால் அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார் என்று கூறினார். இருப்பினும் ஆளுநர் ஆட்சியமைக்கும் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. எனவே மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவித்தார்.
காங்கிரசின் டெஸ்ட் மேட்ச் ஆட்டம்
இதனிடையே காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை என்றும், ஆதரவளிப்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளது.
20:20 மேட்ச் ஆடவேண்டிய சூழ்நிலையில் காங்கிரஸ் தனது வழக்கமான ”டெஸ்ட் மேட்ச் ஆட்டத்தை” ஆடி ஆதரவு கடிதம் கொடுக்காமல் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருவதாக கூறியுள்ளதால் வழங்கப்பட்ட 24 மணிநேர அவகாசத்தில் ஆளுநர் வேண்டியபடி சிவசேனா ஆதரவு கடிதத்தை சமர்பிக்க தவறியது.
இந்நிலையில் மூன்றாவது பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை ஆளுநர் அழைத்துள்ளார்.
அஜித்பவார் உள்ளிட்ட தேசியவாத காங்கிரசை சார்ந்த தலைவர்கள் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளனர்.






Users Today : 22
Total Users : 106603
Views Today : 26
Total views : 434351
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1