11 Feb 2022 12:37 amFeatured
தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-22
படைப்பாளர் - நந்தினி மோகனமுருகன், திருச்செங்கோடு
"ஐயோ! அம்மா என்னால வலி தாங்க முடியலையே!" என்று அமுதா பிரசவ அறையில் கதறிக் கொண்டிருந்தாள்.
அவளின் கதறலைக் கண்ட மோகன், "கொஞ்சம் பொறுத்துக்கோ அமுதா நாம இத்தனை நாள் இதுக்காகத் தானே காத்துக்கொண்டு இருந்தோம்" என்று அவள் கைகளைப் பற்றி ஆறுதல் கூறினான்.
மோகனின் வார்த்தை சிறிது ஆறுதல் தந்தாலும், இடுப்பு வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது யாரோ முதுகெலும்பை பிடித்து அழுத்தி நொறுக்குவது போன்ற ஒரு வலி! தாங்க முடியாமல் "கடவுளே என்னைக் காப்பாத்து" என்று கத்தினாள்.வலியால் துடி துடிக்கும் மனைவியைக் கண்டு செய்வதறியாது தவித்து கொண்டிருந்தான் மோகன்.
மோகனுக்கும் அமுதாவிற்கும் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது.
இத்தனை வருடங்களாக குழந்தைப்பேறு இல்லாமல் பலரின் கேலிப்பேச்சுகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி இருந்தார்கள். இன்று அந்த ஏளன பேச்சுகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒரு உயிர் வெளியேவர போராடிக்கொண்டிருக்கிறது அமுதாவின் கருப்பையில்.
உடல் முழுவதும் குண்டூசியை வைத்துக் குத்துவது போன்ற ஒரு உணர்வு. உலையில் கொதிக்கும் நீரை போன்று உடல் முழுவதும் கொதித்துக் கொண்டிருந்தது.
சிறிது சிறிதாய் வலியும் அதிகமாக தன் வயிற்றில் கைவைத்து, "உனக்காக பொறுத்துக் கொள்கிறேண்டா தங்கம்" என்று கூறி பல்லைக் கடித்துக் கொண்டு வலியைத் தாங்கினாள்.
வலிகளோடு கடந்த கால நினைவுகளால் பின்னோக்கி சென்றாள். கல்யாணமாகி இரண்டு ஆண்டுகள் கணவன் வெளியூரிலும் அமுதா மாமியார் வீட்டிலும் பிரிந்து வாழும் சூழ்நிலை. இதனை அறிந்தும் அறியாத உறவினர்களோ "கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆகுது இன்னும் எந்த ஒரு நல்ல செய்தியையும் காணோமே! ஏதாவது பிரச்சினையாக இருக்கப் போது எதுக்கும் நல்ல டாக்டரா போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுங்க" என்று அறிவுரை கூறினர்.
இதனைக் காதில் வாங்கிக் கொள்ளாத அமுதா கணவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள். மூன்று வருடம் கடந்த நிலையில் இருவரும் சந்தோஷமாக வாழ தொடங்கினர் இருப்பினும் ஏனோ அமுதாவின் வயிற்றில் கரு உருவாகவில்லை.போகாத மருத்துவமனை இல்லை, பார்க்காத சிகிச்சை இல்லை, வேண்டாத கடவுளும் இல்லை. ஆனால் எந்த பயனும் இல்லை.
விசேஷங்களுக்கு சென்றால் மலடி என்றும், இவளைப் பார்த்தால் இவளது கெட்ட நேரம் நமக்கும் ஒட்டிக்கொள்ளும் என்றும் புறம் பேசினார்கள்.அத்தனையையும் பொறுத்துக் கொண்டு நம்பிக்கையுடன் காத்திருந்தாள் அதற்காக கிடைத்த பலனே இப்பொழுது பிறக்கப்போகும் குழந்தை.
இந்த நினைவுகள் அனைத்தும் நிழற்படமாக அமுதாவின் கண்முன்னே தோன்றிட மீண்டும் பெரு வலியால் துடித்து எழுந்து கதறி நிகழ்காலத்திற்கு வந்தாள்.
வயிற்றுப் பகுதி இருக்கம் கொள்ள, இடுப்பு எலும்புகள் எல்லாம் விரிவடைய உடம்பில் உள்ள அத்தனை எலும்புகளையும் சுத்தியால் அடித்து உடைப்பது போன்ற ஒரு வலி ஏற்பட உதட்டை பற்களால் கடினமாய் கடித்தாள். அதனால் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.அமுதாவின் பிறப்புறுப்பில் இருந்து குருதி வழியத் தொடங்கியது. மருத்துவர் அனைவரையும் வெளியே இருக்கம்படி கூறினார்.
வெளியே பதட்டமாக இருக்கும் தன் மகனுக்கு, "கவலைப்படாத மோகன் அமுதாவிற்கு ஒன்னும்
ஆகாது " என்று ஆறுதல் கூறினாள் அமுதாவின் மாமியார் வேணி.
கர்ப்பப்பையின் வாயும் போதுமான அளவு விரிந்து இருந்த நிலையில், குழந்தை வெளியே வருவதற்கான எந்த தடயமும் இல்லை. அமுதாவும் வலியால் சோர்ந்து போய் மயக்க நிலைக்கு செல்ல தொடங்கினாள்.
அமுதாவின் உயிரை காப்பாற்ற வேண்டுமென்ற நிலையை கருத்தில் கொண்டு செவிலியர் ஒருவர் அவள் வயிற்றில் கையை வைத்து முடிந்த அளவு தன் பலத்தையெல்லாம் கூட்டி அமுக்கினாள். மேலும் வலி அதிகமாக அமுதாவோ 'அம்மா' என்று அந்தக் கட்டிடமே அதிரும்படி கத்தினாள்.
குருதியை பீறிட்டுக்கொண்டு வெளியே வந்தது குழந்தை. குழந்தையை எடுத்து அம்மாவின் வயிற்றின் மேல் போட்டார் மருத்துவர். அரை மயக்கத்தில் அந்த உணர்வை ஆனந்தமாக உணர்ந்தாள் அமுதா. வெளியில் வந்த குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை, அழுகவும் இல்லை.
சந்தேகமடைந்த மருத்துவர், ஒருவேளை குழந்தை இறந்து பிறந்து இருக்குமோ என அஞ்சினார். அவசர அவசரமாக குழந்தையை எடுத்து அவசர சிகிச்சை கொடுக்க தொடங்கினார். தலைகீழாகத் தொங்கவிட்டு முதுகைத் தட்டினார் எந்தப் பயனும் இல்லை.
மயக்க கலக்கத்தில் இருந்த அமுதாவிற்கு மருத்துவர்கள் பேசுவது நன்றாக கேட்டது. இவ்வளவு நாள் நாம் கஷ்டப்பட்டு போராடி குழந்தையை பெற்றதற்கு எந்த பயனும் இல்லாமல் போய்விட்டதே என மனம் நொந்து வருந்தினாள்.
"இவ மலடி டா! இவ வேண்டாம் இவள அறுத்துவிட்டுறு உனக்கு நான் வேற கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்" என்ற புகுந்து வீட்டு வசைப்பாடல்களும் "இவளுக்கு பேய் பிடிச்சிருக்குண்ணு நினைக்கிறேன் அதான் வயித்தில ஒரு உயிர் கூட தங்கல!" என்ற சுற்றத்தார் வார்த்தைகளும் "குழந்தை இல்லாத இவள் நலுங்கு வெச்சா உன் வாழ்க்கை நல்லா இருக்காது!" போன்ற உணவினர் பேச்சுகளும் அமுதாவின் காதில் திரும்ப திருப்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
"கடவுளே! இவ்வளவு நாள் குழந்தைபேறு பாக்கியத்தை எனக்கு தராமல் எனக்கு தண்டனை தந்த! இப்போ அந்த பாக்கியம் கிடைச்சும் அந்த குழந்தையை என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறியே இது உனக்கே நல்லா இருக்கா" என்று கதறி அழுதாள்.
மருத்துவரும் செவிலியரும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்தனர். குழந்தையின் தோல் நிறமும் 'நீல' வண்ணமாக மாறத்தொடங்கியது.
அப்பிஞ்சுக்குழந்தையைக் கண்ட அமுதாவின் மனமோ ஏங்கித் தவித்தது! அணைத்து முத்தமிட உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. பத்து மாத காலம் தன் வயிற்றில் சுமந்த சிசு அல்லவா, ஒவ்வொரு மாத மகப்பேற்றையும் அணுஅணுவாய் ரசித்தவள் அத்தனைக்கும் பயன் இல்லை என்றால் எப்படி இருக்கும்.
இதயம் துடித்து வெடித்துவிடும் போலிருந்தது. சற்று முன் அனுபவித்த பிரசவ வலியை விட இப்பொழுது தான் அனுபவிக்கும் வலியையே மிகக் கொடுமையாக உணர்ந்தாள்.
மருத்துவரோ குழந்தையின் வாயைத் திறந்து மூச்சுக் காற்றை செலுத்தி உயிர்ப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர். கற்பனையிலேயே குழந்தை பெற்று, கனவுலகில் வாழ்ந்து கொண்டிருந்த அமுதாவிற்கு இவை அனைத்தும் பொய்யாகி விடுமோ என்று தோன்ற உயிரையே விடத் துணிந்தாள்.
அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின், குழந்தை அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பின் தான் அமுதாவிற்கு உயிரே வந்தது போலிருந்தது. மருத்துவர்கள் குழந்தையை அமுதாவிடம் கொடுக்க அள்ளி அணைத்து முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினாள். அமுதாவின் கண்களிலோ அவளை அறியாமலேயே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குழந்தையை தொட்ட அடுத்த நொடி, மார்பில் பால் ஊறத் தொடங்கியது! ஆனந்தமாய் அதனை குழந்தைக்கு பருகக் கொடுத்தாள்.
அறையின் உள்ளே வந்த மோகன், வேணி மற்றும் உறவினர் அனைவரும் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர்.
"ரொம்ப கஷ்டப்பட்டுடீயா ரொம்ப வலிச்சுதா!" என்று ஆறுதலாய் கேள்வி கேட்க எவரும் அங்கில்லை.
ஒவ்வொரு பெண்ணிற்கும் பிரசவம் என்பது கண்டிப்பாக மறுஜென்மம் தான். அனைத்து அம்மாக்களுக்கும் தன் பிள்ளைகளின் பிறந்த நாள் அவர்களுக்கும் பிறந்த நாள்தான் ஆம் அவர்கள் மறுஜென்மம் எடுத்த நாள், மறுமுறை பிறந்தநாள்!!
பெண்மையை போற்றுவோம்! தாய்மையை மதிப்போம்
உண்மை தான் என் வாழ்க்கையிலும் நடந்தது என் மனைவி கஷ்டப்படுத்த படுவதை நான் நேரில் பார்த்தேன் உங்கள் கதை படித்தேன் என்னுடைய பழைய ஞாபகம் வந்து போனது ரொம்ப நன்றி அம்மா