17 Jan 2020 7:04 amEditorial
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி' என்ற சிறப்புப் பெற்ற தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் இன்றும் பெருமை சேர்க்கும் தமிழன்னை தந்த அருந்தவப்புதல்வன் ஐயன் வள்ளுவன்.
அச்சிட அச்சகமில்லை, பேப்பர் இல்லை, பேனா இல்லை, மையுமில்லை- ஓர் ஆணி கொண்டே ஓலையில் எழுதி உலகுக்கு தந்திட்டான் தரணிப்போற்றும் திருக்குறளை
ஆண்டி முதல் அரசன் வரை அன்று இன்று மட்டுமல்ல என்றும் வாழ வழிகாட்டும் முப்பாலை முதன்மை மொழியாம் அருந்தமிழில் அள்ளி வழங்கிட்ட ஐயன் வள்ளுவனின் வளமான வாழ்க்கை நூல் திருக்குறள்.
அந்நூலை ஒருமுறையேனும் முழுமையாக வாசித்து அதன் வழி வாழ்ந்திட்டவன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வான், வான்உறையும் தெய்வத்துள்ளும் வைக்கப் படுவான். தமிழன் வாழுமிடமெல்லாம் தமிழ் வாழும், தமிழ் வாழுமிடமெல்லாம் வள்ளுவனும் வாழ்வான். ஆம் ஐயன் வள்ளுவன் சிலையாகவும், சாலையாகவும், மன்றங்களாகவும் மும்பையில் மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார்.
ஐயன் வள்ளுவர் சிலைகள்
நவி மும்பை தமிழ்ச் சங்கம்:
நவி மும்பை தமிழ்ச் சங்கம்:
வாஷி பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள நவி மும்பை தமிழ்ச்சங்க கட்டிடத்தில் ஓர் அரங்கம் திருவள்ளுவர் பெயரைத் தாங்கி நிற்கிறது, அந்த அரங்கின் முன்புள்ள சாலைக்கு திருவள்ளுவர் மார்க் (சாலை) என வாஷியின் முதல் மாநகரத் தந்தையாக ஸ்ரீசஜ்சீவ் நாயக் இருந்த போது பெயரிடப்பட்டது
திருவள்ளுவர் அரங்கத்தின் முன்பு திருவள்ளுவர் சிலை ஒன்று நிறுவினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் தோன்ற தமிழ்ச் சங்க நிர்வாகிகள் இராஜகோபால், மகாதேவன் ஆகியோர் செயல்படுத்த எண்ணி விஜிபி உலக தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர்.வி.ஜி.பி.சந்தோஷம் அவர்களால் மயிலாடி சிற்பி நல்லக்கண்ணு மூலம் 6 1/2 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
நவி மும்பைத் தமிழ்ச் சங்கமும், சென்னை வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நவிமும்பை தமிழ்ச் சங்க வளாகத்தில் 2008 ஜூன் 21, 22 தேதிகளில் திருவள்ளுவர் பற்றி கருத்தரங்கம் நடைபெற்றது அப்பொழுது திருவள்ளுவரின் கற்சிலை நிறுவப்பட்டு, 22.06.2008 அன்று காலை 10 மணிக்கு திருவள்ளுவர் சிலையை டாக்டர் சந்தோஷம் திறந்து வைத்தார். திருவள்ளுவர் சாலைக்கு அப்பெயரைச் சூட்டிய நவிமும்பை முதல் மாநகரத்தந்தை ஸ்ரீசஜ்சீவ் நாயக் முன்னிலைவகித்தார்.
சிலை மட்டும் வைத்ததோடு நிற்காமல் ஓவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தன்று சிறப்பான நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது மும்பையின் பல்வேறு தமிழார்வலர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டு ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் சிறப்பு செய்கிறார்கள்
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி
நவி மும்பை தமிழ்ச்சங்கம் ஆண்டுதோரும் மும்பை தமிழ் மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தி வருகிறது.
பம்பாய் திருவள்ளுவர் மன்றம்:
பம்பாய் திருவள்ளுவர் மன்றம் என்ற அமைப்பு மறைந்த தேவதாசன் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. அவரது மகன் ஜேம்ஸ்தேவதாசன் அவர்களும் தொடர்ந்து நடத்திவருகிறார். பிரைட் மேல்நிலைப் பள்ளியும் சிறப்பாக நடந்து வருகிறது. ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்திடவேண்டும் அதை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை கொண்டு திறக்கவேண்டும் என்பது தேவதாசன் அவர்களின் நெடுநாள் கனவு ஆகும். நிறைவேறாமல் இருந்துவந்த அவரது எண்ணத்தை அவர் வாழும் காலத்திலேயே நிறைவேற்றி வைக்கும் எண்ணம் கொண்ட அவரது மகன் ஜேம்ஸ் தேவதாசனின் சீறிய முயற்சியால் மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக மன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு சிலை திறப்பு விழாவும் மன்ற நிறுவனர் மற்றும் செயலாளர் வி. தேவதாசனின் 89 ஆவது பிறந்த நாள் விழாவும் 2017, செப்டம்பர் 2 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அன்றைய தி. மு. க. செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் இவ்விழாவில் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து விழா பேருரை நிகழ்த்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று இங்கு பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது, சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது பல்வேறு அமைப்பினரும்,மும்பை தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு ஐயனுக்கு சிறப்பு செய்கின்றனர்.
அண்மையில் காலமான தேவதாசன் அவர்கள் பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பாக தமிழகத்திலிருந்து தமிழ் அறிஞர்கள், இலக்கியவாதிகளை அழைத்து வந்து பல கூட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது அடிச்சுவடினையொட்டி அவரது மகனும் செயல்பட்டு சிறப்பு சேர்த்துவருகிறார்
முலுண்டில் பொது இடத்தில் வள்ளுவர் சிலை
மும்பை தமிழ் தொழில் வர்த்தக சபை, நேஷனல் எஜூகேசன் சொசைட்டி மற்றும் சரஸ்வதி வித்யா பவன் குழுமங்களின் நிறுவன தலைவர் ஆர்.வரதராஜன் மும்பையில் முதல் முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து. இதற்காக 11 அடி கொண்ட திருவள்ளுவரின் முழு உருவச்சிலை கன்னியாகுமரியில் உருவாக்கப்பட்டு மும்பை கொண்டு வரப்பட்டு, முல்லுண்டு கிழக்கு மகாடா காலனியில் உள்ள கிழக்கு விரைவு சாலையில் நிறுவப்பட்டது.
திருவள்ளுவரின் இந்த சிலை ஓலைச்சுவடியை கையில் ஏந்தி நிமிர்ந்து நின்று கம்பீரமாக காட்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதே இடத்தில் முல்லுண்டு எம்.எல்.ஏ. சர்தார் தாராசிங் ஏற்பாட்டில் புத்தர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளுவர், புத்தர் சிலைகளின் திறப்பு விழா 2008ல் நடந்தது. விழாவுக்கு எம்.எல்.ஏ. சர்தார் தாராசிங், கிரித் சோமையா எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர். கவுரவ அழைப்பாளராக மாநில வீட்டுவசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா கலந்துகொண்டார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையையும், புத்தர் சிலையையும் திறந்து வைத்து பேசினார்.
மன்றங்களாய் ஐயன்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்
மறைந்த பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் தலைவராக இருந்து நடத்தி வந்ததும் தற்போது முனைவர் வதிலை பிரதாபன் தலைவராக இருந்து நடத்தி வரும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் குறள் நெறி காப்போம்! பகுத்தறிவு!! போற்றுவோம் என்ற கொள்கை முழக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
திருவள்ளுவர் மணமக்கள் அரங்கம்
குறள் வழி வாழ்ந்து மறைந்த சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் திருவள்ளுவர் மணமக்கள் அரங்கம் என்ற அமைப்பினை நடத்தி அதன் மூலம் பல திருமணங்களை சிறப்பாக நடத்திவைத்தவர் ஆவார்
மும்பை திருவள்ளுவர் சவுக்.
மனித உரிமை இயக்க அமைப்பாளர் சங்கர் திராவிட், அவர்களின் சீரிய முயற்சியால் பல தடைகளை தாண்டி பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் வசிக்கும் மும்பை வில்லேபார்லே-ஜுகுவின் முக்கிய பகுதியில் திருவள்ளுவர் சவுக் (சதுக்கம்) அமைக்கப்பட்டுள்ளது
திருவள்ளுவர் பவுண்டேஷன்
திருவள்ளுவர் பவுண்டேஷன் என்ற அமைப்பு கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையினை வழங்கி வருவதோடு வருடந்தோரும் திருமணத்திற்கு வரன் அறிமுகப்படுத்தும் நிகழ்வினையும் நடத்தி வருகிறது.
அமைப்புகள்
உல்லாஸ்நகரில் திருவள்ளுவர் நற்பணி மன்றம் செயல்பட்டு வருகிறது. மும்பையில் திருவள்ளுவர் பெயரால் மன்றங்களும், குடியிருப்பு சொசைட்டிகளும் இயங்கி வருகின்றது.
நன்று.வளர்க .தொடர்க…