07 Apr 2020 10:04 pmFeatured
-சதாசிவம் பிரபாகர்
முற்றிற்று என்றவுடன்…
எங்கும் நிசப்தம்
என்றோ,
தூக்கிலிட்ட என் கவிதை
மீண்டும் உயிர்த்தது…
அறுபடுமுன் சேவலிடும்
கடைசி சத்தத்துடன்.
மறுபடியும், மறுபடியும்,
“ஏன் என்னைக் கைவிட்டீரென்று”
பிள்ளைகள் கூச்சலின்றி
உறங்க நினைத்த கிழவி,
மிரட்சியோடு தவித்திருக்கிறாள்
”ஏதாவது ஒரு பந்து,
என் ஜன்னல் உடைக்காதாவென்று!”
வாசல் கதவினருகில்
எவரும் இன்றி,
குரைக்க மறந்து
புரண்டு தூங்கியது
ஆள் விரட்டும் என் நாய்.
எவருக்கும்
இனி நான்
தேவையில்லை என்பதுபோல்.
பேசுவதற்கு ஒன்றுமில்லை …
இப்பொழுதெல்லாம்,
என் தொலைபேசி கூட,
ஒலிப்பதில்லை.
வாசல் வரை வந்த நண்பன் சொன்னான்
”மறக்காமல் வீட்டில் போய் குளிக்க வேண்டும்”.
கடைசியாய்
என்னோடு சிரித்தவன் யார்?
பந்தியில்
என்னருகில் அமர்ந்ததிருந்தது யார்?
எப்படி
ஒரே நாளில் நான்
பிசாசாய் மாறிப்போனேன்.
இனி,
எனக்கான அப்பங்களை
யார் கொள்வார்?
என் கவிதையின்
சவக்குழி கற்கள்
நகர்ந்தன.
என்றோ தூக்கிலிட்ட
என் கவிதை மீண்டும் உயிர்த்தது…
ஆனால்
இம்முறை எமக்கான
இரங்கலுக்காக…